<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Tuesday, June 27, 2006

விடுதலைப் புலிகளின் மன்னிப்புக் கோரல்?

ராஜீவ் காந்தியின் படுகொலை குறித்து விடுதலைப்புலிகள் மன்னிப்புக் கோரியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்நிகழ்வினை ‘ஒரு பெரும் வரலாற்றுச் சோகமாகக்’ கருதுவதாகவும், அதற்கு ‘ஆழ்ந்த வருத்தம்' தெரிவிப்பதாகவும், அந்நிகழ்வினைப் ‘பின்னுக்குத் தள்ளி விட்டுப் பெருந்தன்மையோடு' இந்தியா நடந்து கொள்ள வேண்டும் என்றும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சிந்தாந்தவாதியான ஆண்டன் பாலசிங்கம் கூறியுள்ளதாக அச்செய்தி கூறுகிறது. வெளிப்படையாக பொறுப்பேற்காவிடினும், வெளிப்படையாக - apology, apologize போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி - மன்னிப்புக் கோராவிடினும், அவரது வார்த்தைகளின் மொத்த சாரத்தில் பொறுப்பேற்றலும் மன்னிப்புக் கோரலும் இருப்பதாகவே பல செய்தி ஊடகங்கள் பாவிக்கின்றன.

விடுதலைப்புலிகள் குறித்த இந்தியாவின் அணுகுமுறையில் இவ்வார்த்தைகள் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது என்றே கருதுகிறேன்.

1. இந்தியாவைப் பொறுத்த வரை இந்த பொறுப்பேற்றலில் புதிதாக எந்த ஒரு செய்தியும் இல்லை. இப்படுகொலையை விடுதலைப் புலிகள் தாம் செய்தனர் என்பதில் இந்தியாவிற்கு சந்தேகமே இல்லாத பொழுது இத்தகைய ஒரு பொறுப்பேற்றலில் என்ன புதிதாக தெரிந்து கொள்ள இருக்கிறது? இதனால் பாதிக்கப்படுவது, இந்நாள் வரையில் இக்கொலையை புலிகள் செய்யவேயில்லை என்று சாதித்துக் கொண்டிருந்த ஒரு சில தமிழகப் புலி ஆதரவாளர்கள்தாம். நடத்தப்பட்ட விசாரணைகளின் மீது கடும் அவதூறுகளைக் கூறி, இக்கொலையில் பெரும் புலப்படாத மர்மங்கள் இருப்பதாகக் கூறி திசை திருப்பிக் கொண்டிருந்த இவர்கள் பாடு தான் இப்பொழுது தர்மசங்கடமானது.

2. எந்த ஒரு கொலை/படுகொலை நிகழ்விலும் குற்றவாளியோ, குற்றவாளியின் சார்பில் மற்றொருவரோ ‘மன்னிப்புக் கோரல்' என்பது ஒரு அர்த்தமற்ற நடவடிக்கை. இதில் நடக்க வேண்டிய முதல் அர்த்தமுள்ள நடவடிக்கை குற்றவாளிகளின் சரணடைதல். சட்டத்தின் முன் நிற்றல். அது நடக்காத வரையில் மன்னிப்புக் கோருவது என்பது உள்ளீடற்ற வெறும் வார்த்தைகளே.

ஆகையால், பாலசிங்கத்தின் வார்த்தைகளில் புதிதாகவும் ஒன்றும் இல்லை, அர்த்தமுள்ளதாகவும் ஒன்றும் இல்லை. இந்நிலையில் இந்தியா தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளத் தேவையுமில்லை.

பி.கு: புதன்கிழமை: ராஜீவ் கொலைக்கு தாங்கள் பொறுப்பேற்கவில்லை என்றும் பாலசிங்கம் வெறும் வருத்தம் மட்டுமே தெரிவித்ததாகவும் விடுதலைப் புலிகள் இன்று அறிக்கை விட்டிருக்கின்றனர். Locking the barn door after letting the horse out?


மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

17 Comments:

Blogger ஜெ. ராம்கி said...

//இந்தியா தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளத் தேவையுமில்லை.

crystal clear message!

June 28, 2006 3:15 AM  
Blogger ROSAVASANTH said...

பாலசிங்கம் மூலமான இந்த வாக்குமூலம் (அப்படியே ஊடக திரிபுகள் இல்லாமல் உண்மையாய் இருந்தாலும்) புலிகள் ஒப்புக்காக, எதிர்கால strategyயை முன்வைத்து வெளிபட்டது எனபதில் சந்தேகமில்லை. இந்தியாவின் உதவி புலிகளுக்கு தேவையில்லை, அதே நேரம் சிங்கள அரசுடனான உறவாடல், பொருளாதாரம் தொடங்கி ராணுவம் வரையிலான ஒத்துழைத்தல்கள், உதவிகளை இந்தியா நிறுத்தப் போவதில்லை என்றும் புலிகளுக்கு தெரியும். ஆனால் ஒரு - கடந்த யாழ்பாண முற்றுகை போன்ற- க்ளைமாக்ஸ் காட்சியில், இந்தியா மொத்த உடலையும் உள்நுழைக்கும் சாத்தியம் காரணமாகவே இப்படி சொல்லியிருப்பதாக தெரிகிறது. இதற்கு பலன் எதுவும் இல்லாவிட்டாலும்,பாதகம் இருக்கலாம். (உதாரணமாய் வீரப்பன் கோவாலுக்கு அளித்த சன் டீவியில் வந்த பேட்டியில், சில காட்டிலாக்கா அதிகாரிகளின் ஆட்டங்களை பற்றி விலாவாரியாய் சொல்லி, தான் அதில் ஒருவரை போட்டுத்தள்ளியவுடன் அங்கே ஆடுகளும் மக்களும் சந்தோஷமடைந்ததை பற்றி சொல்லியிருப்பார். அதை பார்த்த ஒரு போலிஸ் அதிகாரிக்கு வீரப்பன் விவரித்த சம்பவங்கள் பிரச்சனையை ஏற்படுத்தவில்லை. கடைசியாய் போட்டு தள்ளியதாய் சொல்வதை ஒரு வாக்குமூல சாட்சியாக எடுத்துக் கொள்வதை பற்றி பேசியிருப்பார்.)


மற்றபடி இந்த பதிவு நல்லதொரு நகைச்சுவை என்றாலும் ரொம்ப யதார்த்தமானது.

உதாரணமாய் //இதில் நடக்க வேண்டிய முதல் அர்த்தமுள்ள நடவடிக்கை குற்றவாளிகளின் சரணடைதல். சட்டத்தின் முன் நிற்றல். அது நடக்காத வரையில் மன்னிப்புக் கோருவது என்பது உள்ளீடற்ற வெறும் வார்த்தைகளே.//

பிரபாகரன் சரணடைந்து இந்திய குற்றவியல் சட்டப்படி தண்டனை பெற வேண்டுமா? பேஷ், அமைதிப்படையின் அட்டூழியங்களுக்கு மன்னிப்பு கேட்பது இருக்கட்டும். அதை ஒப்புகொள்ளும் நேர்மையாவது இருக்குமா என்று ஈழத்தமிழர்கள் கேட்பார்கள்.

ஈழம் கிடக்கட்டும், அது அன்னிய நாடு. காஷ்மீரில் இந்திய படைகள் ரொம்ப சாது என்றே வைத்துகொள்வோம். லஷ்கர் மட்டும்தான் எல்லோரையும் விதரணை இல்லாமல் மதவெறிகொண்டு கொன்று குவிக்கிறது என்றும் வைத்துகொள்வோம். வடகிழக்கில் செய்த அட்டூழியங்களுக்கு, அதற்கு எதிரான மக்கள் எதிர்ப்பிற்கு முன்பு மெல்லிய மன்னிப்பு கேட்கும் பண்பாவது இந்திய அரசிற்கு இருக்குமா? விசாரணை தண்டனை என்றெல்லாம் ஒரு வார்த்தையே இல்லை என்று வைத்து கொள்ளலாம்.

வடகிழக்கில் தீவிரவாதிகள் இருப்பதால் பிரசனையா? சரி, கேரளாவில், கலிங்கா நகரில், கங்காவரத்தில் கொல்லப்பட்ட எந்த ஆயுதமும் அதிகாரமும் இல்லாத ஆதிவாசிகள் மீதான கொலைக்கு அரசின் ஏதாவது பிரதிநிதி மன்னிப்ப்பு கேட்பாரா? பிரபாகரன் மட்டும், ஏற்கனவே தனது ஆட்கள் கைது செய்யப்பட்டும், விசாரணை நடந்து 26 பேர்களுக்கு உளவியல் ரீதியாய் மரண தண்டனை அனுபவிக்க வைத்த பின்னும், வந்து சரண்டைந்து தண்டனை அனுபவிக்க வேண்டும். நல்லதொரு நியாயம்தான் உலகம் அப்படித்தான் இயங்கி கொண்டிருக்கிறது. பிரச்சனை என்னவெனில் புலிகளும் தங்களுக்கு அதே போன்ற ஒரு நியாயத்தை கையில் வைத்துக் கொண்டு இயங்குவார்கள்.

June 28, 2006 5:41 AM  
Blogger Srikanth Meenakshi said...

ராம்கி, நன்றி.

வசந்த்,

இந்திய ராணுவத்தினரின் எந்த ஒரு அத்துமீறல்/வன்கொடுமை நடவடிக்கையும் ராஜீவ் கொலையை நியாயப்படுத்தாது என்பதான எனது திண்ணமான கருத்தினாலேயே அதைக் குறித்து இப்பதிவில் எழுதவில்லை. மற்றபடி, இந்திய ராணுவம் எங்கே எப்பொழுது யாரிடத்திலும் அத்து மீறி நடந்தாலும், அது சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உட்பட வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடில்லை. ஆனால், அது போன்ற நிகழ்வுகளுக்கு இந்திய அரசாங்கம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற கோரிக்கையைப் புலிகளின் இந்த மன்னிப்புக் கோரலை முன்வைத்துப் பேச முடியாது. இந்திய ராணுவம் செய்வதெதற்கும் இந்திய அரசாங்க அமைப்பு ஒரு நீண்ட சங்கிலித் தொடரின் முடிவில் தார்மீகப் பொறுப்பேற்பதையும், தனது நேரடி உத்தரவின் பெயரில் புலிகளின் தலைமை நிகழ்த்திய படுகொலைக்கு அவர்கள் பொறுப்பேற்பதையும் ஒப்பிட முடியாது. First is an act of omission, the other is an act of commission. மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.

நன்றி,

ஸ்ரீகாந்த்

June 28, 2006 8:16 AM  
Blogger ஜெ. ராம்கி said...

//அமைதிப்படையின் அட்டூழியங்களுக்கு மன்னிப்பு கேட்பது இருக்கட்டும். அதை ஒப்புகொள்ளும் நேர்மையாவது இருக்குமா என்று ஈழத்தமிழர்கள் கேட்பார்கள். //

இந்தியத்தமிழர்களும் அதைக் கேட்டே ஆக வேண்டும். அதில் எந்த தவறும் இல்லை. தடங்கலும் இல்லை.

June 28, 2006 9:16 AM  
Blogger ஈழநாதன்(Eelanathan) said...

//இந்திய ராணுவம் செய்வதெதற்கும் இந்திய அரசாங்க அமைப்பு ஒரு நீண்ட சங்கிலித் தொடரின் முடிவில் தார்மீகப் பொறுப்பேற்பதையும்//.

சிறீகாந் இந்தச் சங்கிலித் தொடரில் எந்தப் பகுதியிலாவது ஒரு இராணு அதிகாரியோ அரசியல் தலைவரோ ஈழத்தில் தாங்கள் செய்த படுகொலைகளை ஒப்புக்கொண்டிருக்கிருக்கிறார்களா?ஆதாரம் இருந்தால் சுட்டுவீர்களா

மன்னிப்புக் கேட்பதெல்லாம் அதிகப் பட்சம் ஒப்புக்கொள்வதற்கு குறைந்தது ஒரு 'இது' ஆவது வேண்டும்

June 28, 2006 12:42 PM  
Blogger aathirai said...

மன்னிப்பு பற்றி ....
தீவீரவாத பி.எல் ஓவின் தலைவராகக் கருதப்பட்ட யாசர் அராபத்
நியூயார்க்கில் ஐக்கிய நாட்டு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியதை
ஒப்பிட்டு பார்க்கவும். அரசியல் உலகில் இது போன்ற
மாற்றங்கள் நிகழலாம். பழையதையே பிடித்துக்கொண்டு யாரும்
தொங்குவதில்லை.

சோனியா காந்தி கூட இதை பர்சனலாக அணுக முடியாது. இந்தியாவின்
strategic தேவைகளை முன் வைத்துதான் அணுகுவார்களென்று
நினைக்கிறேன்.

June 28, 2006 1:54 PM  
Blogger Srikanth Meenakshi said...

aathirai,

Strategic காரணங்கள் குறித்து நீங்கள் சொல்வது சரியே. அதாவது, வி.புலிகளுடன் சமரசம் செய்து கொள்ள இந்தியாவிற்கு அப்படியொரு காரணம் உள்ள பட்சத்தில். அப்படி எதுவும் இப்பொழுது இல்லை.

ஈழநாதன், IPKF வன்முறைகளுக்கு அரசியல் தலைவர் எவரும் பொறுப்பேற்கவில்லை என்பது உண்மைதான். உங்கள் ஆதங்கம் புரிகிறது. இருப்பினும், வசந்திற்கு அளித்த விடையில் சொன்னது போல, தன்னை மீறி நடந்த ஒரு செயலுக்கு பொறுப்பேற்பதற்கும், தன் மேற்பார்வையில் நடந்த ஒரு செயலுக்குப் பொறுப்பேற்பதற்கும் பெரிய வித்தியாசம் உண்டு.

June 28, 2006 4:26 PM  
Blogger சிறில் அலெக்ஸ் said...

//First is an act of omission, the other is an act of commission. மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்//

விளைவுகளை வைத்தே செயல்களை மதிப்பிட வேண்டியுள்ளது. ஐ பி கே எப் ஏதோ எதோச்சயாக, பழக்கதோஷத்தில், செய்துவிட்டதென்பது ஏற்றுக்கொள்ளமுடியாத வாதமென்றாலும், நண்பர்கள் சுட்டிக்காட்டியபடி குறைந்தபட்சம் அதையேனும் நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோமா?

June 28, 2006 4:58 PM  
Blogger ஈழபாரதி said...

ஏன் பஞ்சாப் மக்களிடம் கேட்கப்படவில்லையா மன்னிப்பு? 2000 உயிர்கள் உயிர்கள் இல்லையா? யாழ்மருத்துவமனை கொலைகளை நீங்கள் படித்ததில்லையா? வல்வை படுகொளைகளை நீங்கள் படிக்கவில்லையா? இறந்த மக்களின் உடல்களைக்கூட எடுத்து எரிக்க இந்திய ராணுவம் எம்மை அனுமதிக்கவில்லை, மூண்று நாட்களின் பின் நாம் சென்றபோது, உடல்கள் அழுகிக்கிடந்தன அவர்கள் தவழ்ந்து விளையாடித்திரிந்த அவர்கள் வீட்டு முற்றத்தில். உடல்களை தூக்கும் போது கைவேறாக கால்வேறாக வந்தது, அதில் வைத்தே எரித்துவிட்டு வந்தோம். இதற்க்கு மன்னிப்புதான் இல்லை இதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இருக்கிறதா?

June 28, 2006 9:07 PM  
Blogger Srikanth Meenakshi said...

ஈழபாரதி,

நான் முன்னமே சொன்னது போல, என்னைப் பொறுத்த வரையில் இந்திய ராணுவத்தின் அத்துமீறல்கள்/வன்கொடுமைகளினால் ராஜீவ் படுகொலையை நியாயப்படுத்த முடியாது. ஆகையால், பாலசிங்கத்தின் சமீபத்திய கூற்றுக்களை ஒட்டி, இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு இந்தியா மன்னிப்புக் கோர வேண்டும் என்று கேட்பதை நிராகரிக்கிறேன். அவ்விரண்டையும் ஒப்பிடுவதையும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

இருப்பினும், பாலசிங்கம் கூற்று, ராஜீவ் கொலை ஆகியவற்றைக் கடந்து இந்திய ராணுவ நடவடிக்கைகளில் நிகழ்ந்த/நிகழும் அத்துமீறல்கள் குறித்து இந்தியா தார்மீகப் பொறுப்பெடுத்து மன்னிப்புக் கோருமென்றால், அதை நிச்சயம் வரவேற்பேன். அதே சமயம், இந்தப் பதிவில் கூறியபடி, வன்கொடுமைகள் நிகழ்ந்த பிறகு வரும் மன்னிப்புக் கோரல் சட்டரீதியான நடவடிக்கைக்குப் பதிலாக வந்தால், அத்தகைய மன்னிப்புக் கோரல் உள்ளீடற்றதாகவே இருக்கும். முக்கியத் தேவை - ராணுவ அத்துமீறல்களுக்கு எதிரான சட்ட ரீதியான நடவடிக்கைகள். இவ்விஷயத்திலும் இந்தியாவின் track record மோசமானதாகவே இருக்கிறது என்பதில் ஐயமில்லை.

நன்றி,

ஸ்ரீகாந்த்.

June 28, 2006 9:45 PM  
Blogger ஜோ/Joe said...

நூற்றுக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்து ,தமிழ் பெண்களை மானபங்கப்படுத்திய ஒரு இராணுவத்தின் செயலையும் ,ராஜீவ் காந்தியின் படுகொலையும் ஒப்பிட முடியாது .ராஜாங்க ரீதியில் ஒரு நாட்டின் தலைவர் கொல்லப்பட்டதால் இந்த மன்னிப்பு அவசியமாக இருக்கலாம் .ஆனால் தார்மீக ரீதியில் ராஜீவ்காந்தி படுகொலைக்காக புலிகள் மன்னிப்பு கேட்க வேண்டியது தமிழ்நாட்டு தமிழர்களிடம் .உணர்வு பூர்வமாகவும் வெளிப்படையாகவும் தமக்கு ஆதரவு அளித்து வந்த அம்மக்களை இந்த ஒரு நிகழ்வின் மூலம் சொந்த நாட்டில் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி மற்றவர் பரிகசிக்கச் செய்தது மிகப்பெரிய தவறு .அதற்கான பலனைத்தான் இன்று அவர்கள் அனுபவிக்கிறார்கள் .அதைப்பார்த்து தமிழ்நாட்டு தமிழர்கள் வாய்பொத்தி நிற்பதற்கு புலிகளே காரணம் .தங்கள் தலையிலே தானே மண் அள்ளிப் போட்டுக்கொண்டதுமில்லாமல் ,தமிழக தமிழர்களின் நம்பிக்கையை தகர்த்ததற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்பது தான் தார்மீக அடிப்படையில் சரியானது.

June 28, 2006 10:45 PM  
Blogger Machi said...

//இந்திய ராணுவத்தின் அத்துமீறல்கள்/வன்கொடுமைகளினால் ராஜீவ் படுகொலையை நியாயப்படுத்த முடியாது. ஆகையால், பாலசிங்கத்தின் சமீபத்திய கூற்றுக்களை ஒட்டி, இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு இந்தியா மன்னிப்புக் கோர வேண்டும் என்று கேட்பதை நிராகரிக்கிறேன். அவ்விரண்டையும் ஒப்பிடுவதையும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.
//


மக்களாட்சி நாடான இந்தியாவிற்கு தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டும் பெருந்தன்மை வேண்டும். அது இல்லாதது வெட்டக்கேடு.
எந்த நிர்பந்தமும் இல்லாமல் சுயசோதனை செய்து இதை இந்தியா செய்யவேண்டும் அது தான் மதிப்பு.

எனக்கு தெரிந்து இராணுவம் & காவல்துறையின் அட்டூழியங்களுக்கு நமது அரசு என்றும் மன்னிப்பு கேட்டதில்லை. தவறு செய்தவர்களும் தண்டிக்கப்பட்டதில்லை, "விசாரணை குழு" அமைத்து பிரச்சனை புதைக்கப்படும்.
இராஜீவ் படுகொலையை நியாய படுத்த முடியாது, அதற்காக ஈழ பிரச்சனையில் இந்தியா மீண்டும் தவறான முடிவை எடுக்கக்கூடாது. அதாவது பிரபாகரன் & பொட்டு அம்மனை விசாரணைக் கூண்டில் நிறுத்தாமல் ஈழ தமிழர் பிரச்சனையில் தலையிட மாட்டேன் என்பது சரியான முடிவாகாது.
இலங்கையில் நடக்கும் நிகழ்வுகள் விரும்பாவிட்டாலும் இந்தியாவை பாதிக்கும்.

June 28, 2006 10:46 PM  
Blogger கூத்தாடி said...

ஜோ வின் கருத்து தான் என்னுடையதும் .

தமிழகம் இன்று மத்திய அரசை ஈழத் தமிழர்க்காக வாதாட முடியாமல் ,மத்திய அரசின் நிலையே என்னுடையதும் என்றும் சொல்ல வைத்ததற்கானக் காரணம் புலிகளின் வரலாற்றுத்தவறுதான் நம்ப்பிக்கைத் துரோகம் தமிழக மக்களை ஈழப் பிரச்சினையில் இருந்து விலகச் செய்துவிட்டது ..

இந்தியா ராஜீவ் கொலையைம் மட்டுமே வைத்து ஈழப் பிர்ச்சினைப் பார்க்கக் கூடாது என்பதும் என்னுடைய ஆசைதான் ..ஆனால் தமிழகம் அதை நிர்ப்பந்திக்கும் தார்மீக உரிமையை இழந்த்து விட்டது ..

June 29, 2006 2:53 PM  
Blogger Srikanth Meenakshi said...

சங்கர்,

லேட்டாய் வந்தாலும் லேட்டஸ்டாய் வந்திருக்கிறீர்கள்...சிரமமெடுத்து எழுதிய நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி. எனது சண்டே போஸ்ட் தொடர் பிறவிப் பயன் எய்தியது :-)

Seriously, -

ஈராக் போர் குறித்த எனது நிலைப்பாடுகளை ஒட்டி நீங்கள் எழுதியுள்ள அலைவரிசைகளில் நானும் யோசித்திருக்கிறேன். இரண்டு சூழ்நிலைகளும் வெவ்வேறானவை என்ற தெளிவு எனக்கிருக்கிறது.

நான் இதுவரை அமெரிக்க - ஈராக் விஷயத்தில் மூன்று விஷயங்களை கடுமையாக விமரிசித்திருக்கிறேன்:

1. பொய்க்காரணங்களை ஜோடித்து போருக்குப் போனது. இல்லாத விஷயங்களை உருவாக்கியும், இருந்த விஷயங்களை பெரிதுபடுத்தியும் போருக்கு அமெரிக்காவைத் தயார் செய்தது. இந்திய-இலங்கை விஷயத்தில் அப்படியில்லை. IPKF-ஐ உள்நுழைத்தது, இந்தியா இவ்விஷயத்தில் ராணுவ ரீதியாக நுழைந்தது ஆகியவற்றை விமரிசிப்பவர்கள் கூட அதிகபட்சம் ஜெயவர்த்தனே விரித்த வலையில் ராஜீவ் விழுந்தார் என்று தான் சொல்கிறார்களே ஒழிய, இந்தியாவோ ராஜீவோ திட்டமிட்டு புலிகள் மீது போர் தொடுத்ததாகச் சொல்வதில்லை. ஆகையால், இவ்விஷயத்தில் எனது நிலைப்பாடுகளில் நான் முரண்பாடு காணவில்லை.

2. மிதமிஞ்சிய executive power-ஐ ஸ்வீகரித்துக் கொண்டு புஷ் அரசாங்கம், சித்திரவதை, சிறை செய்தல் போன்ற விஷயங்களில் அமெரிக்கக் கொள்கைகளை மாற்றி எழுதியது. இப்படி எழுத்து ரீதியாக சட்டத்தின் விளிம்பில் நின்று இவர்கள் செயலாற்றியதற்கு பல ஆதாரங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அமெரிக்க சட்டங்கள் (separation of power போன்ற) இவற்றை அனுமதிப்பதில்லை. இந்திய அரசாங்கமோ, ராஜீவோ இப்படி அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக எந்தத் தகவலுமில்லை. ராணுவம் செய்த வன்கொடுமைகளை நான் தொடர்ந்து அத்துமீறல்கள் என்றே கூறி வருகிறேன். அதை விட பெரியதாக உண்மை நிலை இருந்ததற்கு எந்த ஆதாரமுமில்லை. ஆகையால், இந்த விஷயத்திலும் எனக்கு முரண்பாடு தெரியவில்லை.

3. அமெரிக்க வீரர்கள் செய்து வரும் அத்துமீறல்கள் குறித்த நடவடிக்கைகள். இந்த விஷயத்தில் அமெரிக்காவின் செயல்பாடு விமரிசிக்கக் கூடிய அளவில் இருந்தாலும், இந்தியாவின் செயல்பாட்டை விட தேவலாம் என்ற அளவிலேயே இருக்கிறது. ஆபூ க்ரேப் குற்றவாளிகள் கூட (லிண்டி இங்க்லேண்ட் போல) பொதுவில் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட்டனர். சரியானவர்கள் தண்டிக்கப்படவில்லை, போதுமான தண்டனை இல்லை, தொடரும் குற்றங்களில் சில பூசி மெழுகப்படுகின்றன என்றெல்லாம் சொல்ல முடிந்தாலும், இந்தியாவில் இந்த அளவு கூட செய்யப்படவில்லை (இலங்கை விஷயத்திலும் சரி, வசந்த் குறிப்பிடும் மற்ற விஷயங்களிலும் சரி) என்பது உண்மை தான். இதில் எனது நிலைப்ப்பாடாக குற்றமிழைத்தவர்கள் சட்டரீதியான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்று சொல்வது சுருக்கமாக இருந்தாலும் unambiguous ஆகவே இருக்கிறது.

மூன்றாவது விஷயத்தில் அதை ராஜீவ் கொலையோடு ஒப்புமைப்படுத்திப் பேசுவதை எதிர்க்கிறேன். மற்றபடி, பொதுவாகவே இவ்விஷயத்தில் இந்திய ராணுவம் இன்னமும் transparent-ஆக, உறுதியாக செயல்படவேண்டும் என்பதில் எனக்கு கருத்து வேறுபாடில்லை.

இன்னமும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், ஒரு இந்தியக் குடிமகன் என்ற முறையில் இந்திய ராணுவமோ போலீசோ அதிகார துஷ்பிரயோகம் செய்து எங்கு எப்பொழுது அப்பாவி மக்கள் மீது எத்தகைய வன்முறைப் பிரயோகம் செய்தாலும் அதைக் கண்டிப்பதில் எனக்குத் தயக்கமில்லை.

உங்கள் கேள்விகள், இந்த வார நிகழ்வுகள் ஆகியவற்றிற்கு முன்பே என் மனதில் தெளிவாக இருந்த நிலைப்பாடுகள் தான் இவை. அவற்றை விளக்கிச் சொல்ல உங்கள் பின்னூட்டம் வாய்ப்பளித்தது. இவ்விளக்கங்களையும் மீறி நான் மேற்கூறியவை எல்லாம் சால்ஜாப்புகள் என்று உங்களுக்குத் தோன்றுமேயானால், அதற்குக் காரணம் *நான்* போட்டுக் கொண்டிருக்கும் கண்ணாடிகள் அல்ல.

நன்றி,

ஸ்ரீகாந்த்

June 29, 2006 7:04 PM  
Blogger Boston Bala said...

The previous reply clarifies some of my mystifications due to the various blog readings. Thanks for this post and the crisp feedback.

June 30, 2006 3:24 PM  
Blogger -/சுடலை மாடன்/- said...

Srikanth,

Thanks for your reply. Your response is satisfactory based on the fact that the evidences against the American army in Iraq are more out open in the public.

That does not mean that the acts of the Indian army are any better to give them or the rulers a different judgement. If the enquiries on the Indian army excesses were fair, these women would not conduct such a painful struggle to demand justice.

Even in the case of IPKF, there was a complete tynranny going on to blackout any uncensored news. Few articles critical of the disconnect between the IPKF on the ground and the press reports issued from Chennai and New Delhi were written later by retired army officers.

I am busy winding up before the long weekend, will come back and quote some of the reports by retired army officers. Until then, you can assume that you do not wear any glasses :-)

Thanks,

Sankar

June 30, 2006 5:15 PM  
Blogger CAPitalZ said...

- Major General Harkirat Singh, the Indian Peace Keeping Force’s first commander

"Prabhakaran learnt it on television that the Accord had been signed and they were not party to it. It was one reason why the LTTE never accepted the Accord and India’s stand.

If we had taken the LTTE into confidence, they would have known the whole thing, their terms would have been put across to Jayewardane, and the situation would have been different."

...

"You are given amnesty to them [LTTE], fulfill it, but these politicians, they couldn’t. Depinder next day flew into Trincomalee and told me, Hand over, let them go and do whatever they [Sinhala Army] want. Let us go and have a cup of tea with them, with the three chiefs."

[then LTTE took cyanide]

http://www.rediff.com/news/2000/mar/30lanka.htm

______
CAPital
http://1paarvai.wordpress.com/

July 09, 2006 11:08 AM  

Post a Comment

<< Home