<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Monday, November 28, 2005

தமிழக வெள்ள நிவாரணம்: AID India தகவல்கள்

AID India - வாஷிங்டன் அருகே மேரிலாந்தில் பனிரெண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட தொண்டு நிறுவனம்

பாலாஜி சம்பத் - இந்தியாவில் இந்த அமைப்பிற்காக/இந்த அமைப்பின் மூலம் தொண்டாற்றுபவர். தமிழ்நாடு அறிவியல் கழகம் சார்பாகவும் உழைப்பவர். சுனாமி, காஷ்மீர் நில அதிர்வு இரண்டின் நிவாரணங்களிலும் பெரும் பணி ஆற்றியவர்.



தமிழகத்தின் வெள்ள நிவாரண நடவடிக்கைகளிலும் சமீபத்தில் ஈடுபடத் துவங்கி இருக்கிறார். இது குறித்த இவரது ஆரம்ப அறிக்கை இங்கே உள்ளது.

இந்த அறிக்கையின் கடைசிப் பக்கத்திலிருந்து:

How you can help:

1. Blankets, Saris and Children’s Clothes.
2. Money
3. Medicines (sorted and not expired)
4. Volunteers - Doctors and People willing to wade in a lot of water
5. Food - rice, grains, dal, etc

To help, please contact:

1. AID INDIA Office: 044-28350403, 044-42106493
2. Balaji Sampath: 94440-61033
3. Ravishankar: 94440-84910
4. Prabha: 98403-51132

இந்தியாவிலிருந்து வாசிப்பவர்கள் இயன்ற வரை உதவுங்கள். நன்றி.

Sunday, November 27, 2005

"பிராமணர் vs. பிராமணரல்லாதார்" - எப்படி?

"சில நேரங்களில் கருத்து சொல்லும் போது விளக்குமாறு, செருப்பு ஆகியவற்றை விட மோசமான அளவுக்கு கருத்து சொல்லப்பட்டிருக்கிறது. தமிழனுக்கு கொம்பு முளைத்திருக்கிறதா? என்று கேட்பது செருப்பை விட, விளக்குமாற்றை விட மோசமான கருத்தல்லவா? இந்த விவகாரத்தில் தலையிட நான் விரும்பவில்லை. தற்போது இதில் பெரிய மனிதர்கள் ஈடுபடுவது வேடிக்கையாக உள்ளது. இது எங்கு போய் முடியும் என்றால் மீண்டும் பிராமணர் - பிராமணரல்லாதோர் என்ற இயக்கத்தை வளர்க்க எங்களுக்கு பயன்படும்." - கருணாநிதி

"...சம்பந்தமேயில்லாமல் இதில் பிராமணர் - பிராமணரல்லாதோர் பிரச்னையை கொண்டு வருவது..." - மாயவரத்தான்

"இதில் பிராமணர்- பிராமணரல்லாதோர் எங்கு வந்தது." - ரவி ஸ்ரீனிவாஸ்

மாயவரத்தான், ரவி, உங்கள் பதிவுகளும், கருணாநிதி சொன்னதும் என்னை இந்தச் சம்பந்தத்தை எப்படிக் கொண்டு வர முடியும் என்று யோசிக்க வைத்தது.

இப்படிக் கொண்டு வர முடியும்:

கருணாநிதிக்கு ஆதி காலம் தொட்டே இருக்கும் ஒரு axiomatic நம்பிக்கை ஒன்று உண்டு. அது வேதங்களும், புராண, இதிகாசங்களும் மக்களுக்கு தனிமனித ஒழுக்கக்குறைவை போதிக்கின்றன என்பது. அவரது 'வாழ முடியாதவர்கள்' என்ற ஒரு சிறுகதையைப் படியுங்கள், புரியும். அதற்கு நேர் எதிராக, பண்டை தமிழ் இலக்கியங்கள், நீதிநூல்கள் ஆகியவை தனிமனித ஒழுக்க போதனைகளின் சிகரங்கள் என்ற அதே போன்ற நம்பிக்கையும் உண்டு.

இந்த குஷ்பு-சுகாசினி விஷயத்தை ஒரு தனிமனித ஒழுக்க விவாதமாக மாற்றுவது, சரியில்லை என்றாலும், சுலபம்.

ஆக,

குஷ்பு கருத்து, சுஹாசினி ஆதரவு = தனிமனித ஒழுக்கக் குறைவு
வேதங்கள், புராணங்கள் = தனிமனித ஒழுக்கக் குறைவு
வேதங்கள், புராணங்கள் = பிராமணத்துவம் = பிராமணர்
தனிமனித ஒழுக்கக் குறைவு = பிராமணர்

கற்பு = தனிமனித ஒழுக்கம்
தமிழ் இலக்கியங்கள் = தனி மனித ஒழுக்கம்
தமிழ் இலக்கியங்கள் = பிராமணரல்லாதார்.
தனிமனித ஒழுக்கம் = பிராமணரல்லாதார்

ergo,

குஷ்பு கருத்து, சுஹாசினி ஆதரவு vs. கற்பு
=
பிராமணர் vs. பிராமணரல்லாதார்.

இந்த நாலுகால் தர்க்கப் பாய்ச்சல்களுக்குத் தமிழர்களைத் தயார்ப்படுத்தவே, இந்த கருத்து வெள்ளோட்டத்தை விட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

Wednesday, November 23, 2005

கறுப்பு வெள்ளி

"அப்பா அப்பா, கடைக்குப் போறியா?"
"ஆமாங்கண்ணு, உனக்கு என்ன வேணும் சொல்லு!"

[மேற்காணும் வரிகளை நீங்கள் ராகத்தோடு படித்திருந்தால், உங்களுக்கு வயதாகி விட்டதென்று அர்த்தம்]

நாளை இந்த ஊரில் நன்றி அறிவித்தல் தினம். லட்சக்கணக்கான வான்கோழிகள் வானுலகம் அனுப்பப்படும். நான் லீவு விட்ட கம்பெனிக்கு நன்றி சொல்லி விட்டு வீட்டில் உட்கார்ந்து ஃபுட்பால் பார்க்கும் தினம்.

சுவாரசியமான நாள் நாளை மறு நாள் - வெள்ளிக்கிழமை. அன்று தான் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் விரல் மேல் விரல் போட்டுக் கொண்டு (seriously, I don't think I will ever get over this Sujatha habit), கிறிஸ்துமஸ் விற்பனைகளுக்குப் போணி போடுவார்கள். ஏதோ ஒரு கிறுக்குத்தனமான காரணத்துக்காக இதை அபசகுனமாக கறுப்பு வெள்ளி என்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் இந்த நாளில் தான் அமெரிக்காவின் கடைகளில் மிக அதிகமாக விற்பனைகளாகின்றன. காரணம், சகட்டுமேனிக்கு வழங்கப்படும் தள்ளுபடிகள். ஒரு நாள் மட்டும், சில மணி நேரம் மட்டும், முதல் நூறு பேருக்கு மட்டும் என்று மட்டுப்படுத்தப்பட்டாலும், இவற்றிற்காக கடைகளில் அதிகாலை சுபவேளையில் அலைமோதும் கூட்டங்கள் அமெரிக்க நுகர்வோர் கலாசாரத்தின் முழுப் பிரதிபலிப்பாக இருக்கும்.


இதற்காக மிகத்தீவிரமாக திட்டமிட்டு வழித்தடங்கள், வரைபடங்கள், பட்டியல்கள், புள்ளி விவரங்களோடு வந்து சேரும் மக்களைப் பார்த்தால் கொஞ்சம் பீதியாகக் கூட இருக்கும். இன்னொரு விஷயம் - எந்த வகையில் கலாசாரங்கள் கலந்துருகுகின்றனவோ இல்லையோ இந்த வகையில் எல்லோரும் ஓரினம், எல்லோரும் ஓர் நிறம், எல்லோரும் இந்நாட்டு மக்கள். எனக்குத் தெரிந்த ஒரு நண்பரின் (இந்தியர்) மனைவி இந்த விற்பனை நாளுக்கு முதல் நாளிரவு தன்னால் தூங்கவே முடியவில்லை என்று சொன்னது கவலையுடனா, பெருமையுடனா என்று எனக்குப் விளங்கவில்லை.

கடைகளும் இந்த கலாசாரத்திற்குத் தன்னால் இயன்ற வரை தூபம் போடுகின்றன. டார்கெட் கடைகள் வெள்ளியன்று காலை ஆறு மணிக்குத் தாழ் திறக்கின்றன. அதற்கு உங்களைத் தொலைபேசி அழைப்போடு படுக்கையிலிருந்து எழுப்ப பிரபலங்களின் குரல்கள் காத்திருக்கின்றன. எல்லா நிறுவனங்களும் கொஞ்சமேனும் தள்ளுபடி கொடுக்கும். சாதாரணமாக பத்து ரூபாய் சமாசாரத்தை நூறு ரூபாய்க்கு விற்கும் ஆப்பிள் நிறுவனம் கூட மனமிறங்கி தொண்ணூறு ரூபாய்க்கு விற்பார்கள்.

இந்த வருட விற்பனைகளிலிருந்து சில உதாரணங்கள்:

1. Kodak 5MP Digital camera (3x optical zoom) - $130 (Best Buy)
2. Panasonic camcorder - $250 (Best Buy)
3. Toshiba Progressive Scan DVD Player - $30 (Best buy) (இதை நான் ஆறு மாதங்களுக்கு முன் 80 டாலருக்கு வாங்கினேன் :-( )
4. 12 cup coffee maker - $4.25 (Walmart)
5. Panasonic 2.4GHz Cordless Phone with 2 Handsets - $50 (Costco)
6. Men's, Women's, Kids' Insulated Ski Gloves - Free (Dicks' sporting goods)

இது போல் நூற்றுக் கணக்கில் உள்ளன, இந்த வலைத்தளத்தில்.

இதை நீங்கள் இந்தியாவிலிருந்து படிக்கிறீர்களென்றால், டிசம்பரில் விடுமுறைக்கு வரும் அமெரிக்க உறவினர்களிடம் 'உங்கள் ஊரில் நாளைக்குப் பெரிய Sale-ஆமே' என்று விசாரித்துப் பாருங்கள்.

என் கடன் பணி செய்து கிடப்பதே.

Tuesday, November 22, 2005

மெல்லத் திறக்குமா கதவு?


கடந்த சில நாட்களில் வாஷிங்டனில், அமெரிக்கா ஈராக்கிலிருந்து வெளியேறுவதற்கு முகூர்த்த நாள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் மர்த்தா என்ற எதிர்கட்சி காங்கிரஸ் உறுப்பினர். பல வருடங்கள் அமெரிக்கப் படைகளில் பணியாற்றி, வியட்நாம் போர்க்களம் கண்டவர்; இப்பொழுது வயதானவர் என்றாலும் போர் என்று வந்தால், ஏன், எதற்கு, எங்கே போன்ற அநாவசியக் கேள்விகளெல்லாம் கேட்காமல் சங்கு ஊதி, முரசு கொட்டுபவர். இந்த ஊர் பெரிய பழுவேட்டரையர்.

ஈராக் போருக்கு தீவிர, தொடர்ந்த ஆதரவளித்த சில எதிர்கட்சி உறுப்பினர்களில் ஒருவர்.


இவர் சென்ற வெள்ளியன்று திடுதிப்பென்று அமெரிக்கா உடனடியாக ஈராக்கிலிருந்து வெளியேற வேண்டும் என்று பேசியிருக்கிறார். ஈராக்கில் அமெரிக்க இருப்பு எந்த ஒரு பயனையும் தராது, வெறுமனே தீவிரவாதிகளுக்குத் தீனி போட மட்டுமே பயன்படுகிறது என்றிருக்கிறார். அமெரிக்கா வெளியேறினால் ஈராக் என்ன கதியாகும் என்பது பற்றி மட்டும் மூச்.

எதிர்பார்த்தது போலவே, இதைச் சிலர் ஆதரித்திருக்கிறார்கள். மிகப் பலர் (ஹில்லரி உட்பட) எதிர்த்திருக்கிறார்கள். வாய் மெல்லுவதற்கு கொஞ்ச நாட்களுக்கு இது பயன்படும்.

என்னைக் கேட்டால், அமெரிக்கா இப்பொழுது வெளியேறக் கூடாது. ஈராக் படைகளும் சட்ட ஒழுங்கு அமைப்புகளும் ஓரளவேனும் சுதாரித்துக் கொண்ட பிறகே வெளியேற வேண்டும்.

அமெரிக்கா ஈராக் மீது பொய்யான காரணங்களுக்காகப் படையெடுத்து வென்றது என்பது தெளிவு. அந்த சமயம் அவர்களுக்குத் தேவைப்பட்டது ஓங்கி அடிக்க ஒரு நாடு - சதாம் மாட்டினான், போட்டுத் தாக்கினார்கள். ஆனால் அப்படிச் செய்ய பேரழிவு ஆயுதங்கள், அல்கைதா தொடர்பு என்றெல்லாம் பூச்சாண்டி காட்டினார்கள். அரபு ஜனநாயகம், அமைதிப் பூங்கா என்றெல்லாம் ஆசை காட்டினார்கள். இப்பொழுது அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஓடுவது என்பது பொய்க் காரணங்களுக்காகப் போர்த் தொடுத்ததை விட அநியாயமாக இருக்கும். சென்ற வருடத் தேர்தலில் கெர்ரி வென்றிருந்தால் அமெரிக்க அரசாங்கத்தின் உறுதி எத்தகையதாக இருந்திருக்கும் என்பது ஐயப்பாட்டிற்குரியது. தனது கடமைகளிலிருந்து அமெரிக்கா தப்பித்துக் கொள்ள ஒரு வழி ஏற்படுத்தியிருக்கும். அந்த ஒரு காரணத்திற்காக மட்டும் நான் புஷ் வென்றதை வரவேற்றேன்.

இப்பொழுது அமெரிக்கா உடனடியாக வெளியேறினால், ஈராக் இரண்டு அல்லது மூன்று துண்டுகளாகும், வேறொரு சர்வாதிகாரி வரக்கூடும். இதெல்லாம் நடந்து விடுமே என்பது பற்றி கூடக் கவலையில்லை. ஆனால், இப்படி நடந்து முடிவதற்குள், நாடு ரணகளமாகும். சாதாரண மக்கள் மிகவும் துயருறுவர். ஆங்கிலேயர் வெளியேறிய பின், நாடு இரண்டான போது இந்தியா பட்ட வேதனை அறிவோம். ஈராக் உள்நாட்டுக் கலவரங்கள் அவற்றை ஒன்றுமில்லாமல் செய்து விடலாம்.

அமெரிக்கப் படைகள் தொடர்ந்து ஈராக்கில் இருந்தால், இவையெல்லாம் தவிர்க்கப்படுமா என்ற கேள்விக்கு உத்தரவாதமான பதிலில்லை. இருப்பினும், அவர்கள் வெளியேறினால் என்ன கொடுமைகள் நடக்கும் என்பது உத்தரவாதமாகத் தெரிவதால், வேறு வழியில்லை. ஆங்கிலத்தில் 'attrition warfare' என்று சொல்வார்கள். போரில் இருபக்கங்களும் இழப்புகளைச் சந்தித்து வந்தாலும், எந்தப் பக்கம் பொறுமையாகவும் விடாப்பிடியாகவும் உள்ளதோ, எந்தப் பக்கத்தில் படை பலம் அதிகம் உள்ளதோ அந்தப் பக்கம் இறுதியில் வெல்லும் என்பதைக் குறிக்கும் கோட்பாடு. ஈராக்கியர் அல்லாத தீவிரவாதிகளுக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் இடையே நடக்கும் போர் இத்தகையதாக உள்ளது. அமெரிக்கப் படைகள் விடாப்பிடியாக நின்றால் கடைசியில் ஜெயிக்கும். அதுதான் ஈராக்கிற்கு நல்லது.

Wednesday, November 16, 2005

பீஷ்மரும் வீழ்ந்தார்!

வாஷிங்டனில் PlameGate என்று நாமகரணம் பெற்றிருக்கும் சி.ஐ.ஏ கசிவு விவகாரம் முடியாது தொடர்கிறது. இதில் சம்பந்தப்பட்டிருக்கும் பத்திரிக்கையாளர்கள் வரிசையில் இப்பொழுது பாப் வுட்வர்டும் சேர்ந்திருக்கிறார்.


வுட்வர்ட் அமெரிக்க பத்திரிக்கையாளர்களில் மிகவும் மதிக்கப்படும் மூத்த பிரஜை. இளைஞராக கார்ல் பெர்ன்ஸ்டைன் என்ற சகாவுடன் இணைந்து இவர் அம்பலப்படுத்திய வாட்டர்கேட் ஊழல் ஒரு ஜனாதிபதியை இறக்கி பல வருடங்களுக்கு அமெரிக்க அரசியலின் திசையை மாற்றியது. இதற்குப் பிறகு பெர்ன்ஸ்டைன் ஏறத்தாழ ஓய்வு பெற்று விட, வுட்வர்ட் விடாமல் பத்திரிக்கையாளராக செயல்பட்டு, ரேகன், புஷ், க்ளிண்டன், புஷ், ஈராக் போர் எனப் பல விஷயங்களிலும் சிறப்பாக உழைத்திருக்கிறார், எழுதியிருக்கிறார். இப்பொழுதும் தொடர்ந்து பணியாற்றுகிறார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு இவ்வளவு நாட்களாக சொல்லாத ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறார். அதாவது, வெளிப்படுத்தப்பட்ட சி.ஐ.ஏ அதிகாரியைப் பற்றி அது வெளியாவதற்கு இரு வாரங்களுக்கு முன்பே ஒரு அரசாங்க அதிகாரியிடமிருந்து தான் தெரிந்து கொண்டதாகக் கூறியிருக்கிறார். இது பற்றிய சிறப்பு விசாரணையில் இரு தினங்களுக்கு முன்பு சாட்சியும் சொல்லியிருக்கிறார்.

அந்த அரசாங்க அதிகாரி யார் என்று தான் விசாரணைக் கமிஷனிடம் சொல்லியிருப்பதாகவும், அதைப் பொதுவில் வெளியிட அந்த அதிகாரி அனுமதி மறுத்து விட்டதாகவும் சொல்கிறார்.

இந்த விஷயம் பற்றி தனது பத்திரிக்கையின் ஆசிரியர் உட்பட யாரிடமும் இது வரை சொல்லவில்லை. தனது ஆசிரியரிடம் சில வாரங்களுக்கு முன்பே பேசியிருக்கிறார். தான் கொடுத்த சாட்சியம் பற்றி வாஷிங்டன் போஸ்டில் கட்டுரை எழுதி இருக்கிறார். போஸ்டின் ஆசிரியர் வுட்வர்ட் இத்தனை நாள் மௌனமாய் இருந்தது தவறு என்று சொல்லியிருக்கிறார். வுட்வர்ட் ஒத்துக் கொண்டு மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.

இந்த விஷயத்தை மறைத்து வைத்திருந்த இவ்வளவு நாட்களில் பல முறை இந்த விவகாரம் குறித்து தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுத்திருக்கிறார். 'இது பெரிய விஷயமல்ல, பிசுபிசுத்துப் போய் விடும்' என்ற ரீதியில் பேசியிருக்கிறார்.

'என்னிடம் ரகசியம் சொன்னவரின் பெயரை வெளியிட மாட்டேன்' என்று வாட்டர்கேட் சமயத்தில் சொன்னதும், தொடர்ந்து முப்பது வருடங்களுக்கு மேல் அந்த வார்த்தையைக் காப்பாற்றியதும், கம்பீரமாகத் தெரிந்தது. ஆனால் ரகசியத்தைச் சொன்னதே குற்றமாக பாவிக்கப்பட்டு, அது விசாரணையில் இருக்கையில் சொன்னது யாரென்று வெளிப்படுத்த மாட்டேன் என்று சொல்வது கயமையாகத் தெரிகிறது. பத்திரிக்கையாளர்கள் பொது மக்களின் சேவகர்களே. பொது மக்களின் நன்மை எதனால் விளைகிறது - பெயரைச் சொல்வதனாலா, சொல்லாமலிருப்பதாலா - என்ற கேள்விக்கு விடையை எழுதப்பட்ட பத்திரிக்கை தர்மத்தில் தேட முடியாது. மனசாட்சியில் தேட வேண்டும். தனது தர்மத்தைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொண்டு இன்று கெட்டவர்கள் பக்கம் நிற்கிறார் இவர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு என்னுடைய ஆதர்ச பத்திரிக்கையாளர் யாரென்று கேட்டால், யோசிக்காமல் பாப் வுட்வர்ட் என்று சொல்லியிருப்பேன். இன்று, இந்த சி.ஐ.ஏ விவகாரத்தினால் எனது மதிப்பிலிருந்து வீழ்ந்தவர்கள் வரிசையில் இவரும் சேர்ந்திருக்கிறார்.

குறிப்பு: ஒரு விரிவான அலசலுக்கு இங்கே செல்லவும்.

என்.ராமுக்கு இலங்கை ரத்னா

இலங்கை அரசாங்கம் வழங்கியிருக்கும் உயரிய விருதான 'இலங்கை ரத்னா' விருதை ஹிந்துவின் என்.ராம் ஏற்றிருப்பது அவருக்குப் பெருமை சேர்க்கும் விஷயமாக என்னால் பார்க்க முடியவில்லை.

இரு தரப்பினருக்கு இடையே நடக்கும் உள்நாட்டுப் போரில் ஒரு பக்கத்துக்கு சார்பாகவே கருத்துக்கள் கூறி, அப்படிச் சொன்னதை அங்கீகரிக்கும் விதமாக அந்தப் பக்கத்தவர் கொடுக்கும் விருதை வாங்கிக் கொள்வது என்பது அடிப்படைப் பத்திரிக்கை தர்மங்களுக்கு முரணான விஷயம்.

இத்தகைய விருதை வாங்கிய பிறகு இலங்கை குறித்து இவர் எழுதும் வியாசங்களுக்கு எத்தகைய நம்பகத்தன்மை இருக்கும்?

மேலும், விடுதலைப்புலிகளின் சித்தாந்தங்களையும் செயல்பாடுகளையும் எதிர்க்கும் என்னாலும் தமிழர் உரிமைகள் விஷயத்தில் இலங்கை அரசின் அணுகுமுறைகளோடு உடன்பட முடியாது. தொடர்ந்து பேரினவாதம் பேசும் ஒரு குழுவின் பிரதிநிதிகளாகவே அவர்கள் இயங்குகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

"பத்திரிக்கை உலகிற்குச் செய்த சேவைக்காக" என்று தென்னாப்பிரிக்க அரசாங்கம் இருபது ஆண்டுகளுக்கு முன்பு விருது கொடுத்திருந்தால் ராம் வாங்கிக் கொண்டிருந்திருப்பாரா?

பல காரணங்களுக்காக ராம் இந்த விருதை நிராகரித்திருக்க வேண்டும்.

Tuesday, November 15, 2005

வே.வி.ப.த.க

நண்பர் தொலைபேசினார்.

"அண்ணே, நாளைக்கு காலம்பற கிளம்பறோம், வரீங்களா?".

"எப்போ திரும்பி வருவோம்?"

"நாளை நைட்டே..."

"கண்டிப்பா?"

"கண்டிப்பா"

"சரி, வீட்டுல மனு போட்டுப் பார்க்கிறேன்".

வீட்டில் மனு ஏற்றுக்கொள்ளப்பட, காலை எட்டு மணிக்குக் கிளம்பினோம். மூன்று பேர், ஒரு கார். செல்ல வேண்டிய இடம் தெரியாது. நான்கு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு ஒரு ஓட்டலைச் சென்றடைந்தோம். அங்கு சந்தித்த மற்றொரு நண்பர், எங்கே போய்ச் சேர வேண்டும் என்று கண்டுபிடித்தார். இன்னொரு கார். தோராயமாகச் சொல்லப்பட்ட வழித்தடம், GPS, மற்றும் சொந்த அறிவு ஆகிய சந்தேகோபாஸ்தமான உபகரணங்களோடு நாங்கள் சுலபமாகத் தொலைந்து போனோம். நகரத்தின் ஒரு மர்மமான மூலையில் கொஞ்சம் திகிலோடு வேறு வழியில்லாமல் இஷ்டத்துக்கு ஓட்டிக் கொண்டிருக்கையில் திடீரென செல்ல வேண்டிய இலக்கிற்கு ஒரு திசைப்பலகை கிடைத்தது. ஒரு பொக்கிஷம் போல அதைத் தொடர்ந்து, பார்த்துப் பார்த்து ஓட்டி, கடைசியாகப் போய்ச்சேர்ந்தோம்.

காலையிலிருந்து சாப்பிடாமல் கடும் பசி. சென்ற இடத்தில் எல்லோரும் சாப்பிட்டு முடித்துக் கொண்டிருந்தார்கள். மீதி இருந்தது சில சிக்கன் பீட்சாத் துண்டுகள். எங்களில் அசைவர் ஒருவர். நானும் மற்றொருவரும் வெளியில் வந்தோம். ஒரு மேசையில் சில காலை டோநட்டுகளும் ஒன்றிரண்டு பிஸ்கெட்டுகளும் இருந்தன. காஞ்ச மாடு meets கம்பங்கொல்லை. சாப்பிட்டு முடித்து எல்லோரும் வெளியே வந்தார்கள். ஐம்பது டிகிரிக் குளிர். கோட்டெல்லாம் கொண்டு வரவில்லை உட்காருவதற்கெல்லாம் வசதியாக இடமில்லையாதலால், எல்லோருடனும் வெட வெடவென்று நடுங்கியபடி நின்று கொண்டிருந்தோம்.

சூரியன் சரியச்சரிய, குளிர் கூடக்கூட, அதே மாதிரி வெளியில் இன்னமும் ஐந்து மணி நேரம் நிற்கப்போகிறோம் என்பது அப்பொழுது தெரியவில்லை. அந்த டோநட்டுகளுக்குப் பிறகு, இரவில் ஒரே ஒரு புரிட்டோ மட்டும் தான் சாப்பிடப் போகிறோம் என்பது அப்பொழுது தெரியவில்லை. எல்லோர் வேலையும் ஒரு வழியாக முடிந்து கிளம்ப இரவு பனிரெண்டரை ஆகப்போவது அப்பொழுது தெரியவில்லை. மிகுந்த களைப்போடு வண்டி ஓட்டிக் கொண்டு வீடு போய்ச்சேரப்போவது மறுநாள் காலை ஐந்து மணிக்கு என்பதும் அப்பொழுது தெரியவில்லை.

தெரிந்ததெல்லாம், அந்தக் குளிரில் நிற்க ஆரம்பித்த சில நிமிடங்களில், ஒரு எதேச்சையான விநாடியில், சிநேகமான சுபாவத்தோடு எங்களை அணுகிய அவரைச் சந்திக்க முடிந்தது என்பதுதான்.

தலைப்பு இப்பொழுது புரிந்திருக்கும். :-)

Monday, November 14, 2005

நூறு டாலர் மடிக்கணினி?

சுஜாதாவினால் எதிர்காலவியலாளர் என்று வர்ணிக்கப்பட்ட நிக்கலஸ் நெக்ரோபாண்டே எதிர்காலத்தைக் கணிப்பதோடு, கொஞ்சம் அதை உருவாக்கவும் செய்கிறார். பல நிறுவனங்களின் உதவியுடன் ஒரு நூறு டாலர் மடிக்கணினி உருவாக்கி, வளரும் நாடுகளின் மாணவர்களிடம் கொண்டு சேர்க்க முயன்று வருகிறார். பிரேசில், தாய்லாந்து போன்ற நாடுகள் ஆர்வமாய் இருக்கின்றன.

இந்தக் கணினியின் அம்சங்கள் சில:

1. இதில் இருக்கும் பேட்டரியை ஒரு கைச்சுழற்றியால் சார்ஜ் செய்ய முடியும் (படம்)
2. ஆதார மென்பொருளாக லினக்ஸ் இருக்கும் - மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் போன்ற நிறுவனங்களும் ஆர்வமாய் இருந்தாலும், திறமூல மென்பொருள் என்பதால் லினக்ஸ்.
3. இத்துடன் ஒரு வலை உலாவி, word processor


இந்தத் திட்டத்திற்கு, "ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு மடிக்கணினி" என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

Friday, November 11, 2005

குற்றம் இங்கே, தண்டனை எங்கே?

1993 பம்பாய் குண்டு வெடிப்பு உள்பட பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட அபு சலேம் போர்ச்சுகலிலிருந்து வெளியேற்றப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டிருக்கிறார். சந்தோஷம். ஆயினும், இப்படிக் கொண்டு வர இந்தியா சில ஷரத்துக்களுக்கு ஒத்துக் கொள்ள வேண்டியிருந்திருக்கிறது. அவை:

குற்றம் நிரூபணமானால்,

1. அபு சலேமுக்கு மரண தண்டனை வழங்கப்படாது
2. அதிக பட்சமாக 25 ஆண்டுகளுக்கான சிறைத் தண்டனையே வழங்கப்படும்.

இதெற்கெல்லாம் ஒத்துக்கொள்ளா விட்டால் அபு சலேமை வெளியேற்றியிருக்க முடியாது என்பதால், இந்தியா இவற்றிற்கு ஒத்துக் கொண்டதில் தவறில்லை. இதில் கண்டிக்கப்பட வேண்டியது போர்ச்சுகலும், அதன் தார்மீக மேன்மைவாதச் சிந்தனையும்தான்.

இது பற்றி நான் முன்வைப்பவை மரண தண்டனையைப் பற்றியோ, அபு சலேமின் மீது சாற்றப்பட்டிருக்கும் குற்றங்களுக்கு எத்தகைய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது பற்றியோ ஆன விவாதங்களில்லை. அவற்றை வேறொரு நாள் வைத்துக் கொள்ளலாம். இப்பொழுது நான் கேட்பது, ஒரு நாட்டிற்கு மற்றொரு நாட்டின் நீதி முறை மீது குறுக்கிட இருக்கும் உரிமைகளின் வரையறைகளைப் பற்றி.

ஐரோப்பாவில் இது ஒரு சாதாரணமான விஷயம் தான். அந்நாடுகள் இதர பிற நாடுகளோடு போட்டுக் கொண்டிருக்கும் வெளியேற்ற ஒப்பந்தங்களில் இத்தகைய நிபந்தனைகள் - குறிப்பாக மரண தண்டனை பற்றி - உண்டு. போர்ச்சுகல் அதையும் தாண்டிப் புனிதமானதாக, இத்தகைய ஒரு வரியை தனது அரசியல் சாசனத்திலேயே சேர்த்திருக்கிறது:

Article 33 Extradition, Deportation, Right to Asylum
(3) No one may be extradited for crimes which carry the death penalty under the law of the requesting State.

இது ஒரு வினோதமான கோட்பாடாக எனக்குப்படுகிறது. வெளியேற்ற ஒப்பந்தங்களின் அடிப்படைத் தேவை எனக்குப் புரிகிறது. அடிப்படை மனித சுதந்திரங்களை குற்றங்களாக பாவிக்கும் அரசாங்கங்களிடமிருந்து அவற்றின் குடிமக்களைக் காப்பது அவசியம் தான். உதாரணமாக, சைனாவிலிருந்து தப்பி வந்த Falun Gong ஆதரவாளர்கள். ஆனால், எது குற்றம் என்பதை நிர்ணயிப்பதிலிருந்து, என்ன தண்டனை என்பதை நிர்ணயிப்பதற்குச் செல்லும் போது சிக்கலாகிறது.

உதாரணமாக, கொலை செய்வது என்பது குற்றம் - அமெரிக்காவின் வர்ஜீனியாவிலும் சரி, போர்சுகலிலும் சரி. ஆனால், ஒரு அமெரிக்கர் வர்ஜீனியாவில் கொலை செய்து விட்டு போர்சுகல் சென்று விட்டால், மரணதண்டனையிலிருந்து தப்பி விடுகிறார். அமெரிக்க மண்ணில் ஒரு அமெரிக்கர் செய்த குற்றத்திற்கு அமெரிக்கா என்ன தண்டனை விதிக்கலாம் என்பதை நிர்ணயிப்பதற்கு போர்சுகலுக்கு என்ன உரிமை இருக்கிறது? முரண் நகையான விஷயம் என்னவென்றால் ஒரு போர்சுகீசியக் குடிமகன் கொலைக்குற்றத்திற்காக வர்ஜீனியாவில் பிடிபட்டால், அவரை மரணதணடனையிலிருந்து மீட்க போர்சுகலால் ஒன்றும் செய்ய முடியாது (இப்பொழுதும் கூட ஆஸ்திரேலியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையே இப்படி ஒரு விவகாரம் நடந்து கொண்டிருக்கிறது). ஆக, வெளியேற்ற ஒப்பந்தங்கள் தமது குடிமக்களைக் காப்பதை விட, வெளிநாட்டவரின் குடிமக்களைக் காப்பதில் தான் முனைப்பாக இருக்கிறது.

இப்படிச் செய்வதினால் குற்றமற்றவர்கள் காப்பாற்றப்படுகிறார்கள் என்பதெல்லாம் இல்லை. போர்ச்சுகல் போன்ற நாடுகள் 'நான் எத்தனைப் புனிதம் பார்' என்று மார்தட்டிக் கொள்ளலாம், அவ்வளவுதான்.

தண்டனைச் சட்டங்கள் ஒரு சமுதாயம் தனக்குள் ஒழுங்கும் நீதியும் நிலைநாட்ட உருவாக்கியவை. அவை மனிதநேயச் செலாவணியாக மாற்றப்படும் போது உருவாகுபவை தான் இத்தகைய குதர்க்கமான சூழ்நிலைகள்.

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயும் ஒரு வெளியேற்ற ஒப்பந்தம் இருக்கிறது. அதன்படி, இரு நாட்டிலும் குற்றங்களாக பாவிக்கப்படும் செயல்களுக்குப் போதுமான ஆதாரம் இருந்தால், ஒரு நாட்டில் பிடிபட்ட குற்றவாளி மற்ற நாட்டிற்கு வெளியேற்றப்படலாம். அதாவது இந்தியாவில் குற்றமாகக் கருதப்படுவது அமெரிக்காவில் அப்படிக் கருதப்படாவிட்டால், அதைச்சுட்டி இந்தியா ஒரு குற்றவாளியை அமெரிக்காவிலிருந்து இந்தியா கொண்டு வர முடியாது. இத்தகைய அணுகுமுறை தான் எனக்குச் சரியாகப் படுகிறது.

போர்ச்சுகீசிய அணுகுமுறையினால், பம்பாயில் நிகழ்ந்த குற்றத்திற்கு லிஸ்பனில் நீதி வரையறுக்கப்பட்டிருக்கிறது. இது தவறு; கண்டனத்துக்குரியது.

Thursday, November 10, 2005

புல்ஷிட்

"புல்ஷிட் புல்லட்!" - ஜனகராஜ், 'அபூர்வ சகோதரர்கள்'

[மேற்காணும் வசனத்துக்கும் கீழ்காணும் கட்டுரையின் சாரத்திற்கும் சம்பந்தமே இல்லையென்றாலும், பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய இந்த வசனத்திற்கு இந்த கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்]

'On bullshit'
Harry G. Frankfurt
Princeton University Press

இது ஒரு மிக, மிகச் சிறிய புத்தகம் - பெரிய கட்டுரை என்று சொல்லலாம். கையடக்க வடிவத்தில், பெரிய எழுத்துக்களில், 67 பக்கங்கள், அவ்வளவுதான். புத்தகத்தின் ஆர்வமூட்டும் தலைப்பு தவிர, இந்த சிறிய அளவும் அதன் பரபரப்பான விற்பனைக்கு காரணமாக இருக்கலாம்.


ஹாரி ஃப்ராங்க்பர்ட் ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் தத்துவ இயல் பேராசிரியர். இப்புத்தகத்தில் அவரது நோக்கம், புல்ஷிட் என்றால் என்ன, அதன் தன்மைகள் என்ன, மற்ற வகையான போலிப் பேச்சுக்களிடமிருந்து இது எப்படி வேறுபடுகிறது போன்ற விஷயங்களை ஆராய்வது. அவரது ஆராய்ச்சியின் மொத்த சாரத்தையும் நான்கைந்து வரிகளில் சொல்லி, இப்புத்தகத்தைப் படிக்க நீங்கள் எடுத்துக்கொள்ளக் கூடிய பதினைந்து நிமிடங்களை சேமிக்கும் கைங்கரியத்தைச் செய்யலாம் என்று உத்தேசம்.

"நமது அன்றாட வாழ்வில் புல்ஷிட் எங்கெங்கும் வியாபித்திருக்கிறது - இதை நாம் அறிவோம், இதில் நாமும் பங்களிக்கிறோம்" என்று சொல்லித் துவங்கும் கட்டுரை, முக்கியமாக முன்வைப்பது ஒரு பொய்யிற்கும் புல்ஷிட்டிற்கும் உள்ள வேறுபாட்டை. ஒரு பொய் சொல்பவர் உண்மை என்றால் என்ன என்பதை அறிந்து, அதற்குப் புறம்பான ஒன்றை உருவாக்கி, அதைச் சொல்கிறார். புல்ஷிட் பேசுபவருக்கோ அத்தகைய கட்டுப்பாடுகளெல்லாம் கிடையாது - உண்மை என்ன பொய் என்ன என்பதை விட எதையோ ஒன்றைச் சொல்ல வேண்டும், சொல்வது கவர்ச்சியாக, டாம்பீகமாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம். பொய் சொல்பவர் இரண்டு காரணத்திற்காகப் பொய் சொல்லலாம் - அந்தப் பொய் சொல்வதன் மூலம் ஒரு தவறான செய்தியை விதைப்பது, அல்லது அந்தப் பொய் சொல்வதன் விளைவாக வரும் ஒரு காரியத்தைச் சாதிக்க முனைவது. ஆனால், புல்ஷிட் செய்பவருக்கு இருக்கும் ஒரே நோக்கம், *தன்னைப்* பற்றி ஒரு போலியான ஒரு தோற்றத்தை, பிம்பத்தை ஏற்படுத்துவதே - அவர் சொல்வதை கேட்பவர் நம்புகிறாரா இல்லையா என்பதைப் பற்றி அவருக்குக் கவலை இல்லை.

"Telling a lie is an act with a sharp focus. It is designed to insert a particular falsehood at a specific point in a set or system of beliefs, in order to avoid the consequences of having that point occupied by the truth...On the other hand, a person who undertakes to bullshit his way through has much more freedom."

புல்ஷிட் என்றால் என்ன என்பதற்கு ஒரு உதாரணம் கொடுக்கிறார்:

"Consider a Fourth of July orator who goes on bombastically about 'our great and blessed country, whose Founding Fathers under divine guidance created a new beginning for mankind'...What he cares about is what people think of *him*. He wants them to think of him as a patriot..."

ஆக, உண்மை எது என்பது குறித்த கவலையின்மையும், தன்னைப்பற்றி ஒரு போலித்தோற்றத்தை ஏற்படுத்த முனைவதுமே புல்ஷிட்டின் ஆதார குணாதிசியங்கள் என்று சொல்கிறார்.

கட்டுரையின்/புத்தகத்தின் முடிவில் இன்றைய உலகில் புல்ஷிட் அதிகரித்திருப்பது ஏன் என்று யோசிக்கிறார். இதற்கு ஒரு முக்கியமான காரணம், இன்றைய குழப்பமான சமூகச் சூழலில் உண்மையான உண்மை என்பது ஒரு அறியப்பட முடியாத ஒன்றாகக் கருதப்படுவது என்கிறார். அதனால், புல்ஷிட் பேச முனையாத இன்றைய மனிதர்களும் கூட உண்மை என்ன என்பதை ஆராய்வதை விட்டு விட்டு, தனது மனசாட்சிக்கு விரோதமாக இல்லாமல் இருப்பதே (sincerity) போதுமான உண்மை என்று கொள்வகிறார்கள். ஆனால் மனிதருக்கு உலகைப்பற்றி உத்தரவாதமாக அறிவதை விட, தன்னைப்பற்றி அறிவது இன்னமும் கடினமாதலால், இந்த மனசாட்சிக்கு விரோதமில்லாமல் இருப்பது என்பதே புல்ஷிட்டாக இருக்கலாம் என்று சொல்லி முடிக்கிறார்.

இதுதான் மொத்தப் புத்தகமும். இந்த சாராம்சத்தைப் படித்து முடித்த உங்களிடம் இனி யாராவது இந்தப் புத்தகத்தைப் படித்தாயா என்று கேட்டால், தைரியமாகக் கதையளந்து உங்களை அறிவுஜீவியாகக் காட்டிக் கொள்ளலாம்.

Wednesday, November 09, 2005

திட்டமிடப்பட்ட வானிலை

[அமெரிக்கா கான்சாஸ் மாநிலத்தில் நேற்று நடந்த தேர்தலில், டார்வினின் பரிணாம வளர்ச்சிக்கு இணையாக 'திட்டமிடப்பட்ட வடிவம்' (Intelligent Design) என்ற திரி(ப்)பும் பள்ளிகளில் கற்றுக்கொடுக்கப்படும் என்று முடிவாகி இருக்கிறது. அமெரிக்காவில் நடப்பதெல்லாம் அமெரிக்காவோடு நின்று விட்டால் உலகம் முழுவதும் சுபிட்சமாக இருக்கும் என்பதால் அப்படி நடப்பதற்கு சாத்தியங்கள் அதிகம் இல்லை.]

திட்டமிடப்பட்ட வானிலை

நவம்பர் 8, 2005

தமிழகத்தின் அறிவியல் பாடத்திட்டத்தில் ஒரு புதிய மாறுதல் கொண்டு வரப்போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். அதன்படி, 'மழை பெய்வது எப்படி' என்ற பாடத்தில் 'திட்டமிடப்பட்ட வானிலை' என்ற புதிய பகுதியும் சேர்த்துக் கொள்ளப்படும்.

இது பற்றி அவர் கூறியதாவது:

'தமிழகத்தில் இந்த வருடம் கடும் மழை பெய்யும் என்று நான் ஆறு மாதங்களுக்கு முன்பே சொன்னேன் என்பது உங்களுக்கு நினைவிருக்கும். நான் சொன்னபடியே பெரும் மழை பெய்து கொண்டிருக்கிறது என்பதும் உங்களுக்குத் தெரியும். சோதிடமும் பஞ்சாங்கமும் சொன்னபடி பெய்திருப்பதால், மழை பெய்வதற்கு ஒரு மாற்று விளக்கமாக அவற்றைக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிடுகிறேன். கடலின் நீர் ஆவியாகி, மேகமாகி, காற்றில் மிதந்து வந்து மழை பெய்கிறது என்றெல்லாம் கருத்துக்கள் நிலவி வருவதை நான் அறிவேன். அதுவும் உண்மையாக இருக்கலாம். பஞ்சாங்கம் சொன்னபடி நடக்கிறது என்பதும் உண்மையாக இருக்கலாம். ஆதலால், இனி, இரண்டும் பாடபுத்தகங்களில் இடம் பெறும். இதனால், மாணவர்கள் முழுமையான அறிவியல் கல்வி பெறுவார்கள்.'

இதையடுத்து பாடபுத்தகங்களில் புதிதாக பக்கங்கள் சேர்க்கப்பட உள்ளன. அதில், மாணவர்களுக்குப் புரியும் வண்ணம், வருண பகவான் எந்த எந்த இடத்தில் எவ்வளவு மழை பொழிய வேண்டும் என்று திட்டமிடுவது ஒரு படமாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் இந்த முடிவு குறித்து நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளின் விவரங்கள் வருமாறு:

விகடன்:

முதல்வரின் முடிவு சரி: 25%
முதல்வரின் முடிவு தவறு: 15%
கருத்துக் கூற விரும்பவில்லை: 60%

(கருத்துக் கூற விரும்பாதவர்களிடம் ஏன் என்று கேட்ட பொழுது, "நாங்கள் 'உலகம் உருண்டையா, தட்டையா?' என்று கேட்டாலே கருத்து சொல்ல மாட்டோம், இதெல்லாம் எங்களுக்கு ஜுஜூபி" என்று கூறினர்)

தினமலர்:

முதல்வர் சொல்வதிலும் ஓரளவுக்கு நியாயம் இருக்கத்தான் செய்கிறது: 95%
கடவுள் இல்லை: 5%

கருணாநிதி கருத்து

திமுக தலைவர் கருணாநிதி, 'பெரியாரும் அண்ணாவும் இருந்த தமிழ் நாட்டில் இப்படி நடப்பது வேதனை அளிக்கிறது' என்று கூறினார். கருத்துக் கணிப்பு விவரத்தைச் சுட்டிக் காட்டியதும், 'ஏன் இதை முதலிலேயே சொல்லவில்லை?' என்று கடிந்து கொண்டார். பின்னர் அவர் 'மழை பெய்வதற்குப் பல காரணங்கள் உண்டு என்பது தமிழன் பல நாட்களாக அறிந்தது தான். இதில் புதிதாக ஒன்றும் இல்லை. அய்யன் வள்ளுவன் இதை அன்றே சொல்லி இருக்கிறான். மழை பெய்வதற்கு மேகங்கள் எல்லாம் தேவையில்லை, ஒரு நல்லார், சில பத்தினிப் பெண்கள் இருந்தால் போதும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அதையும் பாடப்புத்தகத்தில் சேர்ப்போம்' என்று சொன்னார்.

Tuesday, November 08, 2005

'நச்சென்று' இருப்பது தமிழ் முரசு இல்லை

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு தினமலர் ஆசிரியர் ஒருவர் பா.ஜ.க கட்சி மாநாட்டில் கலந்து கொண்டார் என்ற செய்தி படித்து விட்டு அந்த நாளிதழைப் புறக்கணிக்கத் துவங்கினேன். சில மாதங்களுக்கு முன்பு காவிரியில் வெள்ளம் கரை புரண்டோடுவதன் புகைப்படங்கள் தினமலரில் சிறப்பாக இருப்பதாகக் கேள்விப்பட்டு எட்டிப் பார்த்தேன். உள்ளடக்கம், சாய்மானங்கள் எதுவும் மாறவில்லை என்றாலும் புகைப்படங்கள் நன்றாகவே இருந்தன. காவிரியைத் தொடர்ந்த சென்னை வெள்ளங்கள் என்னை உட்கார வைத்தன.



இப்பொழுது, தீபாவளி துவக்கமாக, மின் நாளிதழ் (E-Paper) அறிமுகம் செய்திருக்கிறார்கள். இன்று தான் முதன் முறையாகப் பார்த்தேன். படு நேர்த்தியாக இருக்கிறது! காகித நாளிதழ் படிப்பது போன்றே வரும் உணர்வு மட்டுமில்லாமல், சுலபமாக பக்கங்கள் தாவவும், முந்தைய நாள் இதழ்களைப் பார்க்கவும் வசதிகள் இருக்கின்றன. ஏதோ AJAX மாய்மாலம் என்று நினைக்கிறேன் - செய்தித்தாள் பக்கத்தில் இருக்கும் கட்டுரையில் தட்டினால், படிக்க வசதியாக விரிகிறது!

இதன் அருமை புரிய ஒரு முறை தமிழ்முரசு நாளிதழின் தளத்திற்குப் போய்ப் பாருங்கள்.

தினமலர் மின் நாளிதழ்

ஃப்ரென்சுத்தனத்திற்கு எதிரான ஃப்ரென்சுப் புரட்சி?

ஃப்ரான்ஸில் நிகழ்ந்து வரும் கலவரங்கள் துவங்கிய போது, 'இவங்களுக்கு வேறு வேலை இல்லை' என்று நினைத்துக் கொண்டேன் - I mean, really, பொருளாதாரப் பிரச்னைகள், வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற வழமையான காரணங்களுக்கான போராட்டம் என்று நினைத்துக் கொண்டேன்.

ஆனால், கலவரங்கள் தீவிரமடைந்து பாரீஸைத் தொடத்துவங்கியிருக்கும் இவ்வேளையில், இதற்கு அடிப்படைக் காரணங்கள் வேறு என்று செய்திகள் சொல்கின்றன.

வாஷிங்டன் போஸ்ட்:

"While many French leaders depict the rioters as simple criminals, political and social analysts and many French citizens see the fires that are burning across the country as reflecting a growing identity crisis in a nation where social policies have not kept up with rapidly changing profiles in religion, race and ethnicity."

நியூ யார்க் டைம்ஸ்:

"The government has been embarrassed by its inability to quell the disturbances, which have called into question its unique integration model"

ஆக, பிரச்னைகளின் மூலக் காரணம், அந்நாட்டில் வந்து குடியேறிய பல இனக்குழுக்களுக்கும் (குறிப்பாக ஐரோப்பா அல்லாத அரபு/ஆப்பிரிக்க மக்கள்), ப்ரென்சு/ஐரோப்பிய மக்களுக்கும் இடையில் புகைந்து கொண்டிருந்த பகைமை. இதற்கு நெய்யூற்றிப் பற்ற வைத்தது ப்ரான்ஸின் உள்துறை அமைச்சர் நிக்கலஸ் சர்கோஸி. இவர் (அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கண்ணோடு) சமீபத்தில், விஜயகாந்த் போல 'மன்னிப்புங்கற வார்த்தையே எனக்குப் பிடிக்காது' என்று ஒரு zero tolerance விதிமுறையைக் கொண்டு வந்திருக்கிறார். இந்த போலீஸ்கார 'வேட்டையாடு விளையாடு' திட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது ஏழை அரபு/ஆப்பிரிக்க மக்கள் வாழும் பகுதிகள். அங்கே தொடங்கியது இந்தப் போராட்டங்கள்.

வளர்ந்த நாடுகள் பலவற்றிலும் குடியேற்றம் உள்நாட்டுச் சமுதாயத்தில் உண்டாக்கும் தாக்கங்களைச் சமாளிப்பது எப்படி என்பது தீவிரமாக விவாதிக்கப்பட்டு வரும் விஷயம். ஐரோப்பிய நாடுகள் இவ்விஷயத்தில் மூன்று அணுகுமுறைகளைக் கடைபிடிப்பதாக டைம்ஸ் கட்டுரை சொல்கிறது:

1. ஜெர்மனியின் முறை: குடியேறிகள் தற்காலிகமாகவே அனுமதிக்கப்படுகிறார்கள். தற்காலிக விசா முடிந்ததும் வீடு திரும்பும் மக்களாகவே பாவிக்கப்படுகின்றனர். நிரந்தரக் குடிமக்களாவதற்கும் சமஉரிமை பெறுவதற்கும் ரொம்பப் போராட வேண்டும்.

2. ப்ரான்ஸின் முறை: குடியேறிகள் வரலாம், பெறலாம், தரலாம்; ஆனால் வீட்டு வாசலில் செருப்பை விட்டு வருவது போல், நாட்டு வாசலில் சொந்தக் கலாசாரத்தை விட்டு விட வேண்டும். ஒரு மையமான ஃப்ரென்சுத்தனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். பொதுவில் மதச்சின்னங்களுக்குத் தடை என்பதில் துவங்கி எந்த ஒரு தனித்தன்மையையும் மறைக்கும் அணுகுமுறை. கோவில் கட்டுவது, சங்கம் ஆரம்பிப்பதெல்லாம் பிரம்ம பிரயத்தினம்.

3. இங்கிலாந்தின் முறை: கிட்டத்தட்ட அமெரிக்க முறை. வாருங்கள், முடிந்த வரை எங்கள் நாட்டு முறைகளைப் பின்பற்றுங்கள், மற்றபடி எப்படி வேண்டுமானாலும் இருங்கள். கொஞ்ச நாள் கழித்து குடிமக்களாகலாம், உங்களுக்குப் பிடித்தால்.

இம்மூன்றில் தெளிவாக அபத்தமாக இருப்பது ப்ரென்சு முறை தான் என்பதால், இப்படிக் கலவரங்கள் நடப்பதில் ஆச்சரியமில்லை.

Sunday, November 06, 2005

கலாசாரங்கள் கலந்துருகும் கலயம்?

நேற்றிரவு "Crash" படம் பார்த்தேன். போன வருடம் வந்த படம். அற்புதமாக இருந்தது. Magnolia meets The House of Sand and Fog. கட்டாயம் பாருங்கள். குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் வெளிநாட்டவர்கள் (you know what I mean....).


படம் அமெரிக்க நகரங்களில் கலந்தோடும் அந்நியக் கலாசாரங்களையும், அவை ஒன்றோடொன்று உராயும் தருணங்களையும் பற்றியது. படத்தின் முதல் வசனம் படத்தின் கருவை பளிச்சென்று சொல்லி விடுகிறது (Hotel Rwanda வில் நடித்த டான் சீடில் சொல்லும் வசனம்):

"தொடுதல்...ஒரு சாதாரண நகரத்தில் மக்கள் தெருக்களில் நடப்பார்கள்; அப்பொழுது ஒருவரோடு ஒருவர் உராய்வார்கள், இடித்துக் கொள்வார்கள். ஆனால் லாஸ் ஏஞ்சலசில் யாரும் யாரையும் தொடுவதில்லை. கண்ணாடிகளுக்குப் பின்னால் இருந்து கொள்கிறோம்.... நான் என்ன நினைக்கிறேன், அந்தத் தொடுதல் உணர்விற்காக நாம் ரொம்பவும் ஏங்குகிறோம், அதனால் தான் சில சமயம் ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொள்கிறோம். அப்படியாவது யாரையாவது தொட மாட்டோமா என்று".

படம் என்னிடத்தில் எழுப்பிய சிந்தனை:

அமெரிக்காவை கலாச்சாரங்களை கலக்கியுருக்கும் கலயம் (melting pot) என்று வர்ணிப்பதுண்டு. பம்மாத்து. இந்தியாவின் Unity in Diversity போல. அப்படி இருக்க வேண்டும் என்ற நப்பாசை இருக்கிறது, ஆனால் நிஜம் என்னவோ அதற்கு வெகு தொலைவில் தான். அந்நியர்கள் அனைவரும் தமக்காக உருவாக்கிக் கொள்ளும் கற்பனைச் சமுதாயத்தில் வாழ்ந்து கொள்கிறார்கள். இங்கேயே பிறந்தவர்கள் கொஞ்சம் (கொஞ்சம் தான்) தேவலை. வெளிநாடுகளில் பிறந்து வளர்ந்து இங்கு வந்தவர்களுக்கு பிரச்னைகள் உண்டு:

1. தமது கலாசாரப் பின்னணி குறித்து ஒரு துளியூண்டு மேன்மைச்சிந்தனயாவது இவர்களுக்கு உண்டு - தொலைவில் வாழ்வதால் வரும் ஊர்ச்சோகம் இதைக் கொஞ்சம் மிகைப்படுத்தவும் செய்யும். இப்படி இருக்கையில் 'கலந்து உருகுவது' குறித்து 'இதெல்லாம் தேவையா' என்ற கேள்வி, 'இதனால் நமது வேர்களை இழந்து விடுவோமோ' என்ற பயம் இரண்டும் உண்டு.

2. இதற்குத் தேவைப்படும் வேலைப்பளுவும் மிக அதிகம். தனியாக ஒரு project plan போட்டு, அலுவலக நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் இதையே செய்தால் தான் சாத்தியம். ஒரு பொது அறிவிற்காக பல விதமான பண்பாடுகளைப் பற்றி நான்கு விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம். அதற்கு மேல் போவது கடினம். பண்ணின முயற்சியெல்லாம் Thanksgiving பந்தியில் உட்கார்ந்து கொண்டு 'நான் வெஜிடேரியன்' என்று சொல்லும் போது பல்லிளித்து விடும்.

என்னிடம் யாராவது அமெரிக்காவில் என்னவெல்லாம் பார்த்தாய் என்று கேட்டால், நயாகரா ஃபால்ஸ் பார்த்தேன், ஃப்ளோரிடா பார்த்தேன், நியூ யார்க் பார்த்தேன், அமெரிக்க கலாச்சாரம் பார்த்தேன் என்று சொல்வேன்.

Thursday, November 03, 2005

ஆயிரம் பொய் சொல்லி ஒரு போர்

"மறைத்திடும் திரைதனை விலக்கி வைப்பாயோ? விளக்கி வைப்பாயோ?"

ஈராக் போர் துவங்குவதற்கு முன்னால், அமெரிக்காவில் 70 சதவிகித மக்கள், போரை ஆதரித்தார்கள்; இன்று 70 சதவிகித மக்கள் அதை எதிர்க்கிறார்கள். முடிவில்லாத உள்நாட்டுப் போர், தெளிவில்லாத அரசியல், தொடரும் மரணங்கள் என இன்றைய எதிர்ப்பைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், ஈராக் போருக்கு முன்னால் 70 சதவிகித மக்கள் ஆதரித்ததன் காரணம் என்ன என்பதும், அந்த ஆதரவு எத்தகைய உத்திகளால் திரட்டப்பட்டது என்பதும் இப்பொழுது மெள்ள மெள்ள விளங்கத் தொடங்கியுள்ளது.

ஆரியானா ஹுஃப்ஃபிங்டன் (Arianna Huffington) தான் நடத்தும் HuffingtonPost-இல் ஒரு அருமையான கட்டுரை எழுதியுள்ளார் (நியூயார்க் டைம்ஸின் மௌரீன் டௌட் கட்டணங்களுக்குப் பின்னால் ஒளிந்திருப்பதால், இவர் தான் எனது தற்போதைய அரசியல் தேவதை). இந்தக் கட்டுரையில் புஷ் அரசாங்கம் கைகொண்ட 'போர்த்தொழில் விந்தைகள்' எத்தகையன என்பதை ஒரு காட்சி - ஒரே ஒரு எளிமையான காட்சி - மூலமாக விளக்குகிறார்.

செப்டம்பர் 8, 2002 - ஞாயிற்றுக்கிழமை, நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் முதல் பக்கத்தில் ஒரு செய்தி வெளியாகியது. சதாம் ஹுசேன் ஆப்பிரிக்காவிலிருந்து அலுமினியம் குழாய்கள் வாங்கி அணு ஆயுதங்கள் தயாரிப்பை முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறார் என்பதைப் பற்றிய செய்திக் கட்டுரை.


இந்த ஊரில் (அமெரிக்காவில்) ஞாயிறு காலைகள் தொலைக்காட்சிகளில் ஒரு பெரும் அரசியல் களமாக இருக்கும். ஆளுங்கட்சி, எதிர்கட்சி, பத்திரிக்கையாளர்கள் எனப் பலரும் தற்போதைய அரசியல் நிலவரங்களை அலசுவார்கள். அரசியல் நோக்கர்களால் பெரிதும் கவனிக்கப்படும் நிகழ்ச்சிகள்.

அந்த ஞாயிற்றுக்கிழமை, எல்லா தொலைக்காட்சி அரசியல் பேட்டிகளிலும், ஆளுங்கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் - சேனி, ரம்ஸ்பீல்டு, காண்டி ரைஸ், போவல் - சென்று இந்தக் கட்டுரையை மேற்கோள் காட்டி 'நியூயார்க் டைம்ஸே' சொல்லி விட்டது, சதாம் ஹுசேன் எத்தைகைய ஆபத்து பாருங்கள், என்ற அளவில் பேட்டிகள் கொடுத்தனர். காண்டி ரைஸ், அமெரிக்காவில் அணுஆயுதம் வெடிக்கலாம் என்று பயமுறுத்தினார். குறிப்பாக சேனி சதாம் ஹுசேன் தீவிரமாகவும், விடாமலும் அணுஆயுதங்களை உற்பத்தி செய்ய முனைவதாக அந்தக் கட்டுரையை ஆதாரம் காட்டிப் பேசினார்.

இதெல்லாம் நடந்தது, செப்டம்பர் 8, 2002 - செப்டம்பர் 11, 2002 விற்கு மூன்று நாட்கள் முன்பு - மக்களிடையே தீவிரவாதம் குறித்த பயங்களும், இன்னுமொரு தாக்குதல் வருமோ என்பது பற்றிய கவலைகளும் மிதமிஞ்சி இருந்த நேரம்.

இதிலெல்லாம் பிரச்னை என்னவென்றால், அந்தக் கட்டுரையை எழுதிய பத்திரிக்கையாளர் ஜூடித் மில்லர் (இவரைப் பற்றிய எனது முந்திய கட்டுரை); இவருக்குச் செய்தியைக் கொடுத்தது சேனி மற்றும் அவரது வலது கை ஸ்கூட்டர் லிப்பி. பிற்காலத்தில் அந்தக் கட்டுரையில் வந்த 'செய்தி' எல்லாம் வெறும் பொய்கள் என்று நிரூபணமானது.

ஆக, தானே உற்பத்தி செய்த ஒரு செய்தியை ஒன்றுமே தெரியாதது போல, தானே மேற்கோள் காட்டுவது! ஒரு பக்கம் ஒரு பொய்யைச் செய்தியாக்கி விட்டு, மறுபக்கம் அந்தச் செய்திப் பிரசுரத்தை ஆதாரமாகக் கொள்வது! எப்படி ஐடியா? இப்படித்தான் உருவாக்கப்பட்டது 70 சதவிகித மக்கள் ஆதரவு!

இந்த ஒரு நிகழ்ச்சியிலிருந்து புஷ்/சேனி கூட்டணியின் யோக்கியதை பற்றிய நமது சந்தேகங்கள் ஊர்ஜிதமாகின்றன, அவ்வளவுதான். ஆனால் நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை இத்தனை சுலபமாக, இத்தனை பெரிய விஷயத்தில் ஏமாந்து, ஒரு பெரும் மோசடிக்குத் தெரிந்தோ தெரியாமலோ உடந்தையாய் இருந்தது அதிர்ச்சி அளிக்கிறது.

இந்தத் தேதி - செப்டம்பர், 8, 2002 - சரித்திரத்தில் இடம் பெறாமல் போகலாம். ஆனால், ஒரு போர், ஒரு பத்திரிக்கையின் நம்பகத்தன்மை - இரண்டுக்கும் அன்று தான் சங்கு ஊதப்பட்டது.