<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Tuesday, December 27, 2005

சங்கரபாண்டியின் கட்டுரை

இந்த என் வலைப்பதிவகத்தில் நான் எழுதுபவைகளுக்குப் பொதுவானதாக ஒரு குறிப்பிட்ட கரு என்று ஒன்று இல்லாவிடினும், அவ்வப்போது அமெரிக்க தமிழர் வாழ்வின் அனுபவங்கள்/வழக்கங்கள் குறித்து எழுதி வந்திருக்கிறேன். அமெரிக்கத் தமிழர் வாழ்வுகளில் இங்கிருக்கும் தமிழ் சங்கங்களுக்கு ஒரு சுவாரசியமான, அவ்வப்போது முக்கியமான, பங்கு உண்டு.

நானிருக்கும் வாஷிங்டனிலும் ஒரு தமிழ் சங்கம் உள்ளது. கடந்த இரண்டரை தசாப்தங்களாக இயங்கி வரும் இதன் வரலாற்றில் ஒரு மெகா சீரியலுக்கான சரக்கு இருக்கிறது. ஒரு சமயத்தில் இதற்கு நான் தலைவராகவும் இருந்திருக்கிறேன். இன்றும் வலைப்பதிவர்கள் சிலர் இதை நிர்வகிக்கிறார்கள். இதன் துணைத்தலைவர் மணிக்கூண்டு சிவா, இதன் பத்திரிக்கையான 'தென்றல்-முல்லை'யின் (அதென்ன வினோதமான தலைப்பு என்று தோன்றுகிறதா? - கேட்காதீர்கள், அப்புறம் வருத்தப்படுவீர்கள்) ஆசிரியர் சங்கரபாண்டி. துணை ஆசிரியர் 'சிறகுகள்' தாரா.

இப்பத்திரிக்கையின் சமீபத்திய இதழில் சங்கரபாண்டி அமெரிக்கத் தமிழ் சங்கங்கள் பற்றி ஒரு சுவாரசியமான கட்டுரை எழுதியுள்ளார். அவர் சொந்தமாக வலைப்பதிவு ஆரம்பிக்காமல் அழிச்சாட்டியம் செய்து வருவதால் அந்தக் கட்டுரையை இங்கே அவர் அனுமதியோடு மறுபிரசுரம் செய்கிறேன்.

இதோ அந்த கே.வா.போ.க (கேட்டு வாங்கி போட்ட கட்டுரை - remember? :-) )

--------------------------------------

தமிழ்ச் சங்கமும், பேரவையும் தேவைதானா?

சொ. சங்கரபாண்டி


என்னடா தலைப்பே இப்படி எதிர்மறையாக இருக்கிறதே என்று கவலையாக இருக்கிறதா. அதைவிட கவலைப் படவேண்டியது உண்டு - அது, தமிழ்ச் சங்க நிர்வாகிகளாகவும், பேரவை நிர்வாகிகளாகவும் பதவி வகிப்பவர்களில் பெருவாரியானோர், தமிழ்ச் சங்கங்களை ஏன் நடத்தி வருகிறோம் என்றும், தாங்கள் ஏன் அந்தப் பதவிகளுக்கு வந்தோம் என்றும் அறியாமல் இருப்பது.

அடிப்படைப் பணியும், அலட்சியமும்

கடந்த சில வருடங்களாக நான் தமிழ்ச்சங்கங்களையும், பேரவை(FETNA)யையும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். ஒரு சில நிர்வாகிகள் மட்டும் தங்கள் நேரத்தை முழு மூச்சாக செலவிட்டு, எடுத்துக் கொண்ட பணியினைச திறம்படச் செய்து வருகின்றனர். ஆனால் மீதிப் பெரும்பாலோர் தமிழ்ச் சங்கப் பெயர்ப் பட்டியலிலும், வெளியீடுகளிலும் தங்கள் பெயரும், புகைப் படமும் வந்தால் போதும், ஒன்றும் செய்யாமலே மற்ற சில பயித்தியக்காரர்கள் செய்யும் பணியினால் தம் பெயரும் உலகத்துக்குத் தெரிந்தால் போதும் என்று நினைகிறார்களோ எனத் தோன்றுகிறது எனக்கு. ஏனெனில் இவர்களால் மிக அடிப்படையான பணியான நிர்வாகக் கூட்டங்களில் கூட கலந்து கொள்ள முடியாது என்பது வெட்கக் கேடு. இத்தனைக்கும் தற்காலத்திலுள்ள தொழில் நுட்ப மலிவால் கூட்டங்கள் நேரடியாக சந்திக்கத் தேவையில்லாமல் தொலை பேசி வழியாக (conference calls) நடக்கின்றன.

இந்த இலட்சணத்தில் இந்தப் பதவிகளுக்குப் பெரும் போட்டியும் தேர்தலும் வேறு. ஏதோ தமிழ் மக்கள் கட்டாயப்படுத்தி நீங்கள் இருந்து நடத்தித் தாருங்கள் என்று வற்புறுத்தி பதவிக்கு நியமிக்கப் பட்டு வந்தால் பரவாயில்லை. அவர்களுக்கு முழு விருப்பமில்லாமலோ, நேரமில்லாமலோ மறுத்த பின்னும், வேறு ஆட்களில்லாத நிலையில், பிறரால் நியமிக்கப் பட்டவர்கள் செயலாற்றாமல் இருந்தால் குறைப் பட்டுக் கொள்ள முடியாது. அது அவர்கள் பிழையில்லை. மாறாக, செயல் படாத நிர்வாகிகளில் பெரும்பாலோர் அவர்களே பெரிதும் ஆர்வம் காட்டியோ அல்லது தேர்தலில் வெற்றி பெற்றோ பதவிக்கு வந்தவர்கள். இதன் மூலம் அவர்கள் போட்டியில் கந்து கொண்ட மற்றவர்களின் வாய்ப்பைத் தட்டிச் சென்றவர்கள். அவ்வாறு பதவிக்கு வந்தபின் மிக அடிப்படையான நிர்வாகக் கூட்டங்களுக்குக் கூட வர முடியாது என்றால் பின் எப்படி தமிழ்ச்சங்கங்கள் வளரும்?

பெரும்பாலான தமிழர்களின் எதிர்பார்ப்பு

புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ்ச் சங்கங்களை நம் முன்னோர்கள் ஏன் தோற்றுவித்தார்கள், நாம் ஏன் இன்னும் நடத்தி வருகிறோம் என்று அறியாமல், வெறுமனே பொழுது போக்கு மன்றங்களாகக் கருதுவதால்தான், வாசிங்டன் தமிழ்ச் சங்கத்தின் ஒரே சொத்தான ஒலி பெருக்கிகளை பூட்டி வைக்கக் கூடிய ஒரு சிறு பாதுகாப்புக் கூடம் கூட இல்லாத அவல நிலை நமக்கு. இதுதான் பெரும்பாலான தமிழ்ச்சங்கங்களின் நிலை, தமிழ்ச்சங்கப் பேரவையின் நிலை.

கடந்த சில வருடங்களாக கீழ்க்கண்ட மூன்று வகைத் தமிழர்களை பார்த்து வருகிறேன்:

1. தமிழ்ச்சங்கங்களின் நோக்கங்களாக சிலவற்றை தாமாகவே கற்பனை செய்து கொண்டு அச்சங்கங்களில் விரும்பி இணைந்தவர்களும் உண்டு
2. அந்நோக்கங்களை தாங்கள் விரும்பியபடி செயல் படுத்தத் தடையாக வேறு சிலர் நடந்து கொள்வதாக நினைத்து அவர்களிடம் சண்டையிட்டோ அல்லது கோபித்துக் கொண்டோ தமிழ்ச்சங்கங்களை விட்டே ஓடிப்போனவர்களும் உண்டு;
3. தமிழ்ச்சங்கத்தில் உறுப்பினராவதையே குறுகிய மனப்பான்மையாகவோ அல்லது அதைவிட மேலேயும் போய் ஏதோ அறுவறுப்பானதாகக் கருதி தமிழ்ச்சங்கங்களை முற்றிலும் புறக்கணிக்கும் தமிழர்களும் உண்டு.

இவர்களிடம் தமிழ்ச்சங்கத்தைப் பற்றிப் பேசும் பொழுது, அவர்களிடமிருந்து நான் அறியும் அல்லது கேள்வியுறும் நோக்கங்களையும், அவை எவ்வளவு தூரம் சாத்தியம் என்பதையும் முதலில் ஆராய்வோம். அப்பொழுது நம் எதிர்பார்ப்பில் உள்ள பிழையும், அந்த எதிர்பார்ப்புகள் பொய்க்கும் பொழுது ஏற்படும் ஏமாற்றமும் புலப்படும்.

1. தமிழ் மொழி வாழவும், வளரவும் புலம் பெயர்ந்தவர்கள் நடத்தும் தமிழ்ச்சங்கங்கள் உதவும்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் மொழியான தமிழ்மொழியை புலம் பெயர்ந்தவர்கள் வாழ வைக்கமுடியும் என்பது நல்ல கற்பனையே. இது தவறான கணிப்பு. அதற்கு மாறாக, தாயகத்தில் வாழும் மக்கள் தமிழ் மொழியைப் புறக்கணிக்கும் பொழுது வீழ்ச்சியும், தாயக மக்கள் அன்றாட புழக்கத்தில் எப்பொழுதும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பொழுது வளர்ச்சியும் ஏற்படும் என்பதே உண்மை.

அதனால் தமிழ் மொழியை வாழ வைப்பது நம் தமிழ்ச்சங்கங்களின் நோக்கம் என்பதெல்லாம் சரியாகப் படவில்லை.

2. தமிழ்ச்சங்கங்களில் உறுப்பினராகச் சேர்ந்து கலந்து கொள்வதன் மூலமோ அல்லது பொறுப்புகளிலும், நிகழ்ச்சிகளிலும் தீவிர பங்கேற்பதன் மூலமோ நம் குழந்தைகளுக்கு நம்முடைய கலாச்சாரத்தோடும், மொழியோடும் தொடர்புடன் இருப்பதற்கு உதவும்.

இதில் ஓரளவு உண்மையுண்டு. தமிழ்ப் பண்பாட்டை நாம் வீட்டில் திணிக்கும் பொழுது, இயல்பான எதிர் வினையாக நம் குழந்தை அதிலிருந்து மீற நினைக்கும். ஆனால் தன்னையொத்த மற்றக் குழந்தைகளும், இளைஞர்களும் வெளிப்படுத்தும் கலாச்சாரக் கூறுகளை இயல்பாக உள்வாங்கிக் கொள்ளும்.

இருந்தாலும் இது முழுக்க வெற்றியில் போய் முடியும் என்று சொல்ல முடியாது. அதனால் தான் சிறுவர்களாக இருக்கும் பொழுது தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகளில் ஆர்வமுடன் கலந்து கொள்ள நினைப்பவர்கள், இளைஞர்களாகும் பொழுது விலகிப் போய் விடுகிறார்கள். இதற்கு விதி விலக்காக ஒரு சில இளைஞர்கள் உண்டு, அதற்குக் காரணம் அவர்களின் வீட்டிலும் குழந்தைகளுக்குப் பண்பாட்டையும், மொழியையும் இயல்பாகக் கற்றுத்தர பெற்றோர் முயற்சி செய்கின்றனர்.

3. மேற்கூறிய இரண்டு எதிர்பார்ப்புகளும் நிறைவேறுகிறதோ இல்லையோ, சரியோ தவறோ நல்ல நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் மூன்றாவது ஒரு நோக்கமும் மிகச்சிலரிடம் உண்டு, அது தமிழ்ச்சங்கத்தின் முக்கிய பொறுப்பை வகிப்பதன் மூலம், தனக்கு ஒரு பெயரை, புகழை அல்லது அங்கிகாரத்தை தேடிக்கொள்ள விழைவது. இதில் சுயனலம் இருப்பதாகத் தோன்றினாலும் தமிழ்ச்சங்கத்தின் வளர்ச்சிக்குப் பயன் படுமானால் நல்ல நோக்கமாக எடுத்துக் கொள்ளலாம். மாறாக பதவியிலிருந்து கொண்டு எதுவும் செய்யாமல் தன்னுடைய பெயரை எல்லா இடத்திலும், குறிப்பாக தாய்நாட்டில் இருப்பவர்களிடம் பெருமை அடிப்பதற்காக பதவி வகிப்பது. இப்படி இருப்பவர்களால் எப்படி அடிப்படைப் பொறுப்பான நிர்வாகக் குழுக் கூட்டங்களில் கலந்து கொள்ள முடியும். எல்லாக் கூட்டங்களிலும் கலந்து கொள்வது கடினம்தான். ஆனால் ஒரு கூட்டத்தில் கூட கலந்து கொள்ளாத நிர்வாகிகள் ஏன் அப்பதவிகளில் தொடர வேண்டும். இப்படிப் பட்டவர்களின் பொறுப்பில் தமிழ்ச்சங்கம் வரும் பொழுது வளர்ச்சி பெறாது. மேலே சொன்ன இரண்டு நோக்கக்களுக்காக வரும் உறுப்பினர்களும் வெளியேறி விடுகின்றனர். மேலும், இப்படி பட்ட நிர்வாகிகளில் சிலர், தன்னுடைய பதவி முடிந்த உடன் தமிழ்ச்சங்க நிகழ்ச்சியின் பார்வையாளராகக் கூட வராமல் காணாமல் போய்விடுவதும் உண்டு. இன்னும் சிலர், தமிழ்ச்சங்கப் பதவிகளில் இருந்து கொண்டு தன்னுடைய சுய வளர்ச்சிக்கு மட்டுமே சங்கத்தின் பெயரைப் பயன் படுத்துவது.

தமிழ்ச்சங்கங்கள் ஏன் அவசியம்?

இந்த நாட்டில் நாமெல்லாம் வந்தேறிகள். எவ்வளவு திறமையிருந்தாலும், குடியுரிமை வாங்கி நீண்ட காலம் வசித்தாலும், இரண்டாவது தலைமுறையாக நம் குழந்தைகள் இருந்தாலும் வேற்று இனத்தவர்களாகத்தான் கருதப் படுகிறோம். செல்வம் குன்றாத வரையில், வேலை வாய்ப்புகள் ஓரளவு இருக்கும் வரையிலும் இந்த வேற்று இன மனப்பான்மையால் நமக்கு எந்தச் சிக்கலும் வராது. திண்டாட்ட சூழ்நிலை உருவானால்தான் ஐரோப்பியத் தோற்றமில்லாதவர்கள் எல்லோரையும் வேற்று இனம் மட்டுமல்லாது வெளியேற்ற வேண்டிய இனம் என்று கருதும் மனப்பான்மை வரும். இது வரலாற்றில் காலங்காலமாக எல்லா நாடுகளிலும் ஏற்பட்டு வந்துள்ள நிலைமை. இதில் கறுப்பு, வெளுப்பு என்றெல்லாம் பேதம் கிடையாது. மலேயாவும், பர்மாவும், உகாண்டாவும் உணர்த்தும் பாடம் இது. மக்களாட்சிக் குடியரசு இல்லாத நாடுகளில் வெளியேற்றத்தையும், வன்முறையையும் நேரடியாகச் செயல் படுத்துவர். மக்களாட்சிக் குடியரசும், சட்டதிட்டங்களும் உள்ள நாடுகளில் முதலில் சட்டப் பூர்வமான மாற்றங்களைக் கொண்டு வர நினைக்கும் பெரும்பான்மை பலம் கொண்ட அரசு. அப்படிப் பட்ட சூழ்நிலைகளில் நம் தாய் நாடு நம்மைப் பாதுகாக்குமா என்றால் உறுதியாகச் சொல்ல முடியாது. சமகாலக் கட்ட உலக அரசியல் நிர்ப்பந்தங்களின் அடிப்படையிலும் சுயநலத்தின் அடிப்படையிலும் தான் ஒவ்வொரு நாடும், இன்னொரு நாட்டுடன் முறித்துக் கொள்வதும், சேர்ந்து கொள்வதும் நடந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் தாய் நாட்டை ஆள்வோர் நாணயமில்லாத அரசியல்வாதியாக இருந்தால், தங்களுக்கு வேண்டிய சிலரின் நன்மைக்காக மற்ற அனைவர் நலத்தையும் காவு கொடுக்கவும் செய்வர்.

ஒரே வழி - சிறுபான்மை சமூகங்கள் ஒற்றுமையாக, ஒரு அமைப்பாக தங்களின் இருப்பை உணர்த்திக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கான நடை முறைகள் - தமிழ்ச்சங்கங்களை நல்ல முறையில் கட்டிக் காப்பது, பல்வித கலாச்சார நிகழ்ச்சிகள் , மாநாடுகள் போன்றவற்றை நடத்திக் கொண்டே இருப்பது.

எனவே தனிப்பட்ட சுயநலங்களை, வெறும் பெயருக்கும், புகழுக்கும் ஆசைப்படுவதை ஒதுக்கி வைத்து நம்முடைய சந்ததியினரின் ஒட்டு மொத்த சமுதாயத்தின் சுயநலம் கருதி தமிழ்ச்சங்கத்தையும், பேரவையும் நல்ல முறையில் நடத்த முன்வர வேண்டும். பல்வித வேலைகளுக்கும், இடர்ப்பாடுகளுக்கும் இடையில் நமக்குக் கிடைக்கும் சிறு ஓய்வு நேரத்தை எப்படிப் பயனுள்ளதாகச் செய்ய முடியும் என்று சிந்திப்போம்.

Sunday, December 18, 2005

ஒரு குரங்கின் மனம்

நேற்றிரவு கிங்காங் படம் பார்த்தேன். விமர்சனமெல்லாம் எழுதுவதற்கு ரொம்ப யோசிக்க வேண்டும் என்பதால், சில அனுபவக் குறிப்புகள் மட்டும்:

1. நான் பார்த்த காட்சி இரவு பத்தேகாலுக்குத் துவங்கியது. ஒரு குடம் டயட் கோக்குடன் போய் உட்கார்ந்தேன். தேவைப்படவில்லை.
2. படத்தின் முதல் ஃப்ரேம் ஒரு சின்ன குரங்கு. நண்பரோடு உரையாடல் - "என்னண்ணே ரொம்ப சின்னதா இருக்கு...", "கவலப்படாத, இன்னும் ஒன் அவர்ல வளர்ந்துடும்.."
3. படத்தின் இரண்டாவது நிமிடத்தில் வரும் காட்சி 'வறுமையின் நிறம் சிவப்பி'லிருந்து காப்பி (அந்த குப்பைத்தொட்டி ஆப்பிள்!)
4. நவோமி வாட்ஸ் நூறு வாட்ஸ்.
5. Jack Black-இன் பாத்திரம் ஒரு அக்மார்க் அமெரிக்கனைச் சித்தரிக்கும் பாத்திரம். தன்னம்பிக்கை, தொழில் முனைப்பு, விடாப்பிடி, அசட்டு தைரியம், திருட்டுத்தனம், காரியத்தை சாதிக்க என்ன வேண்டுமானாலும் செய்வது, விளைவுகளைப் பற்றி சிந்தியாமை, இயற்கையில் மனிதனின் இடம் பற்றிய மேன்மைவாதம் எல்லாம் சேர்ந்த ஒரு quintessential American பாத்திரம்.
6. டிசம்பர் மாதத்தில் வெளிவந்து மூன்று மணி நேரங்களுக்கு மேல் ஓடிய இன்னொரு படத்திலும் கப்பல் பாறையின் மீது மோதியது நினைவுக்கு வந்தது. ஒரு வித்தியாசம் - அந்தப் படத்தை விட இந்தப் படத்தின் ஹீரோவுக்கு முகத்தில் முடி அதிகம்.
7. படத்தின் நாயகன் வந்த சில நிமிடங்களில் நண்பரின் கமெண்ட் - 'அட, கோபம் இருக்கற இடத்துல தான் குணம் இருக்கும்-னு காமிச்சுட்டான் பாரு!'
8. [Spoiler] படத்தில் வரும் ஆதிவாசி/காட்டுமிராண்டி தீவுக் காட்சிகள் மகா insensitive. இந்தப் படத்தின் ஒரிஜினல் 1933-ஆம் ஆண்டு வெளிவந்தது. அப்போதைய அரசியல் சூழ்நிலைக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருந்திருக்கலாம். இப்பொழுது நெளிய வைக்கிறது.
9. [Spoiler] படத்தின் அடிப்படைக் கருவே கொஞ்சம் racist-தான். தனக்குப் படைக்கப்படும் எல்லா கறுப்பு மக்களையும் கொன்று குவிக்கும் கிங்காங் ஒரு செம்பட்டைத்தலை வெள்ளைப் பெண்ணைப் பார்த்ததும் காதலாகிக் கசிந்துருகுகின்றதாம். What, ஓய்?
10. கொஞ்சம் Stockholm syndrome இல்லை?
11. படத்தில் ஒரு 22 அடி குரங்கு வருகின்றது என்று தெரிந்து தான் காசு கொடுத்து டிக்கெட் வாங்குகின்றோம். அதனால் லாஜிக், நம்பகத்தன்மை ஆகியவற்றை எதிர்பார்க்கக் கூடாது. இருந்தாலும் அடிப்படை இயற்பியல் விதிகளுக்குக் கொஞ்சம் மரியாதை கொடுத்திருக்கலாம்.
12. கிங்காங் கதாநாயகியைத் தூக்கிக் கொண்டு நியூயார்க் நகர வீதிகளில் நடக்கும் போது, பக்கத்தில் நண்பர், 'அட, மேரியாட்-ல ரூம் போட்டிருக்கு போலிருக்கு!' என்று சொன்னதைத் தவிர்த்திருக்கலாம்.
13. படம் முழுவதும் யாரும் கேட்காத கேள்வி - 'இந்த ஸீனை எப்பிடி எடுத்திருப்பான்?' - ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் விஷயத்தில் இந்தப் படம் அதையெல்லாம் தாண்டி விட்டது.
14. படத்தின் முடிவில் நண்பர் சொன்ன, யோசிக்க வைத்த, கமெண்ட் - 'குணா படத்தை அப்டியே எடுத்திருக்கான்!'

Thursday, December 15, 2005

ஜனநாயக ஈராக்

ஈராக்கில் இன்று தேர்தல் அமோகமாக நடைபெற்றிருக்கிறது. அதன் மக்கள் பெருமையும் சந்தோஷமும் கொள்ள வேண்டிய நாள் இன்று.


இப்பொழுதும் அமைதிக்கு உத்திரவாதமில்லை - இன்றைய தேர்தலின் வெற்றிக்கும் தீவிரவாதிகளின் போர் நிறுத்த அறிக்கை ஒரு முக்கியமான காரணம் தான். இந்தத் தேர்தலால் நாளை ஈராக்கில் சுபிட்சம் மலரப் போவதில்லை தான். இருந்தாலும், ஈராக் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடைக்கால நிர்வாகத்தின் மேற்பார்வையில் உருவாகி ஈராக் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஈராக் மக்களின் ஆதரவோடு வெற்றிகரமாக இன்று தேர்தல் நடந்திருக்கிறது. இது நல்ல செய்தி. நம்பிக்கை தரும் செய்தி.

இன்னொரு விஷயம். பொதுவாக அரசியல் ரீதியாகவும், குறிப்பாக ஈராக் விஷயத்திலும் எனக்குத் தெரிந்த வரையில் நடுநிலைமையோடு செயல்பட்டுவரும் அமெரிக்க ஊடக மையமாக NBC-யும், MSNBC-யும் இருக்கின்றன. சமீபத்தில் ஈராக்கிலிருந்து NBC-இன் Richard Engel அளித்துள்ள செய்திக்கட்டுரையில் சில நல்ல செய்திகள் இருக்கின்றன.

இதிலிருக்கும் விஷயங்களும் உண்மைகளென்றால், ஈராக் மக்கள் சந்தோஷமும் பெருமையும் கொள்ள கூடிய சீக்கிரம் மேலும் சில காரணங்களும் இருக்கும்.

Tuesday, December 13, 2005

பனி வருது, பனி வருது, ஷவல் கொண்டு வா...

(சம்பந்தமில்லாத முன்குறிப்பு: சன் டிவியின் 'தங்க வேட்டை' விளம்பரங்களை ஜெனீவா சித்திரவதைப் பட்டியலில் கொண்டு வர என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்தவர் சொல்ல வேண்டுகிறேன்.)

(சம்பந்தமுள்ள முன்குறிப்பு: சிகாகோ, டெட்ராய்ட், டொரொண்டோ போன்ற ஏரியும் ஏரி சார்ந்த இடங்களிலும் இருப்பவர்களுக்கு கீழ்க்காணும் கட்டுரை எரிச்சலூட்டலாம்)

வாஷிங்டனில் குளிர்காலம் முகூர்த்த நேரத்துக்கு முன்னதாகவே வந்து விட்டது. பொதுவாக ஜனவரி பாதியில் துவங்கும் பனி பொழிவுகளுக்கு இந்த வருடம் டிசம்பர் ஆரம்பத்திலேயே ஜூட்ஸ். வீட்டு வாசலில் ஷவலும் கையுமாய் மாங்கு மாங்கென்று அள்ளிப் போடுகையில், சென்னையில் பக்கெட்டும் கையுமாய் மாங்கு மாங்கென்று மொண்டு ஊற்றுபவர்கள் கண நேரம் நினைவில் தோன்றி மறைந்தார்கள். சென்னையில் மறுநாள் சுள்ளென்று வெய்யில் அடித்திருக்கும்; இங்கு சூரியன் தெரிய இன்னும் நான்கு மாதங்கள் ஆகும்.

நான் இங்கு பத்து வருடங்களுக்கு மேலாக இருக்கிறேன், இருந்தாலும் குளிர்காலத்தோடு சமரசம் செய்து கொள்ளவே இல்லை. இந்த ஐந்து மாதங்களை பல்லைக் கடித்துக் கொண்டுதான் கடந்து கொண்டிருக்கிறேன் (கடித்துக் கொள்ளாவிட்டால் வெட வெடவென்று அடித்துக் கொள்ள ஆரம்பித்து விடும், அது வேறு விஷயம்). சில பேர் நாக்கூசாமல் ஜம்பம் பேசுவார்கள் - 'ஆஹா, குளிர்காலம் எவ்வளவு அருமையாக இருக்கும்! பனியில் விளையாடலாம், பனிச்சறுக்கு போகலாம்..." என்று. அத்தனையும் பொய். இருந்தாலும் பரவாயில்லை, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சமாளிப்பு யுத்தி என்று மன்னித்து விடுவேன்.

(இருந்தாலும் இந்தப் பனிச்சறுக்குக் கூத்து எனக்குப் புரிந்ததே இல்லை. லிஃப்டில் மலை உச்சியில் கொண்டு போய் விட்டு விடுவார்கள். அங்கே போய் நின்று கொண்டு, உடலில் முகத்தைத் தவிர எல்லா இடத்திலும் டபுள் போர்வை போர்த்திக் கொண்டு, அசந்தர்ப்பமான வினாடியில் கீழே தள்ளிவிடப்பட்டு, காற்று முகத்தில் அறைய, வெளியே தெரியும் அரை இன்ச் தோல் செந்தோலாகி கீழே வந்து சேரும் போது, 'இதற்குக் காசு வேறு கொடுத்தோமா?' என்று தோன்றும். கூட இருப்பவர்கள் 'சூப்பரா இருந்ததில்ல?' என்று சொல்வார்கள், நம்பாதீர்கள்.)

என்னுடைய சமாளிப்பு உத்தியில் வேறு மாதிரியான பாசாங்குகள் உள்ளன. இன்னும் ஐந்து மாதங்கள் குளிர்காலம் என்று நினைக்கத் துவங்கி விட்டால், அவ்வளவு தான் அம்பேல், எழுந்திருக்க முடியாது. மாறாகக் குறுகிய காலங்களாய்க் கணக்கிட வேண்டும். ஒரு நீண்ட பயணம் போல இது. உதாரணமாக, வாஷிங்டனிலிருந்து நியூயார்க் செல்வது நான்கரை மணிநேரம். அவ்வளவு நேரமா என்று ஆரம்பத்திலேயே யோசித்தால் முடியாது. ஒரு மணி நேரத்தில் பால்டிமோர் வந்துவிடும். பின்பு ஒருமணி நேரத்தில் டெலவேர், அப்புறம் நியூஜெர்சி என்று கொஞ்சம் கொஞ்சமாய் கணக்கு பண்ண வேண்டும்.

குளிர்காலத்தைப் பொறுத்த வரை டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் மற்றும் விடுமுறைக் காலம். கடை கண்ணி போய் வருவது, தேவையே இல்லாத பொருட்களை சீப்பாய் வாங்கிக் குவிப்பது, அலுவலகத்தில் அபரிமிதமாய்ப் புரளும் சாக்லேட்டுகளில் முங்கி எழுவது என்று புத்தாண்டை நோக்கிய எதிர்பார்ப்பில் இந்த மாதத்தைக் கழித்து விடலாம். ஜனவரி கொஞ்சம் கஷ்டம். அலுவலகத்தில் நிஜமாகவே வேலை பார்க்க வேண்டும் என்ற விபரீதமான எதிர்பார்ப்புகளை எதிர் கொள்ள வேண்டும். புட்பால் ரசிகர் என்றால் கொஞ்சம் வார இறுதிகளை ஒப்பேற்றலாம்.

பிப்ரவரி ஆரம்பம் தான் குளிர்காலத்தின் மத்தி. குறிப்பாக அந்த Ground Hog day. அந்தப் பெருச்சாளி என்ன சொல்கிறது என்ற அசட்டு ஆவலில் ஒரு நாள் கழியும். மேலும் Groundhog day திரைப்படத்தை USA சேனலில் மீண்டும் மீண்டும் போடுவார்கள் (Think about THAT!). அதற்குப் பிறகு பிப்ரவரியில் அவ்வப்போது தலை காட்டி மறையும் குளிர் குறைந்த நாட்கள் Shelley-ஐ நினைவுபடுத்தும். தைரியமாக வசந்தகாலத்தைப் பற்றி கனவு காணத் துவங்கலாம்.

அப்படிக் கனவு காணத்துவங்கிய மறுநாள் கன்னத்தில் அறைவது போல ஒரு பனிப்புயல் தாக்கும். அஞ்சக் கூடாது. இது குளிர்காலத்தின் கடைசிச் சவால். மார்ச் ஆரம்பத்தில் இப்படிப் பூச்சாண்டி காட்டுவது தான் இந்தப் பருவத்தின் sick sense of humor. ஒழியட்டும் என்று விட்டு விட்டால் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தலைகாட்டத் துவங்கும் டுலிப் பூக்கள் வசந்தத்திற்குக் கட்டியங் கூறும். செர்ரிப்பூக்கள் பூப்பதற்கு நல்ல நாள் பார்க்கும். அப்புறம் ஒரு ஆறு மாதங்கள் கவலையில்லை. செருப்புப் போட்டுக் கொண்டு வெளியில் போகலாம், ஷார்ட்ஸ் போடலாம், பேஸ்பால் பார்க்கலாம், காரில் ஜன்னலைத் திறந்து...Stop, stop...கூடாது, இப்பொழுது அவ்வளவு தொலைவில் யோசிக்கக் கூடாது. இப்பொழுதிற்கு கிறிஸ்துமஸ், ஷாப்பிங், புத்தாண்டு - அவ்வளவுதான்.

கஷ்ட ஜீவனம், சாமி!

Sunday, December 11, 2005

இன்று பிறந்தனன்



"என் புருஷன் ஸ்ரீமான் சுப்பிரமனிய பாரதி இந்த நாட்டில் பிறந்தார்; வளர்ந்தார்; வாழ்ந்தார்; இறந்தார். அவருடைய ஸ்தூல தேகத்திற்கு முடிவு நேரிட்டு ஆத்மா விண்ணுலகம் சென்றுவிட்டது. கடவுளின் திருவிளையாடலில் இப்படி ஒரு ஆத்மா இவ்வுலகில் ஜனித்து சொற்ப காலந் தங்கி, சிற்சில காரியங்களை செய்துவிட்டு, திரும்பப் போய்விட வேண்டுமென்ற கட்டளையின்படி என் புருஷனும் ஜனித்து, செய்ய வேண்டிய காரியங்களை அவசர அவசரமாக செய்து விட்டு காலம் சமீபத்தவுடன் இறப்பதுவும் ஓர் அவசரமான கடமையாகக் கொண்டு அதனையும் செய்து மடிந்தார்.

...

உடல், பொருள், ஆவி மூன்றையும் தேச கைங்கரியத்திற்கு முழுமனதுடன் அர்ப்பணம் செய்தார்.ஸரஸ்வதி தேவி அவர் வாக்கில் நிர்த்தனஞ் செய்ய ஆரம்பித்தாள். " வந்தேமாதரம்" என்ற சப்தம் அவரது ஹிருதயத்திலிருந்து முழுத் தொனியுடன் கிளம்பிற்று; தமிழ்நாடெங்கும் பரவிற்று.வீடு வாசல் மனைவி, பிள்ளை, குட்டி, ஜாதி வித்தியாசம், அகந்தை முதலியவை முற்றும் மனதின்று விட்டு அகன்றன.தேசப் பிரஷ்டமானார்.புதுவையில் தேசபக்தி விரதத்தை பலவிதமாக அநுஷ்டித்தார்.திரும்ப வந்து தந்நாட்டை ஒரு முறை பார்க்க வேண்டுமென்ற அவா அதிகரித்தது. அதற்காகச் சில நிபந்தனைகளை ஒப்புக் கொண்டார்.மறுபடியும் சுதேசமித்திரனில் ஒரு வருஷம் உழைத்தார். தான் வந்த காரியம் முடிவடையவே விண்ணுலகம் சென்ற தேசபக்தர் கூட்டத்தில் தானும் போய்ச் சேர்ந்து கொண்டார்.

நமது நாடு இன்னது; நமது ஜனங்கள் யாவர்; நமது பூர்வோத்திரம் எத்தகையது; இன்று நமது நிலையென்ன; நமது சக்தி எம்மட்டு; நமது உணர்ச்சி எத்தன்மையது - இவைகளைப் பற்றிய விவகாரங்களும் சண்டைகளும், தீர்மானங்களும் அவருடைய ஜீவனுக்கு ஆதாரமாயிருந்தன. எதுவும் யோசித்தாக வேண்டியதில்லை. திடீர் திடீர் என்று எண்ணங்கள், புதிய புதிய கொள்கைகள், புதிய புதிய பாட்டுக்கள், அப் பாட்டுக்களுக்குப் புதிய புதிய மெட்டுக்கள் - எனது இரு காதுகளும், மனமும், ஹிருதயமும் நிரம்பித் ததும்பும் இந்த ஒரு பாக்கியம் நான் பெற்றேன்.இம்மாதிரி பாக்கியம் பெற எத்தனை கோடி ஜென்மம் வேண்டுமானாலும் திரும்பத் திரும்பப் பெறத் தயாராக இருக்கிறேன்."

- செல்லம்மாள் பாரதி

முழுக் கட்டுரையும்

Friday, December 09, 2005

மாற்றங்களும் நட்பும்

[உத்தரவாதமாக சொல்லக் கூடிய ஒரே விஷயம், கீழ்க்காணும் கட்டுரையைப் போல நான் அதிகம் எழுத மாட்டேன் என்பது தான்]

மனிதர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். சில சமயம் இலக்கில்லாமல்; சில சமயம் இலக்குகளோடு. சில சமயம் காரணமில்லாமல்; சில சமயம் காரணத்தோடு. சில சமயம் தெரிந்து; சில சமயம் தெரியாமல்.

எதற்காக மாறுகிறார்கள், எப்படி மாறுகிறார்கள் என்ற கேள்விகள் சுவாரசியமான பாடுபொருட்கள் தாம். ஆனால் நான் எழுத முற்படுவது அவற்றைப் பற்றியல்ல; மாறாக இந்த மாற்றங்களை அவனது நட்புச்சுற்றம் எப்படி எதிர்கொள்கிறது, மாறும் மனிதர்கள் தமது நட்புச் சுற்றத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பவை பற்றி. எனது சித்தாந்தம் யாதெனில், பல சமயங்கள் ஒரு மனிதனின் நண்பர்கள் அவனது மாற்றத்திற்குத் தடைக்கற்களாக இருக்கிறார்கள் என்பதும் சில சமயம் நட்புக்காக மாற்றங்களும் சில சமயம் மாற்றங்களுக்காக நட்புக்களும் பலியிடப்படுகின்றன என்பதும், இது நல்லதல்ல என்பதும்.

மாறுதல்களெல்லாம் வளர்ச்சிகளல்ல தான். உதாரணமாக ஒருவர் திடீரென்று புகைக்க ஆரம்பித்தால், அதற்கு அவரது நட்பு வட்டம் ஆதரவளிக்காமல், அவர் அந்தப் பழக்கத்தை விட நேர்ந்ததென்றால் சந்தோஷமான விஷயம் தான். நான் சொல்வது அத்தகைய மாற்றங்களல்ல. மாறாக, சித்தாந்த ரீதியான, உளவியல் ரீதியான, ஆளுமை ரீதியான மாறுதல்கள்.

கல்லூரியில் ஒரு நண்பன் இருந்தான். ரொம்பவும் நகைச்சுவையாய் பேசுவான், பழகுவான். ஒரே ஒரு கெட்ட பழக்கம் - கொஞ்சம் திருடுவான். பெரிசாய் இல்லை, சின்னச் சின்ன விஷயங்கள் - பேனா, செருப்பு, சீப்பு, ஷாம்பூ, இப்படி. நிஜமாகவே ஒரு பொழுது போக்காகத் தான் அதைச் செய்தான் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவனது தேவைக்கும் மிக அதிகமாக அவன் திருடிய விஷயங்களே அவனிடம் இருந்தன - கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பேனாக்கள்! வெளிமாநிலத்தில் படித்ததால் தமிழ் மாணவர்களான் நாங்கள் ஒரு நெருக்கமான வட்டம் (சாம்பார்க் கூட்டம்!). எங்களிடம் இந்தப் பழக்கத்தை மறைக்க அவன் முயற்சித்ததே இல்லை - முற்றிலும் மாறாக பெருமையாகச் சொல்லிக் கொள்வான். இன்று இவரிடமிருந்து இதைச் சுட்டேன், இப்படிச் சுட்டேன் என்று. எங்களுக்கும் பொழுது போகும் (இக்கட்டான நிலைமையில் ஒரு சேமிப்புக் கிடங்காகவும் அவனது அலமாரி எங்களுக்குப் பயன்பட்டது என்பது வேறு விஷயம்). அவனைப் பொறுத்த வரையில் அது தான் அவனது அடையாளம் - சிரிப்புத் திருடன் சிங்காரவேலு மாதிரி என்று சொல்லலாம்.

அந்தக் கல்லூரிக்குப் பிறகு எல்லோரும் பலவாறாகப் பிரிந்து சென்றோம். அவன் வர்த்தகக் கல்லூரி சென்றான், நான் முன்னோர் போட்ட பாதையில் அமெரிக்கா வந்து சேர்ந்தேன். சில வருடங்கள் கழித்து முதல் முறை சென்னை திரும்பிய போது, நண்பர்களுடன் ஹோட்டல் போகலாம் என்று எல்லாரையும் திரட்ட முனைந்தேன். பலரைப் பிடிக்க முடிந்தது, இவனைப் பிடிப்பது பிரம்ம பிரயத்தினமாக இருந்தது. ஒரு நிதி சேமிப்பு நிறுவனத்தில் மேலாளராக இருந்தான். அப்படி இப்படி சாக்கு சொல்ல, நான் விடாமல் முனைந்ததால் கடைசியில் வர ஒப்புக் கொண்டான்.

ஹோட்டல் போய் உட்கார்ந்து கொண்டோம். 'பிரிந்தவர் கூடினால் பேசவும் தோன்றுமோ' பிரச்னையெல்லாம் இல்லை. பேச்சு, பேச்சு, பேச்சு தான். கிண்டலும், கேலியும் சீண்டலுமாய் பொழுது நகர்ந்தது. நண்பனைப் பற்றி பேசியவர்களெல்லாம் அவனது 'சேகரிப்புப்' பழக்கத்தைப் பற்றி விடாமல் நக்கலடித்தார்கள். ஒவ்வொரு முறையும் அவன் கொஞ்சம் அசௌகரியமாய் இருந்தது எனக்குப் பின்னால் தான் உறைத்தது. அப்போது தெரியவில்லை. ஒருவன், 'டேய், உன்ன எப்டிடா ஃபைனான்ஸ் கம்பெனிக்குள்ள விட்டான்? வீட்ல கலெக்ஷன் ஆரம்பிச்சுட்டியா?' என்ற போது விழுந்து விழுந்து சிரித்தவர்களுள் நானும் ஒருவன் தான். அவன் முகம் உண்மையிலேயே சுருங்கிப் போனது, இருந்தாலும் சமாளித்துக் கொண்டான்.

ஆனால், நான் பின்பு யோசித்துப் பார்த்தேன் - அவன் மாறியிருக்கிறான், வளர்ந்திருக்கிறான், தனது சிறுபிள்ளைத்தனத்திலிருந்து வெளி வந்திருக்கிறான். நாங்கள் தான் அதை உணரவுமில்லை, அங்கீகரிக்கவுமில்லை. முன்பும் மற்ற நண்பர்களைச் சந்தித்த போது அவர்கள் இவ்வாறு பேசியிருக்க வேண்டும், அதனாலேயே வரத் தயங்கியிருக்கிறான் என்று புரிந்தது. கஷ்டமாக இருந்தது.

அதன் பிறகு பல முறை இந்தியா சென்றும் அவனைப் பார்க்க முடியவில்லை. எனது நண்பர்களும் அவன் தொடர்பு அற்றுப் போனதாகக் கூறி விட்டார்கள்.

இன்னொரு நண்பன் இருந்தான் (இருக்கிறான்). முன் சொன்னவனை விடவும் எனக்கு நெருக்கமானவன். இவனோடு நான் தர்க்கம் செய்யாத விஷயங்களே கிடையாது. புதிதாய் ஒரு சிந்தனை தோன்றினால் முதலில் வெள்ளோட்டம் பார்ப்பது அவனிடம் தான். டென்னிஸ் சுவர் பயிற்சி மாதிரி. சில சமயம் நான் சுவர், சில சமயம் அவன். குறிப்பாக நீண்ட நேரம் தர்க்கித்த ஒரு விஷயம் - வேறென்ன? - கடவுள் இருப்பைப் பற்றி தான். நான் தீவிர ஆத்திகன் இல்லையென்றாலும் இறை நம்பிக்கை உள்ளவன், அவன் நாத்திகன். இருவரும் கடுமையாக வாக்குவாதம் செய்திருக்கிறோம் - கல்லூரி நாட்களிலும் சரி, அதன் பின்னரும் சரி.

அவனும் அமெரிக்கா வந்தான், பின்பு வாஷிங்டன் வந்தான். எங்கள் வாதங்கள் தொடர்ந்தன. எங்கள் நிலைப்பாடுகள் அதிகம் மாறவில்லை, கற்றுக் கொண்ட புதிய வார்த்தைகளைப் பயன்படுத்தினோம், அவ்வளவுதான். திருமணங்கள் நடந்தன. வாஷிங்டனுக்கு வடக்கே அவனும் மேற்கே நானும் குடி பெயர்ந்தோம். அவ்வப்போது சந்தித்துக் கொள்ளும் போது வாதம் செய்ய நேரமில்லாமல் போனது.

பின்பு ஒரு நாள் இங்குள்ள கோவிலுக்கு மனைவியோடு சென்றிருந்தேன். சுற்றி முடித்து விட்டு வரும் போது, சத்தியநாராயணர் சன்னிதியில் சம்பிரம்மமாக மனைவியோடு உட்கார்ந்து பூஜை செய்து கொண்டிருந்தான் இவன்! அவன் என்னைப் பார்ப்பதற்குள் எனது ஆச்சரியத்தை மறைத்துக் கொண்டேன். என்னைப் பார்த்ததும் புன்னகைத்து வந்து அமரும்படி சைகை செய்தான். நாங்களும் அமர்ந்து பூஜை முடித்துக் கொண்டு பிரசாதம் வாங்கிக் கொண்டு சம்பிரதாயமாகப் பேசி விட்டு வந்து விட்டோம்.

கோவிலில் அவனைப் பார்த்த போது எனக்கு முந்தைய நண்பனைப் பற்றி திடீர் ஃப்ளாஷ் பேக்கெல்லாம் வந்து விடவில்லை. அவனிடம் பல கேள்விகள் கேட்டிருக்கலாம், பல வார்த்தைகள் சொல்லியிருக்கலாம், ஏதோ சொல்லவில்லை.

அப்பொழுதும் சரி, பிறகு அவன் வீட்டில் பூஜையறையைப் பார்த்த போதும் சரி, அவனது நெற்றியில் அவ்வப்போது தோன்றும் சின்னங்களைப் பார்த்த போதும் சரி, எதுவும் சொல்லாமலிருந்தது தான் சரி என்று தோன்றியது. அவனாக இதைப் பற்றி ஒரு நாள் பேசுவான், அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம்.

இந்த சிந்தனையைக் கொஞ்சம் உள்நோக்கியும் திருப்ப முடியும். நீண்ட நாட்கள் கழித்து நான் சந்திக்கும் நண்பர்கள் என்னிடம் தவறாமல் கூறுவது - 'நீ மாறவே இல்லடா, அப்பிடியே இருக்க...".

ஏன் என்று யோசிக்கிறேன்.

நோபல் நாக்-அவுட்!

இந்த வருடம் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்றவர் ஹாரி பிண்டர். இங்கிலாந்துக்காரர். நாடகாசிரியர் மற்றும் கவிஞர். இரண்டு நாட்களுக்கு முன்பு நோபல் பரிசு வழங்கும் விழாவில் கலந்து கொண்டு அவர் வழங்கிய ஏற்புரை, இப்பொழுது இணையத்தீயாகப் பரவிக் கொண்டிருக்கிறது. நோபல் பரிசுக்கான இணையத்தளம் போக்குவரத்து நெரிசலில் திணறிக் கொண்டிருக்கிறது.

கலை, கலைக்கும் யதார்த்தத்திற்குமான இடைவெளி, கலைஞனின் பணி என்று (by Nobel standards) சாதாரணமாகத் துவங்கியவர், சடாரென்று உக்கிரமூர்த்தியாகி அமெரிக்கா, நிகராகுவா, ஈராக் என்று அடித்தாட ஆரம்பித்து விட்டார். குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை டாராக்கி நாராக்கி சாறாக்கி விட்டார். Shades of Chomsky!

நிகராகுவா பற்றி அமெரிக்க வெளியுற்வுத் துறையினருடன் அவர் நிகழ்த்திய உரையாடல் ஒன்றைக் குறித்தும் பேசியிருக்கிறார். அதைப் படிக்கையில் சுளீரென்று கோபம் வருகிறது. அவரது உரையிலிருந்து:

I was present at a meeting at the US embassy in London in the late 1980s.

The United States Congress was about to decide whether to give more money to the Contras in their campaign against the state of Nicaragua. I was a member of a delegation speaking on behalf of Nicaragua but the most important member of this delegation was a Father John Metcalf. The leader of the US body was Raymond Seitz (then number two to the ambassador, later ambassador himself). Father Metcalf said: 'Sir, I am in charge of a parish in the north of Nicaragua. My parishioners built a school, a health centre, a cultural centre. We have lived in peace. A few months ago a Contra force attacked the parish. They destroyed everything: the school, the health centre, the cultural centre. They raped nurses and teachers, slaughtered doctors, in the most brutal manner. They behaved like savages. Please demand that the US government withdraw its support from this shocking terrorist activity.'

Raymond Seitz had a very good reputation as a rational, responsible and highly sophisticated man. He was greatly respected in diplomatic circles. He listened, paused and then spoke with some gravity. 'Father,' he said, 'let me tell you something. In war, innocent people always suffer.' There was a frozen silence. We stared at him. He did not flinch.

Innocent people, indeed, always suffer.

Finally somebody said: 'But in this case “innocent people” were the victims of a gruesome atrocity subsidised by your government, one among many. If Congress allows the Contras more money further atrocities of this kind will take place. Is this not the case? Is your government not therefore guilty of supporting acts of murder and destruction upon the citizens of a sovereign state?'

Seitz was imperturbable. 'I don't agree that the facts as presented support your assertions,' he said.

As we were leaving the Embassy a US aide told me that he enjoyed my plays. I did not reply.


முடிந்தால் முழு உரையையும் படியுங்கள்.

உரை பற்றி ஹிந்து வழியாக கார்டியன் கட்டுரை.

Thursday, December 08, 2005

சட்டையில் பாரதி!

வரும் ஞாயிறு மகாகவி பாரதியின் 123ஆவது பிறந்த தினம்.


சில வருடங்களுக்கு முன்பு பாரதியின் திருமுகமும், கவிதை வரிகளும் உள்ள டி-ஷர்ட்டுகள் இரண்டு வடிவமைத்திருந்தேன். மிகவும் எளிமையான, கலை நுணுக்கங்கள் அதிகமில்லாத வடிவமைப்புகள் என்றாலும், எனது நண்பர்களிடையே அவற்றிற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அவற்றில் பலவற்றை ஒரு தன்னார்வ நிறுவனத்தின் நிதி சேர்க்கைக்காக விற்கவும் செய்தோம்.

இன்று காலை ஒரு புதிய வடிவமைப்பை இவற்றுடன் சேர்த்திருக்கிறேன் (கறுப்பு டி-ஷர்ட்!). இவற்றை http://www.cafepress.com/bharathi என்ற தளத்திற்கு சென்று வாங்க முடியும்.

இம்முயற்சியில் எந்த லாப/வணிக நோக்கமும் இல்லை என்றறிக.

பி.கு: இந்த Cafepress வலைத்தளத்தில் ஏராளமான வித்தியாசமான பொருட்கள் கிடைக்கின்றன. உதாரணம்: நடிகை ஸ்னேகா உருவம் பதித்த Mouse-pad. அதற்கு உள்ள விவரணை - I am not kidding - "A Happy Cultural Tamil Girl for our Hand and Mouse". ஆண்டவா!

ஸ்பீல்பர்கின் புதிய படம்

அமெரிக்காவில் படங்களுக்கென்று சீசன்கள் இருக்கின்றன - எப்படிப்பட்ட படம் எப்பொழுது வரும் என்பது ஏறத்தாழ முன் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும். வருட ஆரம்பத்தில் பாடாவதிப் படங்கள், ஆஸ்கர் நடக்கும் மார்ச்சில் வெற்றி பெற்ற படங்களின் மீள் வெளியீடு, கோடையில் அடிதடி, மசாலாப் படங்கள், அக்டோபர் வாக்கில் (ஹாலோவீன் ஒட்டி) திகில் படங்கள் என வகுக்கப்பட்டிருக்கும்.

நவம்பர், டிசம்பர் மாதங்கள் ஆஸ்கருக்கென்றே எடுக்கப்பட்ட படங்கள் வெளியாகும் மாதங்கள். இந்த வருடமும், Walk the line, Memoirs of Geisha, Syriana போன்ற படங்கள் வந்துள்ளன அல்லது வரப்போகின்றன. (வெளியே நடுக்கும் குளிராக இருப்பதால், தியேட்டருக்குள் தஞ்சம் புகும் மக்களை மடக்கி நல்ல படம் பார்க்க வைத்து விடலாம் என்ற சூழ்ச்சியும் இதில் இருக்கிறது என்று நினைக்கிறேன்)


இந்த வருட அணிவகுப்பில் கிட்டத்தட்ட கடைசியாக வரப்போகும் படங்களில் ஒன்று ஸ்பீல்பர்கின் Munich என்ற படம் - டிசம்பர் 23 ரிலீஸ். இந்த விஷயம் இன்று காலை வரை எனக்குத் தெரியவில்லை (பொதுவாக என்னிடம் சொல்லாமல் படம் எடுக்க மாட்டார்...இந்த முறை மறந்திருக்கலாம்). ஸ்பீல்பர்க் இந்த வருடம் ஏற்கனவே ஒரு படம் (War of the Worlds) வெளியிட்டு விட்டார். அது கோடை ஸ்பெஷல், இது ஆஸ்கர் ஸ்பெஷல் போலும்.

இந்தப்படம் 1972 Munich'ல் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டியில் இஸ்ரேலைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பாலஸ்தீனியர்களால் கடத்தப்பட்டதைப் பற்றியது. Rotten tomatoes'ல் இருந்து:

"Munich recounts the dramatic story of the secret Israeli squad assigned to track down and assassinate 11 Palestinians believed to have planned the 1972 Munich massacre -- and the personal toll this mission of revenge takes on the team and the man who led it. Eric Bana (Troy) stars as the Mossad agent charged with leading the band of specialists brought together for this operation."

கண்டிப்பாக இது சற்றேனும் சர்ச்சைக்குள்ளாகும் என்பதில் சந்தேகமில்லை (இல்லாவிட்டாலும் எதையாவது கிளப்பி விட்டு விடுவார்கள்ல் கொஞ்சம் சர்ச்சை = நிறைய லாபம்). இருந்தாலும் ஸ்பீல்பர்க் படங்களில் சரக்கிருக்கிறதோ இல்லையோ, சுவாரசியத்துக்குக் குறைவிருக்காது என்பதால் தவறாமல் பார்க்க வேண்டும்.

Saturday, December 03, 2005

சென்னை வெள்ளம்: ஒரு தூரப் பார்வை

வாஷிங்டனில் உட்கார்ந்து கொண்டு சென்னை வெள்ளச் செய்திகளை கிரகித்துக் கொள்வதற்கு ஒரு suspension of disbelief தேவைப்படுகிறது; திரைப்படங்களில் அசாதாரணமான காட்சிகளைப் பார்க்கும் போது 'இதெல்லாம் சும்மா கிராஃபிக்ஸ்' என்பது போல இருக்கிறது. வானம் பார்த்த வறண்ட சென்னையில் மழை, வெள்ளம், பின் பெரு வெள்ளம் என்பதை ஜீரணிக்க முடியவில்லை.


நாராயணன், பிரகாஷ், பத்ரி ஆகியோர் பிரமாதமான வெள்ளப் பதிவுகளை எழுதி வருகிறார்கள். சென்னைக்கு மிக அண்மையில் இருப்பது போன்ற பிரமை உண்டாகிறது. சன் செய்திகள், தினமணி/ஹிந்து/தினமலர் ஆகியவற்றைக் கடந்த citizen's journalism. ஜன்னலுக்கு வெளியே எட்டிப்பார்த்து விட்டு வந்து உட்கார்ந்து கொண்டு பதிவெழுதும் அவர்களைப் பார்க்கையில் ஒரு வகையில் கொஞ்சம் weird பொறாமையாகவும் இருக்கிறது.

இங்கு எங்களோடு இருக்கும் எனது மாமனார் நீண்ட நாள் சென்னை வாசி, விசுவாசி. சன் செய்திகள், இந்தியப் பத்திரிக்கைகள், செய்தித் தளங்கள் இவற்றைப் படிக்கும் இடையில், இடைவெளியில், இந்த வெள்ளப் பதிவுகளையும் விடாமல் படித்துக் கொண்டிருக்கிறார் - படித்து விட்டு அவர் சொல்வதையெல்லாம் பின்னூட்டமிட்டால், மூன்றாம் வலைப்பதிவுலகப் போர் துவங்கலாம். என்னதான் வெள்ளம், கஷ்டம் என்றாலும், இத்தனை நீர்ப்பெருக்கிருக்கும் சென்னையின் அலங்கோலாகலத்தைப் பார்க்காமல் இங்கு இருக்கிறோமே என்ற ஆற்றாமை அவர் பேச்சில் தெளிவாகத் தெரிகிறது.

இந்த வருடமாவது பொய்க்காமல் மழை வருமா என்ற வழக்கமான சந்தேகத்தில் தொடக்கம்; மழை சீக்கிரமே பெய்யத் தொடங்கியதும் நம்பிக்கை; பெரு மழை பெய்ததும் நிம்மதி; ஏரிகள் விடுவிடுவென நிரம்பத்துவங்கியதும் சந்தோஷம்; மழை வெள்ளமாகி, தெருக்கள் ஆறுகளாகத் துவங்கியதும் கவலை; வீட்டுக்குள் நீர்ப்புகுந்ததும் 'எப்போ நிற்கும் இந்த சனியன் பிடித்த மழை' என்ற எரிச்சல் - நாற்பது நாட்களில் சென்னைவாசிகள் ஒரு 180 டிகிரி மாற்றத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.

யோசித்துப் பார்த்தால், வாஷிங்டனில் இருந்தாலும், ஒவ்வொரு சென்னைச் செய்தியையும் அணு அணுவாகத் தொடர்ந்து வருவதால், அதே மாற்றத்தை நாங்களும் - சென்னையில் இருப்பவர்கள் கொஞ்சம் ஈரமாக இருக்கிறார்கள், நாங்கள் உலர்ந்து இருக்கிறோம் என்ற ஒரு சின்ன technical difference-ஐக் கடந்து பார்த்தால் - அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்று நினைக்கிறேன்.

சென்னைவாசிகள் வீட்டிலிருக்கும் நீரை வெளியில் இறைத்து முடித்து விட்டு, அப்புறம் அடிக்க வாருங்கள். :-)

Friday, December 02, 2005

மாயா பஜார்

எனது நண்பரொருவர் தமிழகத்தில் ஒரு பிரபல நடிகரின் நண்பர். சமீபத்தில் இந்தியா சென்று வந்திருந்தார். பேச்சு வாக்கில் அவர் சொன்ன சம்பவங்கள் இரண்டு (அவர் அனுமதியோடு):

"ரீசண்டா சரத்குமாரோட நூறாவது படம் வந்தது தெரியுமா? தலைமகன்.. அதுக்கு ஒரு விழா நடந்தது, நம்ம ஃப்ரெண்டு என்னையும் வாங்கன்னார், சரின்னு கூடப் போனேன். அங்க உள்ள போனா, மேடையில சரத்குமார் நிக்கறாரு, எல்லாரும் போய் வாழ்த்துச் சொல்றாங்க, இவர் பொன்னாடை போத்தி நன்றி சொல்றாரு. நம்ம நண்பர் நைசா அங்கெல்லாம் போக வேண்டாம்னு நழுவப் பார்த்தாரு, ஆனால் சரத் மேடையிலிருந்து 'சார், (பெயர் சொல்லி) இங்க வாங்க!' அப்டீன்னார். இவர் என்னப் பார்த்து 'நீங்களும் வாங்க'ன்னு இழுத்திட்டுப் போனாரு...மேடையில போனதும், நண்பர் சரத்குமார கங்கிராஜுலேட் பண்ணினார், என்னை introduce பண்ணினார்...'

'என்ன சொன்னார், அமெரிக்காவில தொழிலதிபர்-ன்னாரா? ஹி ஹி..'

'டேய், கதையக் கேளுடா...அப்புறம் இவருக்கு பொன்னாடை போர்த்தினார்...'

'உங்களுக்கு?'

'என்ன மேல விட்டதே பெரிய விஷயம்...நான் சும்மா 'கங்கிராஜுலேஷன்ஸ்' அப்டின்னு சரத் கையக் குலுக்கிட்டுத் திரும்பினா , பக்கத்துல ராதிகா இருந்தாங்க, நான் அவங்க கிட்டயும் 'ஹலோ' அப்டீன்னு கைகுலுக்கிட்டு ஸ்டேஜ விட்டு நடந்தேன்...திடீர்னு பார்த்தா, எல்லா காமெரா லைட்டும் என் மேல! எல்லாக் காமராவும் என்னயே ஃபாலோ பண்ணி நான் சீட்டுல வந்து உட்கார்ர வரைக்கும் பின்னாடியே வராங்க! என்னடான்னு பார்த்தா, எல்லாரும் ராதிகாக்கு வணக்கம் சொல்றப்போ நான் மட்டும் கைகுலுக்கிட்டேனாம்! சரி, இவரு எதோ பெரிய பார்ட்டி அப்டின்னு கவர் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க, அதுக்கப்புறம் ஸ்டேஜ்-லேர்ந்து இறங்கறவங்க எல்லாரும் எனக்கு ஒரு வணக்கம் வெச்சுட்டுப் போறாங்க, பக்கத்துல நண்பர் 'இதான் யோகங்கறது...என்னக் கூடக் கண்டுக்க மாட்டேங்கறாங்க பாரு' அப்டீன்னாரு!

அது மட்டும் இல்ல, அந்த விழாவில பார்த்த ஒரு ஆள் எங்கியோ பார்த்த மாதிரி இருந்தது...மறுநாள் காலைல முடிவெட்டப் போனா, அவர் தான் என்னோட பார்பர்! ஒரு சரத்குமார் சங்கத்துல இருக்காராம். அவர் என்னப் பார்த்துட்டு, 'சார், உங்களுக்கு இவ்வளவு நாளா முடி வெட்டறேன், நீங்க இவ்ளோ பெரிய ஆளுன்னு தெரியாமப் போச்சே சார்' அப்டீங்கறார்! அவர் கிட்ட என்னோட பிஸினஸ் கார்டெல்லாம் காமிச்சு, நான் யாருன்னு நம்ப வைக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆச்சு!'

'நல்ல கத...'

'இன்னொண்ணு கேளு...ஒரு நாள் ஒரு கிஃப்ட் வாங்கணும்னு வாட்ச் கடை ஒண்ணுக்குக் கிளம்பினேன்..நண்பரும் கூட வரேன்னார். ராத்திரி பத்து மணி சுமார் இருக்கும். நாங்க போன சமயம் வாட்ச் கடைய மூடிட்டிருந்தான்..இவரப் பார்த்ததும் டென்ஷனாகி தொறந்துட்டான். நாங்க போய் ஒரு பத்து நிமிஷம் பார்த்துட்டு ஒரு வாட்ச் செலக்ட் பண்ணினோம். நான் பைசா கொடுக்கப் போனேன், நண்பர் காருக்குப் போயிட்டார். கௌண்டர்ல அந்த கடை காஷியர் 'சார், ஒரு ஆட்டோகிராப் வாங்கிக் கொடுங்க சார்' அப்டீன்னான். நான் 'சரிப்பா, பில்லப் போட்டு முடிச்சதும், வெளிய வா, கார்ல இருக்கார், கேட்டாப் போட்டுத்தருவார்' அப்டீன்னேன். பில் போட்டதும், நான் கார்ல போய் உட்கார்ந்தேன். இவன் வந்து 'சார் ஒரு ஆட்டொகிராப்' ன்னு ஒரு புக்க நீட்டினான். நண்பர் போட்டுக் கொடுத்தார். அவன் உடனே, 'சார் நீங்க...' அப்டீன்னு எங்கிட்ட புக்க நீட்டறான்! நான் 'தம்பி, நான்லாம் யாருமில்ல' அப்டின்னேன். அதுக்கு அவன், 'பரவாயில்ல சார், என்னிக்காவது ஒரு நாள் நீங்க பெரிய ஆள் ஆகிடுவீங்க, அப்பொ நான் சான்ஸ் மிஸ் பண்ணிட்டேன்னு வருத்தப்படக்கூடாதில்ல' அப்டீங்கறான்!'

'ஆட்டொகிராப் போட்டீங்களா?'

'வேற வழி? போட்டுட்டு கிளம்பறச்சே எங்களுக்கு சிரிக்கறதா அழறதான்னு தெரியல...'

பி.கு: இதைப் படித்து வேறொரு வலைப்பதிவுக்குப் போட்டியாக ஏதாவது கிளம்புகிறேனா என்று கேட்டால், with all due respect, இல்லை. :-)

Thursday, December 01, 2005

நாணயம் விகடன்!


விகடன் பத்திரிக்கையினர் 'நாணயம் விகடன்' என்று ஒரு புதிய வர்த்தக சஞ்சிகை துவங்கி இருக்கிறார்கள். முதல் இதழை சற்று முன்பு அவர்களது வலைத்தளத்தில் வாசித்தேன். நன்றாகவே இருக்கிறது. பரிச்சயமான விகடன் நடையில் மருத்துவக் காப்பீடு, பங்குச் சந்தை, ம்யூச்சுவல் ஃபண்ட், தொழில் முனைவு, கேள்வி-பதில்கள் எனப் பல சங்கதிகள் உள்ளன.

முயற்சியை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். வாழ்த்துக்கள். ஒரே ஒரு வேண்டுகோள் - பங்குச் சந்தை, பண முதலீடு போன்றவை மட்டுமின்றி, macro economics எனப்படும் பரந்த பொருளாதாரம் குறித்த செய்திகளும், கட்டுரைகளும் கூட அவ்வப்போதாவது இடம் பெற வேண்டும். அப்போதுதான், முதலீடுகளுக்கும் தேசியப் பொருளாதார வளர்ச்சிக்கும் என்ன சம்பந்தம் என்பதும் தேசியப் பொருளாதார வளர்ச்சிக்கும் எல்லாத் தளத்து மக்கள் வாழ்வு நிலை உயர்விற்கும் என்ன சம்பந்தம் என்பதும் விளங்கும்.

(நடுக்குறிப்பு: இந்த முதல் இதழ் பற்றி 'உருப்படாதது' நாரயணன் உருப்படியான விமரிசனம் எழுதியிருக்கிறார். இங்கே.

கீழே சுய புராணம்.)

பங்குச் சந்தை விஷயங்களில் நான் மிகவும் திறமை வாய்ந்தவன். யாராலும் செய்ய முடியாத விஷயங்களை சர்வ சாதாரணமாக சாதித்துக் காட்டியவன்.

அமெரிக்க பங்குச் சந்தையின் பொற்காலம் 1995லிருந்து 2000 ஆண்டு வரை. எந்தக் கழிசடைக் கம்பெனியும் கொழித்துக் கொண்டிருந்த காலம். போட்ட பணம் ஆறு மாதங்களில் இரண்டு மடங்கானால் கூட பணம் போட்டவர் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்ட காலம். எல்லா பார்ட்டிகளிலும் பங்குச் சந்தைக் குறியீடுகள் மூன்றெழுத்து மந்திரங்களாக உச்சரிக்கப்பட்ட காலம்.

1995இல், நான் இங்கே வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடம் ஆகியிருந்தது. கையில் உபரியாய் பணம் இருப்பது கொஞ்சம் அபரிச்சயமான விஷயமாக இருந்தது. அதனால் எனது நண்பர் சார்ல்ஸ் ஷ்வாப் நடத்தும் நிறுவனத்தில் கொஞ்சம் போட்டு வைக்க முடிவு செய்தேன். ஒரு எட்டாயிரம் டாலர் தேற்றி புரோக்கர் கையில் கொடுத்த போது, 'மகனே, மார்ஜினில் மட்டும் விளையாடாதே!' என்று அன்போடு அறிவுரை கூறினார்.

ஆனால் எனது திறமைகளைப் பற்றி அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தொழில்நுட்பக் கம்பெனிகளும் நாஸ்டாக்கும் ஏணியில் ஏறாமல், ஏரோப்ளேனில் ஏறிக்கொண்டிருந்தன. நானும் எனது பிரத்யேக தொழில்நுட்ப அறிவை வீணடிக்காமல் புகுந்து விளையாடினேன். வாங்கி விற்றேன், விற்று வாங்கினேன், நடுப்பக்கத்தில் வாங்கினேன், மார்ஜினில் வாங்கினேன்....

ஒரு வெள்ளிக்கிழமை, நியூயார்க் தெருவில் நடந்து கொண்டிருந்த போது, பொதுத்தொலைபேசி எடுத்து ஒரு கம்பெனியின் பங்கு விலையை விசாரித்து, அங்கேயே, அப்பொழுதே, அந்தப் ப்ளாட்ஃபாரத்திலிருந்தே அதை விற்றேன்.

2000ம் ஆண்டில் நான் ஒரு பங்குத் தரகர் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்படிச் சேரும் போது மற்றொரு நிறுவனத்தில் பங்குகள் வைத்திருப்பது குற்றமாதாலால், எனது சார்ல்ஸ் ஷ்வாப் கணக்கை மூட வேண்டியிருந்தது. அவர்களோடு பேசிய போது எட்டாயிரம் போட்ட கணக்கில் எவ்வளவு மீதி இருக்கிறது என்று விசாரித்தேன்.

"நீங்கள் எங்களுக்கு இரண்டு டாலர் நாற்பது செண்ட் தர வேண்டும்."

"அப்படியா??"

"ஆமாம்"

"ம்ம்ம்..."

"Ok, பரவாயில்லை, நீங்கள் ஐந்து வருடங்கள் கணக்கு வைத்திருந்திருக்கிறீர்கள், இந்தத் தொகையை மன்னித்து விடுகிறோம். கணக்கை மூடி விடுகிறோம்."

"அப்படியா, ரொம்ப நன்றி!"