<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Monday, February 27, 2006

ஒரு புத்தகமும் ஒரு புதிரும்

"The Curious Incident of the Dog in the Night-time"
Mark Haddon

இது மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியான புத்தகம்; நான் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு படித்தது.

மதியிறுக்க நோய் (Autism) பற்றி நான் முன்பு எழுதியிருக்கிறேன். குழந்தைகள் வளரும் பருவத்தில் அவர்கள் மூளையில் வினோதமான பாதிப்புகளை உண்டாக்கி அவர்களது சொல், செயல், நடத்தை, பழக்க வழக்கங்களைப் பாதிக்கும் இந்நோயிற்கு இன்று வரை ஆதி அந்தம் தெரியவில்லை. இது பற்றி நான் எழுதிய அதே கால கட்டத்தில் சஞ்ஜீத் ஒரு அருமையான சிறுகதை ஒன்று எழுதியிருந்தார். இந்நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையின் பார்வையில் எழுதப்பட்டது அக்கதை.

அந்தக் கதையைப் போலவே, இந்த நாவலும் முழுக்க முழுக்க ஒரு மதியிறுக்கச் சிறுவனின் பார்வையில் எழுதப்பட்டது. இங்கிலாந்தில் ஒரு சிறிய ஊரில் ஒரு தந்தையும் மகனும் வசிக்கிறார்கள். ஒரு நாள் அவர்களது வீட்டுக்கருகில் ஒரு வீட்டின் வாசலில் ஒரு நாய் இறந்து கிடக்கிறது. அந்த நாய் இறந்தது எப்படி என்பதை இந்தச் சிறுவன் துப்புத்துலக்குவதாக ஆரம்பிக்கும் இக்கதை மெல்ல மெல்ல அவனது வாழ்க்கை, பள்ளி, தந்தை, தாய் என அவனது உலகம் பற்றிய விவரங்களோடு விரிகிறது.

கதை அந்த நாயைப் பற்றியோ, அதன் மரணத்தைப் பற்றியோ இல்லை. மாறாக, மதியிறுக்கம் எப்படி ஒரு சிறுவனின் உலகப் பார்வையை மாற்றுகிறது, அவனது குடும்பத்தை பாதிக்கிறது, அவற்றை அச்சிறுவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பனவற்றைப் பற்றியது. சிறுவனின் பார்வையில் சொல்லப்படுவதால், அவனது சமூகத்தைப் பற்றிய புரிதல் அவனுக்கு வளர வளரத்தான் நமக்கு வளருகிறது. அவனது மனமும் உடலும் மேற்கொள்ளும் பயணங்களை நாமும் மேற்கொள்கிறோம். அவனுக்காகப் பரிதாபப்படுகிறோம், பதைபதைக்கிறோம், அவனது வெற்றிகளில் மிகவும் சந்தோஷம் கொள்கிறோம். கதையின் பிற்பகுதியில், அழத்தெரியாத அவனுக்காக மிகவும் அழுகிறோம்.

எளிமையாக சொல்லப்பட்ட அருமையான கதை. சிறிய புத்தகம் தான்; வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாகப் படியுங்கள்.

புத்தகத்தில் வரும் சிறுவன் கணிதத்திலும் தர்க்கரீதியாக சிந்திப்பதிலும் மிகவும் கெட்டிக்காரன் (மதியிறுக்கக் குழந்தைகள் அனைவருக்கும் இத்தகைய விசேட சக்திகள் வாய்ப்பதில்லை). எந்த ஒரு விஷயத்தையும் உணர்வு பூர்வமாகப் பார்க்கத் தெரியாது தர்க்க ரீதியாக மட்டுமே பார்க்கத் தெரிந்தவன். புத்தகம் முழுவதும் கணக்குப் புதிர்களும் கேள்விகளும் நிறைய இடம் பெறுகின்றன. அவனது உலகத்தைப் புரிந்து கொள்வதற்கும் இப்புதிர்கள் அவனுக்கு உதவுகின்றன.

அப்படி வரும் ஒரு புதிர் கொஞ்சம் சுவாரசியமானது.

நமது சகுந்தலா தேவி போல், அமெரிக்காவில் மேரிலின் வான் சாவந்த் என்பவர் ஒரு புகழ் பெற்ற புதிர் மேதை. பல வருடங்களுக்கு முன்பு அவரிடம் இப்புதிர் சொல்லப்பட்ட போது அவர் ஒரு விடை சொன்னார். ஆனால், அவ்விடையை நாடு முழுவதிலும் பல கணிதப் பேராசிரியர்கள் தவறு என்று சொன்னார்கள். சில வாரங்கள் சச்சரவிற்குப் பின், மேரிலின் சொன்னது தான் சரி என்று நிரூபணமாயிற்று. இதைப் படித்த பின்னர், எனது நண்பர்களிடமும் இவ்விடையை ஸ்தாபிப்பதற்கு எனக்கு மிகவும் சிரமமாய் இருந்தது.

முஸ்தீபுகள் போதும். புதிர் இதோ:


"நீங்கள் ஒரு தொலைக்காட்சி விளையாட்டுப் போட்டியில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். போட்டியை நடத்துபவர், உங்களிடம் மூன்று மூடிய கதவுகளைக் காட்டுகிறார். ஒரு கதவின் பின்னால் ஒரு கார் இருக்கிறது என்றும் மீதி இரண்டு கதவுகளின் பின்னாலும் இரண்டு ஆடுகள் நிற்கின்றன என்றும் உங்களிடம் தெரிவிக்கிறார். ஒரு கதவைத் தேர்ந்தெடுங்கள் என்று சொல்கிறார். நீங்கள் ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறீர்கள். உடனே அவர் மீதி இருக்கும் இரு கதவுகளில் ஒன்றைத் திறந்து, அதன் பின்னால் ஆடு நிற்பதைக் காட்டுகிறார். இப்பொழுது அவர் உங்களிடம் கேட்கிறார் - "உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு தருகிறேன், நீங்கள் முதலில் சொன்ன கதவைத் திறக்கட்டுமா, இல்லை உங்கள் தேர்வை மாற்றிக் கொள்கிறீர்களா?" என்று. உங்கள் பதில் என்ன?"

அதாவது, உங்கள் தேர்வை மாற்றிக் கொள்வதன் மூலம் உங்கள் வெற்றி வாய்ப்பு கூடுகிறதா என்பது கேள்வி.

விடைக்கான சுட்டி கீழே இருக்கிறது. யோசித்து விட்டு சரி பாருங்கள்.

விடையும் விளக்கமும்.


Sunday, February 26, 2006

சண்டே போஸ்ட் - 3

இன்றைய வாஷிங்டன் போஸ்டிலிருந்து சில சுவாரசியமான பத்திகள்:

1. அமெரிக்கா, இந்தியா, அணுமின்சாரம் - இந்திய-அமெரிக்க அணுமின்சார உற்பத்தி ஒப்பந்தம், இந்த வார புஷ் விஜயத்தினை ஒட்டி தலையங்கச் செய்தி ஆகி இருக்கிறது. தலையங்கத்திலிருந்து:

"From the start, there were doubts about this policy. It wasn't clear, for example, that India was ready to become a useful ally; the country's anti-American left wing, which is represented in the current coalition government, continues to fight a rear-guard action against the largely pro-American commercial class that has emerged thanks to rapid economic growth since the early 1990s."

2. துறைமுகச் சச்சரவு - அமெரிக்காவின் பிரதானமான ஆறு துறைமுகங்களை நிர்வகிக்கும் பொறுப்பு ஒரு அரபு நிறுவனத்திற்குக் கைமாறுவது சென்ற வாரம் முழுவதும் செய்திகளை ஆக்கிரமித்திருந்தது. நியூ யார்க், பால்டிமோர், மியாமி, நியூ ஆர்லியன்ஸ் ஆகிய நகரங்களில் உள்ள துறைமுகங்கள் இந்நாட்டின் முக்கிய நுழைவாயில்கள். இவை மூலமாக வரும் சரக்குகள் சரியாகப் பரிசோதிக்கப்படுவதில்லை என்றும் இவைகளால் அமெரிக்காவிற்கு பெரும் ஆபத்து வரப் போகிறது என்றும் 9/11க்குப் பின்னால் பரவலாகப் பேசப்பட்டுக் கொண்டிருந்தது. இப்பொழுது இத்துறைமுகங்களை நிர்வகிக்கும் பொறுப்பை வகித்து வந்த ஒரு இங்கிலாந்து நிறுவனத்திடமிருந்து அப்பொறுப்பை ஒரு துபாய் நிறுவனம் வாங்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது. புஷ் அரசாங்கத்தின் இடைநிலை, கடைநிலை ஊழியர்கள் இம்மாற்றத்தை ஆசிர்வதித்து விட்டனர் (கடைசி நிமிடம் வரை இது புஷ்ஷிற்குத் தெரியாது என்று சாதிக்கின்றனர், எந்த அளவு உண்மையோ!). ஆனால், இந்தச் செய்தி வெளியே வந்ததும் வலது, இடது என்று எல்லா பக்கத்து சார்களும், சாரிகளும் இதை எதிர்த்து, "ஒரு அரபு நிறுவனம் நமது துறைமுகங்களிலா, Et tu Bush?" என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். புஷ் கொஞ்சம் பின்வாங்கி, "டைம் அவுட்" கேட்டிருக்கிறார். இன்றைய நிலை இப்படி.

இவ்விஷயத்தில் சில நாட்களுக்கு முன் வெளியான போஸ்டின் தலையங்கம் இதில் ஆட்சேபிக்க எதுவுமில்லை என்று கருத்து கூறியது; நியூயார்க் டைம்ஸின் கருத்து நேர்மாறாக இருந்தது.

இன்றைய கட்டுரையில், பால்டிமோர் துறைமுகம் செயல்படுவது எப்படி, அதில் வேலை செய்பவர்களின் பணிகள் என்ன, புதிய நிறுவனத்தின் பங்கு என்னவாயிருக்கும் என்பன ஆராயப்படுகின்றன.

3. பின் லாடன் எங்கே? - திடீரென்று நினைவு வந்தது போல், போஸ்டின் ஞாயிறு கருத்து மலர்க்கொத்தில் ஏகப்பட்ட பின்லேடன் கட்டுரைகள் வெளியாகி உள்ளன. அவற்றுள் சுவாரசியமானது, பின் லாடனுக்கும், பாகிஸ்தானுக்குமான தொடர்பு பற்றிய கட்டுரை. கட்டுரையிலிருந்து:

"Musharraf did capture some Arab members of al Qaeda, but he avoided the Taliban because he was convinced that the U.S.-led coalition forces would not stay long in Afghanistan. He wanted to maintain the Taliban as a strategic option in case Afghanistan dissolved into civil war and chaos again. The army also protected extremist Kashmiri groups who had trained in Afghanistan before 9/11 and now had to be repositioned."

4. பாலஸ்தீனியப் பிரதமர் - ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த புதிய பாலஸ்தீனியப் பிரதமருடன் பேட்டி. என்ன கேட்டாலும், "முதலில் இஸ்ரேல் இதைச் செய்யட்டும்" அல்லது "முதலில் இஸ்ரேல் இதைச் சொல்லட்டும்" என்ற ரீதியில் பதில் சொல்கிறார். உதாரணம்:

Do you recognize Israel's right to exist?

The answer is to let Israel say it will recognize a Palestinian state along the 1967 borders, release the prisoners and recognize the rights of the refugees to return to Israel. Hamas will have a position if this occurs.

5. குளிர்கால ஒலிம்பிக்ஸ் - இரண்டு வாரங்களாக நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக்ஸ் 'போட்டிகளில்' எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது - நிறைவு விழா.

6. மெட்ரோ கதைகள் - நியூயார்க்கின் சுரங்க ரயில்களோடு ஒப்பிடுகையில், வாஷிங்டனின் ரயில்கள் கொஞ்சம் க்ளாமர் குறைவானது தான். இருந்தாலும், இந்த ரயில் பயணங்களில் தமக்கு ஏற்பட்ட வினோதமான, விளையாட்டுத்தனமான நிகழ்வுகளை வாசகர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். கட்டுரையிலிருந்து:

TWEET, TWEET

A man suddenly boarded a train with his parakeet -- in a huge bird cage, with a towel or small blanket over it. He then proceeded to chitchat with his bird, asking him how he was enjoying the subway ride, telling him not to worry, we'll be there soon, reassuring him he'd get some extra treats later! They rode for at least five or six stops. I've always wondered if the bird has a fare card?

-- Karen Dunham, Germantown


Sunday, February 19, 2006

சண்டே போஸ்ட் - 2

இன்றைய வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையிலிருந்து சுவாரசியமான சில கட்டுரைகள்:

1. சைனாவில் இணையம், ஊடகம், தணிக்கை - இன்றைய சைனாவில் இணையப் போக்குவரத்தின் தணிக்கை கடுமை கூடியிருப்பது முதல் பக்கச் செய்தி ஆகியிருக்கிறது. சைனாவில் இணையத்தில் எந்தத் தளங்கள், எந்தப் பக்கங்கள் படிக்கப் படலாம் என்பது தொடர்ந்து, தீவிரமாகக் கட்டுப்படுத்தபடுகிறது(பார்க்க படம்).

(யோசித்துப் பார்த்தால், நாம் வேண்டாத மின்னஞ்சல்களைத்(spam) தவிர்க்கப் பயன்படுத்தும் bayesian filtering போன்ற தொழில் நுட்பங்கள், சைனா போன்ற நாடுகளின் தணிக்கை முயற்சிகளுக்கும் பயன்படுகின்றன. இந்தத் யுக்திகள் வளர வளர, அவர்களது செயல் திறனும் வளர்கிறது). இந்த முக்கியமான கருத்துச் சுதந்திர விஷயத்தில் சைனாவின் போக்கைக் கண்டித்து ஹிந்துவில் சீக்கிரமே ஒரு தலையங்கம் வரும் என்று எதிர்பார்க்கலாம் (just kidding).

2. 'கார்ட்டூன்கள் வெளியிட்டது சரியே' - டென்மார்க் பத்திரிக்கையாசிரியர் - உலகெங்கும் இஸ்லாமியர்களைப் போராட்டத்தில் ஈடுபட வைத்த முகமது நபி கார்ட்டூன்களை வெளியிட்டது சரியான முடிவுதான் என்று டென்மார்க் பத்திரிக்கையான ஹைலாண்ட் போஸ்டன்ஸின் ஆசிரியர் ஃப்ளெமிங் ரோஸ் வாதிடுகிறார். இக்கட்டுரையைப் படித்த பின்னும், அவற்றை வெளியிட்டது தவறு என்று தான் நான் நினைக்கிறேன். கட்டுரையிலிருந்து:

"I agree that the freedom to publish things doesn't mean you publish everything. Jyllands-Posten would not publish pornographic images or graphic details of dead bodies; swear words rarely make it into our pages. So we are not fundamentalists in our support for freedom of expression....The idea wasn't to provoke gratuitously -- and we certainly didn't intend to trigger violent demonstrations throughout the Muslim world. Our goal was simply to push back self-imposed limits on expression that seemed to be closing in tighter."

3. புதிய விற்பனை யுத்திகள் - பொருட்களின், குறிப்பாக உணவுப் பொருட்களின், விளம்பர, விற்பனை யுத்திகள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே இருக்கின்றன. Literally. இப்பொழுது கூட இன்னொன்றும் சேர்ந்து கொண்டிருக்கிறது. வடிவம், வண்ணம் இவை தவிர இப்பொழுது வாசத்தையும் வைத்து எப்படி வாடிக்கையாளர்களைக் கவர்வது என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்:

"Soon, just strolling the aisles at a grocery, drug or big-box store could cause sensory overload. Manufacturers are spending more to design packages that blink, beep, yell and waft scents at shoppers. Though some companies have created paper-thin, flexible video displays and tiny speakers, aroma seems to be the biggest payoff in packaging, thanks to its powerful link to memory and emotion."

நுகர்வோரை, நுகர்வோராக மாற்றும் என்று நம்புகிறார்கள் போலும் :-)

4. ஒரு அமெரிக்கப் பெண்ணின் இந்தியப் பயணக்கதை - I'm a sucker for stories of western tourists' experiences in India. இந்தக் கட்டுரை ஒரு பயணக்குழுவில் சேர்ந்து பயணித்த ஒரு பெண்ணின் கதையைச் சுவையாகச் சொல்கிறது. இந்தியாவைப் பற்றிப் பேசும் அளவிற்கு, பயணக்குழுக்களைப் பற்றியும் பேசுகிறது.

5. கொந்துதல் (hacking), அடையாளம் திருடுதல் ஆகியவை பற்றி சற்று நீளமான ஒரு கட்டுரை - கரப்பான்பூச்சி போல் எத்தனை அடித்தாலும் சாகாது, துள்ளித் துள்ளி வந்து உங்கள் கணினியின் திரையை ஆக்கிரமிக்கும் விளம்பரங்கள் எப்படி உருவாகுகின்றன? 'எங்கிருந்து வருகுவதோ, இவ்விளம்பரங்கள் யாவர் செய்குவதோ?' என்று நீங்கள் யோசித்தால், இக்கட்டுரை விடை தருகிறது. முக்கியமாக இத்தகைய ஒரு கொந்தனைக் கண்டுபிடித்து, பேட்டி கண்டு, அந்த நிழலுலகம் எப்படிச் செயல்படுகிறது என்று விளக்குகிறது. இங்கேயும் நடுத்தெருவில் கேரம் போர்ட் ஆடுவார்களா என்று விசாரிக்க வேண்டும். :-)

6. வாஷிங்டனில் ஒரு புதிய இந்திய உணவகம் பற்றி மதிப்பீடு - ரசிகா என்னும் ஒரு புதிய இந்திய உணவகம் பற்றி புரியாத வார்த்தைகளில் ஒரு மதிப்பீடு. சொதப்பல் மேற்கோள் - "While the griddle and the barbecue are hyped at Rasika -- which means "flavors" in Sanskrit -- that shouldn't stop you from venturing into other territory." அமெரிக்கன் ஆங்கிலம் போல அமெரிக்க சமஸ்கிருதமும் இருக்கிறது போலும்!

வாசிங்க, வாசிங்க, வாசிச்சுக்கிட்டே இருங்க!


Wednesday, February 15, 2006

சுஜாதாவின் 'பூக்குட்டி'


எழுத்தாளர் சுஜாதாவின் கையொப்பத்தோடு அவரது குழந்தைகளுக்கான புத்தகமான 'பூக்குட்டி' இன்று வீடு வந்து சேர்ந்தது (நன்றி: எனி இந்தியன்). அழகான, கைக்கடக்கமான புத்தகம் - இளஞ்சிவப்பு வண்ணத்தில் தடிமனான அட்டையும், வழவழப்பான உயர் ரகத் தாள்களும், பெரிய எழுத்துக்களும், மிக அழகான வண்னப் படங்களும் கூடி, "ஆங்கிலப் புத்தகங்களின் தரத்துக்கு ஈடாக தமிழ்ப் புத்தகங்கள் வர வேண்டும்" என்ற ஆசிரியரின் விருப்பத்துக்கு ஏற்ப இருக்கிறது.

புத்தகத்தின் கதை விம்மு என்ற ஒரு சிறுமியையும், வேலாயி என்ற அவளது புதிய தோழியையும் மற்றும் பூக்குட்டி என்ற அவர்களது நாய்க்குட்டியையும் பற்றியது. விம்மு ஒரு மேல்தட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவள்; தோழி ஒரு ஏழை குப்பத்துக் குழந்தை. இவர்களது நட்பை விம்முவின் பள்ளி மற்றும் குடும்பம் ஏற்க மறுக்கிறது. அந்த மறுப்பை இக்குழந்தைகள் எப்படி எதிர்கொள்கின்றன என்பதாகக் கதை செல்கிறது. சுவாரசியமாகவும், சுபமாகவும் முடிகிறது.

இது கொஞ்சம் கனமான கதைதான். கதையின் மொழியும் உள்ளடக்கமும், இதை ஒரு 7-8 வயதுக் குழந்தைகளுக்குப் பொருத்தமாகச் செய்கிறது என்று நினைக்கிறேன். முதலில் இக்கதையைப் படித்ததும், குழந்தைகள் கதை இவ்வளவு ஆழமாக இருக்க வேண்டுமா, இத்தனைச் சமூகக் கேள்விகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டியது அவசியமா என்றுதான் தோன்றியது. இன்னொரு புறம், இதில் என்ன தவறு, குழந்தைகள் தினமும் காணும் உலகைப் பிரதிபலிப்பதாக அவர்கள் படிக்கும் கதைகள் இருப்பது நல்லது தானே என்றும் தோன்றியது. இங்கே அமெரிக்காவில், குழந்தைகள் புத்தகங்கள் பிரச்னைகளைக் கூட ரொம்பப் பூடகமாகத் தான் சொல்லும், எரிச்சல், வெறுப்பு போன்ற உணர்ச்சிகள் வார்த்தைகளில் வரா. கோபம் கூட ஒரு மிகைச்சித்திரமாக, கார்ட்டூன் கோபம் போலத் தான் இருக்கும். 'பூக்குட்டி'யைப் படித்ததும் தோன்றிய முதல் எண்ணங்கள், அமெரிக்காவில் இவற்றைப் படித்ததன் விளைவாக இருக்கலாம். இப்புத்தகம் ஒரு குழந்தையிடம் எப்படி உரையாடுகிறது, அதுவும் முக்கியமாக இந்தியச் சூழலில், என்பதே இக்கதையின் கருவும் மொழியும் பொருத்தமாக இருக்கின்றனவா என்பதை முடிவு செய்யும் என்று நினைக்கிறேன்.

பல விதங்களில் இது வரவேற்கப்பட வேண்டிய, வாழ்த்தப்பட வேண்டிய முயற்சி. ஒரு மூத்த, பிரபலமான எழுத்தாளர் இதைச் செய்திருப்பது என் போன்றவர்களை மேலும் ஆர்வம் கொள்ளச் செய்யும் (செய்தது) என்பதும் உண்மை.

புத்தகத்தில் சில குறைபாடுகளும் உள்ளன:

1. புத்தகத்தின் பின்னட்டையில் "தமிழ் கற்றுத் தரவும் உதவக் கூடிய கதைப் புத்தகம் இது" என்று சொல்லியிருக்கிறார்கள். மொழிக் கல்விக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காகவே ஆங்கிலத்தில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் மிக, மிக கவனமாக பிழை திருத்தம் செய்யப்படும். இப்புத்தகத்தில் இன்னமும் கவனமாக இருந்திருக்கலாம்:

"விம்முக்கு நிறைய்ய பொம்மைகள் இருந்தன. அவற்றில் அழுக்கான ஒரு கரடிக் குட்டிதான் அவளுக்கு பிரியம்"

என்பதை

"விம்முவிடம் நிறைய்ய பொம்மைகள் இருந்தன. அவற்றில் (அவற்றுள்?) அழுக்கான ஒரு கரடிக் குட்டிதான் அவளுக்கு பிரியமானது"

என்றும் சொல்லலாம்.

"எதும் பூக்குட்டி மாதிரி வராது" என்பதை "எதுவும் பூக்குட்டி மாதிரி வராது" என்று.

2. ஒரு இடத்தில் பட பேதம் இருக்கிறது - பதினான்காம் பக்கத்தில் வீட்டு வாசலில் "ஒருவன் சாக்குப்பையுடன் வாசலில் நிற்க", படத்தில் ஒரு பெண்மணி நிற்கிறாள். குழந்தைகள் புத்தகங்கள் பல முறை படிக்கப்படும், இது போன்ற பிழைகள் ஒவ்வொரு முறையும் தெரியும்.

3. படங்கள் பொதுவாக நன்றாக இருக்கின்றன, குறிப்பாக விம்முவின் முக பாவங்கள். ஆயினும், சில படங்கள் (உதாரணம் பக்கம் 13) ரொம்பத் தெளிவு குறைவாக இருக்கின்றன.

4. சில சுஜாதா பாணிகளைத் தவிர்த்திருக்கலாம் - இது குழந்தைகள் புத்தகம். உதாரணங்கள் - "அந்தப் பெண் விம்முவை விரோதமாகப் பார்த்தாள்", "போலீஸ்காரங்க புடிச்சாங்கன்னா நம்ம மேல தான் பயி (sic) சொல்லுவான்".

இக்குறைகள் சரி செய்யப்பட்டால், குழந்தைகளைப் பற்றிய இப்புத்தகம், குழந்தைகளுக்கான, இன்னமும் சிறப்பானதொரு புத்தகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

கையொப்பமிட்டு அனுப்பிய சுஜாதா அவர்களுக்கு நன்றி.


Sunday, February 12, 2006

ரங்க் தே பசந்தி - ஒரு அரசியல் பார்வை

(Warning: spoilers ahead)

ரங்க் தே பசந்தி நல்ல படம் தான் - தொழில் நுட்ப ரீதியாகவும், கலை ரீதியாகவும் ரொம்பவும் ரசிக்கத்தகுந்த படம் தான். இருப்பினும் அதில் இரண்டு முக்கியமான குறைகள் உள்ளன.

1. சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் செய்திகளைத் தாங்கி வரும் இப்படம் கட்சி சாய்மானங்களுக்கு அப்பாற்பட்டு இருந்திருக்க வேண்டும். ஆனால் படத்தில் அரசியல் கட்சியாகவும், ஆளும் கட்சியாகவும் காட்டப்படுவது சந்தேகமில்லாமல் பிஜேபியைக் குறிக்கும் ஒரு காவிக்கரைக் கட்சி. நம் நாட்டில் லஞ்சமும் ஊழலும் கட்சி பேதமில்லாத குறைபாடுகள் என்ற உண்மையை இத்தகைய சித்தரிப்பு மறைக்கிறது. ஒரு காவிக்கரைக் கட்சியைக் காண்பித்ததில் தவறில்லை - அதுல் குல்கர்னியின் (லக்ஷ்மண்) பாத்திரப்படைப்பிற்கும், கலாச்சாரக் காவலர்களின் நடத்தைக்கு எடுத்துக்காட்டாகவும் அது தேவைப்பட்டதாகக் கொள்ளலாம். ஆனால், ஒரு அராஜகமான, நேர்மையற்ற அரசாங்கமும் அவர்களாலேயே நடத்தப்படுவதாகக் காட்டுவது நாட்டின் குறைபாட்டைக் காட்டுவதாக இல்லாமல், ஒரு கட்சியின், அமைப்பின் குறைபாட்டைக் காண்பிப்பதாக முடிகிறது. தீவிர தேசியவாதிகளாக தம்மைக் காட்டிக் கொள்பவர்கள் கூட மோசமான அரசியலுக்கும் தேசத்துரோகத்திற்கும் அப்பாற்பட்டவர்கள் இல்லை என்று காண்பிப்பதற்காக இது பயன்பட்டாலும், படத்தின் பரந்த கருத்திற்கு எதிராகவே இது செயல்படுகிறது. அதாவது, நாடு தழுவிய விழிப்புணர்ச்சியும், தியாகசிந்தனையுடன் கூடிய போராட்டமும் தேவை என்ற கருத்திற்கு இந்தக் குறுகிய சித்தரிப்பு முரணாக இருக்கிறது.

2. மிக் ரக விமானங்கள் விபத்துக்குள்ளானதும், அவை குறித்த சர்ச்சைகளும் சமீப வரலாற்றுச் செய்திகள். அவ்விபத்துக்களின் பின்புலனில் ஊழல் நடந்திருக்கிறது என்பதற்கு ஆதாரபூர்வமான செய்திகளோ அறிக்கைகளோ எவையும் இல்லை. இப்படத்தில் குறிப்பிட்டிருப்பது போல் ஊழல் நடந்திருக்கலாம் என்று எனக்கு பலத்த ஐயப்பாடு இருந்த போதிலும், ஒரு தனி மனிதனின் சிந்தனை என்பதற்கு அப்பால் என்னிடம் எதுவும் இல்லை. இந்நிலையில் இப்படத்தில் இது குறித்து ஒரு ஊழல் குற்றச்சாட்டை வைப்பது மட்டுமில்லாமல், வெளிப்படையாக அதில் ராணுவ மந்திரிக்கும் நேரடி தொடர்பு இருப்பது போல் காண்பித்திருக்கிறார்கள். இது தவறு. ஒன்று அடையாளம் தெரியாத இடைத்தரகர்களை கெட்டவர்களாகக் காண்பித்து விட்டு, வேண்டுமானால் அரசாங்கத்தின் ஈடுபாட்டைப் பூடகமாகக் காட்டியிருக்கலாம். அல்லது குறிப்பாக மிக் ரக விமானங்களின் விபத்துக்களைப் பயன்படுத்தாமல், வேறு ஒரு கற்பனை ராணுவ ஊழலைச் சித்தரித்திருக்கலாம். இரண்டையும் செய்யாமல், நிஜச் செய்திக்குப் பின்னால் குற்றமிருப்பதாகக் காட்டி விட்டு, ஒரு "கற்பனை" ராணுவ மந்திரியைக் குற்றவாளியாகச் சித்தரித்திருப்பது யோக்கியமற்ற செயல். இதில் குற்றம் சாட்டப்படும் மந்திரி ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் என்பதை மேலும் ஊர்ஜிதம் செய்யும் விதமாக படத்தில் மந்திரி ஒரு மிக் விமானத்தில் பொது மக்களின் காட்சிக்காக பயணப்படுவது குறித்துப் பேசுவதாக ஒரு காட்சி வேறு (ஃபெர்னாண்டஸ் அது போல ஒரு பயணம் மேற்கொண்டார்). மேலும் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸுக்கு எதிராக பெரிய ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை - மாறாக, நேர்மையானவர், எளிமையானவர் என்று பெயரெடுத்தவர். அவர் இதையெல்லாம் செய்திருக்கவே மாட்டார் என்று சொல்ல வரவில்லை - ஊழல் நடந்தது என்பதற்கோ, அன்றைய ராணுவ மந்திரிக்குத் தொடர்பு இருந்தது என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை என்பதால், அத்தகைய சித்தரிப்பு தவறு என்று மட்டுமே சொல்கிறேன்.

படம் வெளியாவதற்கு முன்னால், இன்றைய மந்திரி ப்ரணாப் முகர்ஜி படத்தைப் பார்த்து விட்டு ஓகே சொன்னாராம். ஏன் சொல்ல மாட்டார்? முந்தைய ஆளும் கட்சிக்கு ஒரு மட்டையடி, முந்தைய ராணுவ மந்திரிக்கு ஒரு சாட்டையடி, டபுள் ஓகே!!

ஒரு விவாத முழுமைக்காக மிக் விமான விபத்துகள் குறித்து ஒரு பழைய செய்தி.


சண்டே போஸ்ட்

(முன் பதிவு: ரங்க் தே பசந்தி - அட்டகாசமான படம், பாருங்கள். வித்தியாசமான கதை, தேர்ந்த நடிப்பு, திறமையான ஒளிப்பதிவு, பிரமாதமான இசை. ஒரே ஒரு பிரச்னை - முடிவு கொஞ்சம் சொதப்பல். The movie deserved a better ending - or rather a better executed ending (no pun intended). இருந்தாலும் (Alice Patten-னுக்காக மட்டுமாவது) பார்க்க வேண்டிய படம்)

கடந்த பன்னிரெண்டு வருடங்களாக, இந்தியாவில் விடுமுறையாக இருந்த நாட்கள் தவிர்த்து, தினமும் தவறாமல் வாஷிங்டன் போஸ்ட் படித்து வருகிறேன். ஞாயிற்றுக்கிழமைகளில் போஸ்ட் விரிவான செய்திகளுடனும், அலசல்களுடனும் வெளிவரும். இன்று காலை, வெளியே ஒரு அடிக்கு மேல் பனி பெய்திருப்பதால், வேறு வேலையில்லாமல் நிதானமாய் மேய்ந்ததில் சில பரிந்துரைக்கக் கூடிய கட்டுரைகள் கண்ணில் பட்டன(சீக்கிரம் படியுங்கள், சுட்டிகள் ஒரு வாரத்திற்குப் பிறகு "இறந்து" விடலாம்):

1. மங்கோலியாவின் தற்கால அரசியல் நிலவரம் - மேலே ரஷியா, கீழே சைனா என்று சூழப்பட்டு கடல் காணாத நாடான மங்கோலியா, இன்று இவ்விரு அண்டை நாடுகளுக்கு அப்பால் தனது உறவுகளை பலப்படுத்த முனைந்து கொண்டிருக்கிறது. அம்முயற்சிகளைப் பற்றி ஒரு சுருக்கமான அலசல். சுவாரசியமான தகவல் - ஒரு பழைய ரஷிய நினைவகத்தைத் தகர்த்து விட்டு புதிதாக ஒரு சிலை எழுப்ப முயன்று கொண்டிருக்கிறார்கள். யாருக்கு சிலை - கெங்கிஸ் கானுக்கு! உலகத்துக்கெல்லாம் வில்லனாக இருந்தாலும், உள்ளூரில் ஹீரோ தான்!

2. வால்மார்ட் வங்கி? - வால்மார்ட் அமெரிக்க சட்டத்தில் இருக்கும் ஒரு சிறு ஓட்டையை வசதியாகப் பயன்படுத்திக் கொண்டு வங்கி வர்த்தகத்தில் நுழைய முற்படுகிறது. முயற்சி வெற்றி பெறுமா? இதனால் யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம் என்று அலசும் கட்டுரை.

3. Why we fight? - இப்பொழுது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் அரசியல் ஆவணப்படம் (பார்க்க - பாலாஜியின் அருமையான விமர்சனம்) பற்றி அப்படத்தின் இயக்குனருடன் சிறிய பேட்டி. சுவாரசியமான மேற்கோள் -

Q. With "Fahrenheit 9/11," I felt like I was being manipulated in places. But with your film, there's not that sense. You're not in it, your voice isn't in it. It's very measured.
A. I hope it's measured. And at the same time, no one should lie to anyone and pretend their films are objective. My film is a subjective film like all films. What I hope is clear about my film, though, is that I am rigorous in challenging my own inclinations.

4. ஸ்டாலின் பற்றி குருஷேவின் கொள்ளுப் பேத்தி - இன்றைய ரஷியாவில் ஸ்டாலினின் புகழ் ஏன் மங்கவில்லை என்பது பற்றி குருஷேவின் கொள்ளூப் பேத்தி நீனா குருஷேவ் எழுதியுள்ள கட்டுரை.

5. வாலண்டைன் தினம் சிறப்புக் கட்டுரை - சற்றே பெரியது - ஈராக்கிலிருக்கும் ஒரு அமெரிக்கப் போர் வீரனுக்கும் ஒரு கலிஃபோர்னியா யுவதிக்கும் இடையேயான தொலைதூரக் காதல் (காதல் கோட்டை ஸ்டைல்), மற்றும் அவர்கள் முதல் முறை சந்தித்துக் கொண்ட விதம் ஆகியவை பற்றிய சுவையான கட்டுரை - A little sappy, but you know, it is THAT time of the year...

Saturday, February 11, 2006

அக்கரை மீது அக்கறை

"அப்புறம்...உங்க long term ப்ளான் என்ன?"

இந்தக் கேள்வி அமெரிக்காவாழ் இந்தியர்கள் பரஸ்பரம் கேட்டுக் கொள்ளும் கேள்விகளுள் பிரதானமானது. இந்தக் கேள்விக்கு அர்த்தம் நீங்கள் இந்தியா திரும்பிச் செல்ல ஏதாவது திட்டம் வைத்திருக்கிறீர்களா, இல்லை அமெரிக்காவோடு ஐக்கியமாகி விடுவதாய் உத்தேசமா என்பது. கிட்டத்தட்ட எல்லா இந்தியர்கள் மனதிலும் ஏதாவது ஒரு மூலையில் ஒட்டிக் கொண்டிருக்கும் இந்தக் கேள்விக்கான பதிலைப் பரிமாற்றம் செய்து கொள்வது என்பது இந்த ஊரில் பலருக்குப் பிடித்தமான postprandial pastime (வாழ்க GRE).

இந்தக் கேள்விக்கான பதிலுக்கென்று ஒரு ஃபார்முலா இருக்கிறது. புகழ்பெற்ற Aristocrats ஜோக் போல (படம் பார்க்காதீர்கள், கடி) - ஆரம்பமும் முடிவும் ஒன்றாக இருக்கும், நடுவில் மட்டும் சரக்கு மாறுபடும். பதிலின் முதல் வரி - "தெரியலீங்க...", கடைசி வரி - "So, பார்ப்போம்...". நடுவில் கற்பனாஸ்வரங்களாக, பச்சை அட்டை, சிட்டிசன்ஷிப், குழந்தைகள், கல்வி, காசு, வீடு, ஃபுட்பால் டீம் சூப்பர் பவுல் ஜெயிக்க வாய்ப்புகள் என்று பல விஷயங்கள் வரும். பல வருடங்களுக்கு முன்பு ஆர்.கே. நாராயணன் இந்தக் குடியேற்றத் தடுமாற்றத்தைப் பற்றி X+1 என்று ஒரு பிரபலமான கட்டுரை எழுதினார். அக்கட்டுரையில், இந்த திரிசங்கு ஜீவியர்கள் சதா சர்வ காலமும் அடுத்த வருடம் இந்தியா திரும்பப் போவதாக சொல்லிக் கொள்வார்கள் என்றும் ஆனால் அந்த அடுத்த வருடம் என்பது வரவே வராத ஒரு நிரந்தரமான எதிர்கால வருடம் என்றும் கூறியிருந்தார்.

ஆனால், இன்றைய இந்தியர்கள் இத்தகைய எளிமையான அல்ஜீப்ராவையெல்லாம் தாண்டிச் சென்று விட்டார்கள். சாதாரணமான X+1 கோட்பாடு ஒரு quadratic equation ஆக மாறி, மேலும் வளர்ந்து, வளர்ந்து இன்று ரொம்ப சிக்கலாகி விட்டது. சமீபத்தில் எனது நண்பர் ஒருவர் சொன்ன பதிலை கணித முறையில் மாற்றிய போது கீழ்க்கண்டவாறு வந்தது:


(இதை அவருக்கு அனுப்பி சரி பார்க்கச் சொன்ன போது ஃபார்முலாவில் i=0 என்று மாற்ற வேண்டும், மற்றபடி OK என்றார்)

ஆனாலும், சமீப சில வருடங்களாக இந்த விஷயத்தில் இந்தியர்களின் மன நிலையில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள் கண்கூடாகத் தெரிகிறது. ஒரு ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு கூட நிலைமை இப்படி இருந்தது:

"அட...ராமசந்திரன்! நீங்க ஊருக்குப் போகல?"

"என்னது?"

"போன வருஷம் தமிழ்ச் சங்கப் ப்ரொக்ராம்ல பார்த்த போது அடுத்த வாரம் பர்மனென்டா இந்தியா போறேன்னு சொன்னீங்களே..."

"ஓ, அதுவா...என்னாச்சு, அந்த வாரம் வீட்டுல எல்லாருக்கும் நல்ல ஜலதோஷம் வந்துடுத்து, அப்புறம், அடுத்த வாரம், சின்னதுக்கு ஸ்கூல் தொறந்தாச்சு, சரி அப்புறம் பார்த்துக்கலாம்னு...ஹிஹி..."

ஆனால், இப்பொழுது நிலைமை தலைகீழாக இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை யாராவது ஒருவர் இந்தியாவுக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள். யாருக்காவது வாய்ஸ் மெயில் விட்டு அவர் திரும்பிக் கூப்பிடவில்லை என்றால் ஒரு வேளை இந்தியாவுக்கு ஜூட் விட்டு விட்டாரா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. இன்று இந்தியர்கள் இரண்டு வகைப்படுகிறார்கள் - Return 2 India போன்ற வலைத்தளங்களை மேய்ந்து கொண்டிருப்பவர்கள் முதல் வகை; விமான நிலையத்தில் வண்டி கிளம்பக் காத்துக் கொண்டிருப்பவர்கள் இரண்டாவது வகை. இவர்களெல்லாம் இந்தியா சென்று அவர்களுடைய "ப்ழிட்டி மச்" ஆங்கிலத்தை அவிழ்த்து விட்டால் நாட்டின் கதி என்ன ஆகுமோ தெரியவில்லை.

என்னைப் பொறுத்த வரையில் எனக்கும் ஆசை இருக்கத் தான் செய்கிறது. ஆயினும் வாழ்க்கையில் இலவச இணைப்பாய் வந்து சேர்ந்திருக்கும் சில சிக்கல்களை முதலில் சரி செய்ய வேண்டியிருக்கிறது. அமெரிக்காவிற்கு வந்த முதல் இந்தியன் ஒரு சென்னைவாசி என்று சரித்திர ஆதாரம் இருப்பதாகச் சொல்வார்கள். போகிற போக்கைப் பார்த்தால் ஒரிரு வருடங்களில் என்னைத் தவிர எல்லா இந்தியர்களும் திரும்பிச் சென்று விடுவார்கள் என்று நினைக்கிறேன். அதற்குப் பிறகு விளக்கையெல்லாம் அணைத்து விட்டு நானும் கிளம்பி வந்து சேர்கிறேன். அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்த கடைசி இந்தியனும் ஒரு சென்னைவாசி என்ற பெருமையும் கிடைத்தது போலாயிற்று!