<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Sunday, January 29, 2006

நூதனமான பரிசோதனை

உங்களது உள்மனது சாய்மானங்களை அறிவியற்பூர்வமாக உங்களுக்கு அறியத்தரும் பரிசோதனை ஒன்றை ஹார்வர்டு பல்கலைக்கழகம் உருவாக்கி வலையேற்றி இருக்கிறது. நீங்கள் இப்பரிட்சையை எவ்வளவு முறை வேண்டுமானாலும் உபயோகிக்கலாம், உங்களது உள்மனம் மாறும் வரை பரிட்சையின் முடிவுகள் மாறாது என்கிறார்கள்.

இந்தத் தளத்தில் இந்தியாவிற்கென்று ஒரு உப தளம் உள்ளது. இதில் ஹிந்து/முஸ்லிம், இந்தியா/பாகிஸ்தான் போன்ற விஷயங்களில் உங்களது சாய்மானங்கள் சோதிக்கப்படுகின்றன. இத்தளத்திற்கு சென்று உங்களைப் பரிசோதனை செய்து கொள்ளு முன் அது பற்றிய இந்த ஸ்லேட் கட்டுரையைப் படிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

பரிசோதனைத் தளம் (இந்தியக் கொடி மீது சுட்டியைத் தட்டவும்).

Good luck...but luck won't help you with this.

(நான் ஹிந்து/முஸ்லிம் பரிட்சையை மேற்கொண்டேன். முடிவு: எனக்கு வளர்வதற்கு நிறைய இடமிருக்கிறது :-) )


Friday, January 20, 2006

சுஜாதாவின் 'தம்பி'

சில நாட்களுக்கு முன்பு தேசிகன் தனது வலைப்பதிவில் இவ்வாறு எழுதியிருந்தார்:

"நண்பர் அதியமான் சில வாரங்களுக்கு முன் அம்பலம் அரட்டையில் முன்பு எப்போதோ படித்த ஒரு விஞ்ஞான சிறுகதையை உயிர்மை வி.சி தொகுப்பில் காணவில்லை என்றார். எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. அந்த கதையின் அவுட்லைனையும் சொன்னார். பிறகு சுஜாதாவிடம் பேசிக்கொண்டிருந்த போது அது முன்பு கணையாழியில் எழுதியது என்று நினைக்கிறேன் என்றார்.

அடுத்தவாரம் அதிர்ஷ்டம் என் பக்கம் அடித்தது. 1977 ஆகஸ்ட் மாதம் கணையாழியில் அந்த கதை கண்டுபிடித்தேன். கதையின் பெயர் தம்பி.
படிக்க விரும்புபவர்கள் இங்கு கிளிக் செய்யவும்.
அடுத்த உயிர்மை வி.சி பதிப்பில் இந்த கதை இடம்பெறும். நண்பர் அதியமானுக்கு என் நன்றி."

இதைப் படித்த போது, நான் சிறு வயதில் இந்தக் கதையை முதல் முறையாகப் படித்ததும், இரண்டாவது முறையாகப் படித்ததும் நினைவுக்கு வந்தது.

நான் இதை முதல் முறையாகப் படித்தது, ஒரு பொழுது போகாத கோடை மதியத்தில். தேசிகன் பதிவில் பின்னூட்டமிடப்பட்டது போல் இதை 'வானத்தில் ஒரு மௌனத்தாரகை' தொகுப்பில் தான் படித்தேன் என்று நினைக்கிறேன். இதைப் படித்த சிலநாட்கள் கழித்து இன்னமும் கடுமையாக போரடித்த இன்னொரு மதிய நேரத்தில், எங்கள் வீட்டு பரணில் இருந்த ஒரு பழைய பெட்டியில் இருந்த சில புத்தகங்களைக் குடைந்த போது புதையல் போல ஒரு சிறுகதைத் தொகுப்பு கிடைத்தது. ஒரு கதையின் மையக்கரு அப்படியே 'தம்பி' கதையினது போல இருந்தது. இந்தக் கதை பல வருடங்களுக்கு முன்பு வெளியானது.

மீண்டும் வா.மௌ.தா வை எடுத்துப் படித்து ஊர்ஜிதம் செய்து கொண்டேன். சுஜாதாவின் கதையில், அது ஒரு ஆங்கிலக் கதையின் தழுவல் என்றெல்லாம் குறிப்பு எதுவும் இல்லை. ஒரு நமட்டுச் சிரிப்புடன் மொத்த விஷயத்தையும் மறந்து விட்டேன்.

தேசிகன் பதிவைப் படிக்கும் வரை. கணையாழியிலும் அக்கதை ஒரு தழுவல் என்று எதுவும் குறிப்பிருந்ததாக அவர் எழுதவில்லை. அப்பதிவைப் படித்ததும், சரி கொஞ்சம் குடைந்து பார்ப்போமே என்று கூகிளைத் துழாவினேன். ஒரு Sci-Fi இலக்கியப் புழு ஒருவர் கிடைத்தார். அவருக்குக் கதையின் கருவைச் சொல்லி ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். நான் அனுப்பிய கதைச் சுருக்கம் இது தான்:

Summary of the story: space ship gets wrecked somewhere out there,
lonely survivor sends message home for rescue, teaches a machine
to talk to relieve his boredom, the machine starts squeaking and
needs oil, man does not have any, the story ends with the machine
killing the man to extract oil from his fat as the rescue ship
arrives.

Does this story ring a bell? If it does, I would really appreciate if
you could let me know.

மறுநாள் அவரிடமிருந்து டாணென்று பதில் வந்தது:

The story is "Lubrication" by Robert Sheckley.

SHECKLEY, ROBERT
Lubrication, (vi) Playboy May 1959; Triplication, gp.
Store of Infinity, Bantam 1960
The Bedside Playboy, ed. Hugh M. Hefner, Playboy 1963
From the "S" File, ed. Editors of Playboy, Playboy 1971
The Collected Short Stories of Robert Sheckley Book Four, Pulphouse
1991

இந்தக் கதை முதலில் வெளியானது 1959 ப்ளேபாயில். பின்னர் பல தொகுப்புகளில் வெளிவந்தது. இந்தத் தகவலைக் கொண்டு கொஞ்சம் கூகிள், பின்னர் கொஞ்சம் ஈபே என்று மேய்ந்ததில், கதை இருந்த புத்தகம் ஒன்று (Store of Infinity) கிடைத்தது. புத்தகம் வீடு வந்து சேர்ந்ததும், பல வருடங்கள் கழித்து மீண்டும் படித்துப் பார்த்தேன். கதையின் மையக்கருவும் முக்கியத்திருப்பமும் ஒன்றாய் இருந்தாலும், சுஜாதா அவற்றில் பல விஷயங்களைச் சேர்த்து ஒரு புதிய கோணத்தில் சொல்லி இருக்கிறார் என்று தோன்றியது. மூலக்கதை வெளிவந்த வருடம், சுஜாதா எழுதிய வருடம், கதைகளின் வித்தியாசமான முடிவில் இருக்கும் முழு ஒற்றுமை இவற்றைக் கொண்டு பார்க்கையில் சுஜாதா இந்தக் கதையிலிருந்து inspire ஆகி எழுதியிருக்கிறார் என்பதில் *எனக்கு* சந்தேகமில்லை. இன்னொரு சின்ன விஷயம்: மூலத்தில் ரோபோட்டின் பெயர் 'அக்கா' (Akka), சுஜாதாவின் கதையில், தம்பி :-)

ஒரு சுவாரசியத்துக்காகத்தான் இவற்றை பதிக்கிறேன். சுஜாதா மீது இதன் மூலம் எந்த ஒரு பெரும் குற்றச்சாட்டு எதையும் வைப்பது என் நோக்கமல்ல.

சுஜாதாவின் 'தம்பி'

Robert Sheckleyயின் 'Lubrication' (Image) - இடது பக்கத்தில், கீழே, "Professor Bolton..." என்று துவங்கும் இடத்திலிருந்து படிக்கவும் - மூன்று கதைகள் அடங்கிய சிறுகதை ஒன்றின் மூன்றாவது கதை இது.

Thursday, January 19, 2006

ரோசாவின் வாசிக்க வேண்டிய பதிவு

சில சமயங்கள் சற்று நீளமான பதிவுகளை சோம்பல்/அயர்ச்சி காரணமாக வாசிக்காமல் விட்டு விடுகிறோம். அப்படிச் செய்யாமல் முழுதும் வாசிக்கப்பட வேண்டிய பதிவு, ரோசாவசந்த் இன்று எழுதியுள்ள பதிவு. சமீபத்திய எஸ்ரா/குட்டிரேவதி விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு, பல பரந்த விஷயங்களை கவனமாகவும் நுணுக்கமாகவும் அலசி இருக்கிறார். அவரது சார்பு நிலைகள் சிலவற்றை நான் ஏற்காவிட்டாலும், அவரது வாதநேர்மை மற்றும் அறிவொழுக்கம் ஆகியவற்றை மிகவும் மதிக்கிறேன்.

பின்னூட்டங்களை அவரது பதிவில் இடவும்.

Tuesday, January 17, 2006

ஹிந்துவின் 'வாசக ஆசிரியர்'

சில நாட்களுக்கும் முன்பு ஹிந்து தனது நாளிதழுக்கு ஒரு 'வாசக ஆசிரியரை' நியமித்திருப்பதாக அறிவித்தது. இந்தியாவில் இத்தகைய ஒரு பொறுப்பை ஏற்படுத்தியிருக்கும் முதல் பத்திரிக்கை ஹிந்துவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

பல மேற்கத்திய பத்திரிக்கைகளில் மக்கள் ஆசிரியர் என்று ஒருவர் இருப்பது பல வருடங்களாக இருந்து வருவது. இதற்கு விதிவிலக்காக இருந்த நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கையும் சில வருடங்களுக்கு முன்பு (பல சிக்கல்களில் மாட்டிக் கொண்ட பிறகு) இத்தகைய ஒரு பதவியை உருவாக்கியது. இப்பதவியை வாஷிங்டன் போஸ்டில் "Ombudsman" என்றும், நி.டைம்ஸில் "Public Editor" என்றும் அழைக்கிறார்கள். ஹிந்துவில் இங்கிலாந்தின் கார்டியன் பத்திரிக்கையைப் பின்பற்றி, "Reader's editor" என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

இப்பதவியை வகிப்பவரது முக்கியக் கடமை அப்பத்திரிக்கையின் மனசாட்சியாக செயல்படுவது ஆகும். பத்திரிக்கையின் ஒழுங்கு, செய்திகளின் பாரபட்சமின்மை, தலையங்கங்களின் அறிவு நேர்மை பற்றிய வாசகர்களின் கேள்விகள், குறைகள் ஆகியவற்றிலிருந்து முக்கியமானவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்கு பத்திரிக்கையின் நிர்வாகத்திடமிருந்து விடைகள் பெறுவது அவரது முதல் வேலை. பொதுவாக இப்பதவியை வகிப்பவர்கள் மூத்த பத்திரிக்கையாளர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு அப்பத்திரிக்கையில் வாரம் ஒரு முறையோ, இருவாரங்களுக்கு ஒரு முறையோ ஆசிரியர் பக்கத்திற்கு அருகில் இடம் ஒதுக்கப்படும். அந்த இடத்தில் அவர்கள் எழுதுவதற்கு முழுச் சுதந்திரம் வழங்கப்படும்.

இந்த அமைப்பு முறையாக செயல்படும் போது, பத்திரிக்கையின் நம்பகத்தன்மை கூடுகிறது. வாசகர்களுக்கு பத்திரிக்கையில் தமக்கும் ஒரு உண்மையான குரல் இருப்பதாகத் தோன்றுவதனால், பத்திரிக்கையோடு நடக்கும் உரையாடல்களில் நம்பிக்கை பிறக்கிறது. பத்திரிக்கை ஆசிரியர்களுக்குத் தாம் விமரிசனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற எண்ணம் அகல்கிறது/குறைகிறது.

ஆயினும், இந்த அமைப்பு முறையாக செயல்படுவதற்கு இரண்டு விஷயங்கள் தேவை:

1. இத்தகைய ஆசிரியராக நியமிக்கப்படுபவரின் சாய்மானமின்மை கேள்விகளுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும்.

2. இந்த ஆசிரியரோடு பத்திரிக்கை நிர்வாகமும் ஆசிரியக்குழுவும் ஒத்துழைக்க வேண்டும். அதாவது வாசக ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு நேர்மையான பதில்களும் விளக்கங்களும் தர முயல வேண்டும். இவர் பாட்டுக்குக் கேட்டுக் கொண்டே இருக்க, அவர்கள் பதில் சொல்லாமலோ, அல்லது மழுப்பல் பதில்களாகச் சொல்லிக் கொண்டிருந்தால் பிரயோஜனமில்லை. உதாரணமாக, நியூ யார்க் டைம்ஸ் வாசக ஆசிரியர், சமீபத்தில் தமது கேள்விகளுக்கு ஆசிரியக் குழு பதில் சொல்வதில்லை என்று எழுதியிருக்கிறார்:

For the first time since I became public editor, the executive editor and the publisher have declined to respond to my requests for information about news-related decision-making. My queries concerned the timing of the exclusive Dec. 16 article about President Bush's secret decision in the months after 9/11 to authorize the warrantless eavesdropping on Americans in the United States.

I e-mailed a list of 28 questions to Bill Keller, the executive editor, on Dec. 19, three days after the article appeared. He promptly declined to respond to them. I then sent the same questions to Arthur Sulzberger Jr., the publisher, who also declined to respond. They held out no hope for a fuller explanation in the future.


ஹிந்துவைப் பொறுத்த வரை, இந்த இரண்டாவது விஷயத்தில் அவர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதைப் போகப்போகத் தான் பார்க்க வேண்டும். ஆயினும் முதல் விஷயத்தைப் (சாய்மானமின்மை) பொறுத்த வரை இப்பொழுதே சில கேள்விகள் உள்ளன. அவர்கள் வாசக ஆசிரியராக தேர்ந்தெடுத்திருப்பது யாரையென்று பார்க்கும் போது கொஞ்சம் வியப்பாக இருக்கிறது.

பொதுவாக இத்தகைய நியமனங்களுக்கு, ஒரு பத்திரிக்கையின் பாரம்பரியத்துக்கு வெளியிலிருந்து ஒருவரை தேர்ந்தெடுப்பதே பொருத்தமானதாக இருக்கும். உதாரணமாக, நி.டைம்ஸின் வாசக ஆசிரியர் வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் ஆசிரியராக இருந்தவர். வால் ஸ்ட்ரீட்டுக்கும் டைம்ஸுக்கும் கருத்தளவில் கொஞ்சமும் ஒற்றுமை கிடையாது. வாஷிங்டன் போஸ்டின் Ombudsmanம் அப்பத்திரிக்கையோடு சம்பந்தப்பட்டவரில்லை. ஹிந்து தனது ஆதர்சமாகக் கொண்டிருக்கும் கார்டியன் பத்திரிக்கையின் இயன் மேய்ஸும் அப்பத்திரிக்கையில் இருந்தவரில்லை. ஆனால், ஹிந்துவின் வாசக ஆசிரியராக பொறுப்பேற்றிருக்கும் கே.நாராயணன் ஹிந்துவில் காலம் காலமாக (Pun unintended :-) ) பணியாற்றியவர்:

Mr. Narayanan, 73, joined The Hindu as a Kasturi Ranga scholar in 1955, became Sub-Editor in 1956, Chief Sub-Editor in 1964, Assistant Editor in 1975, and News Editor in 1978. Between 1984 and 1991, he oversaw the news operations of both The Hindu and Frontline. He became Associate Editor, Frontline in 1991 and retired in 1996. From September 1996, he has been Editorial Consultant to Frontline, and from July 2003, Senior Editorial Consultant to both The Hindu and Frontline.


ஆதலால், இவரால் ஹிந்துவை நடுநிலைமையோடு விமரிசிக்க முடியுமா என்பது ஆரம்பத்திலிருந்தே கேள்விக்குரியதாக ஆகிறது. கிட்டத்தட்ட ஐம்பது வருடங்கள் அந்த அமைப்பில் பணியாற்றியதனால் கொஞ்சம் institutionalize ஆகி இருப்பார் என்று தோன்றுகிறது. ஒரு பரீட்சார்த்த முயற்சியாக இந்த கவனமான தேர்வை ஹிந்து செய்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

இருப்பினும் இந்தத் திசையில் அடி எடுத்து வைத்திருப்பதற்காக ஹிந்துவைப் பாராட்ட வேண்டும். சைனா, இலங்கை, ஈரான், பாகிஸ்தான் எனப் பல விஷயங்கள் குறித்து ஹிந்துவின் நிலைப்பாடுகள் கேள்விக்குரியதாக ஆகியிருக்கும் இத்தருணத்தில் இந்தப் புதிய அமைப்பின் செயல்பாடு எவ்வாறு உள்ளது என்பதைப் பார்க்க சுவாரசியமாக இருக்கும்.


Friday, January 13, 2006

Munich: மற்றொரு பார்வை

Munich படம் பற்றி நான் முன்வைத்த கருத்துகளுக்கு முற்றிலும், 180 டிகிரி எதிர்ப்பதமாக இன்று வாஷிங்டன் போஸ்டில் ஒரு கருத்துப் பத்தி வெளியாகி இருக்கிறது. இதை எழுதியவர் சார்ல்ஸ் க்ரௌட்ஹாம்மர் என்னும் வலது சாரி, குடியரசுக் கட்சி சிந்தனையாளர்; இவர் ஒரு தீவிர இஸ்ரேல் ஆதரவாளியும் கூட. இவர், படத்தில் யூதர்களின் வரலாறு சரியாக விளக்கப்படவில்லை என்றும், பாலஸ்தீனியர்கள் நல்லவர்கள் போலும் காண்பிக்கப்படுவதாகவும் கூறுகிறார்.

இக்கட்டுரையைப் படித்த பின்னரும் என் கருத்து மாறவில்லை. நானும் இவரும் ஒரே படத்தைத் தான் பார்த்தோமா என்றே சந்தேகமாக இருக்கிறது. ஆயினும் படத்தைப் பார்த்தவர்கள் இரு கருத்துக்களையும் படித்து சொந்தமாக ஒரு மூன்றாவது கருத்தை உருவாக்கிக் கொள்வதற்கு வசதியாக, க்ரௌட்ஹாம்மரின் கட்டுரையை கீழே மறு பதிப்பு செய்கிறேன்:

'Munich,' the Travesty

By Charles Krauthammer
Friday, January 13, 2006; A21

If Steven Spielberg had made a fictional movie about the psychological disintegration of a revenge assassin, that would have been fine. Instead, he decided to call this fiction "Munich" and root it in a historical event: the 1972 massacre by Palestinian terrorists of 11 Israeli athletes at the Olympic Games. Once you've done that -- evoked the killing of innocents who, but for Palestinian murderers, would today be not much older than Spielberg himself -- you have an obligation to get the story right and not to use the victims as props for any political agenda, let alone for the political agenda of those who killed them.

The only true part of the story is the few minutes spent on the massacre. The rest is invention, as Spielberg delicately puts it in the opening credits, "inspired by real events."

By real events? Rubbish. Inspired by Tony Kushner's belief (he co-wrote the screenplay) that the founding of Israel was a "historical, moral, political calamity" for the Jewish people.

It is an axiom of filmmaking that you can only care about a character you know. In "Munich," the Israeli athletes are not only theatrical but historical extras, stick figures. Spielberg dutifully gives us their names -- Spielberg's List -- and nothing more: no history, no context, no relationships, nothing. They are there to die.

The Palestinians who plan the massacre and are hunted down by Israel are given -- with the concision of the gifted cinematic craftsman -- texture, humanity, depth, history. The first Palestinian we meet is the erudite translator of poetry giving a public reading, then acting kindly toward an Italian shopkeeper -- before he is shot in cold blood by Jews.

Then there is the elderly PLO member who dotes on his 7-year-old daughter before being blown to bits. Not one of these plotters is ever shown plotting Munich, or any other atrocity for that matter. They are shown in the full flower of their humanity, savagely extinguished by Jews.

But the most shocking Israeli brutality involves the Dutch prostitute -- apolitical, beautiful, pathetic -- shot to death, naked, of course, by the now half-crazed Israelis settling private business. The Israeli way, I suppose.

Even more egregious than the manipulation by character is the propaganda by dialogue. The Palestinian case is made forthrightly: The Jews stole our land and we're going to kill any Israeli we can to get it back. Those who are supposedly making the Israeli case say . . . the same thing. The hero's mother, the pitiless committed Zionist, says: We needed the refuge. We seized it. Whatever it takes to secure it. Then she ticks off members of their family lost in the Holocaust.
Spielberg makes the Holocaust the engine of Zionism and its justification. Which, of course, is the Palestinian narrative. Indeed, it is the classic narrative for anti-Zionists, most recently the president of Iran, who says that Israel should be wiped off the map. And why not? If Israel is nothing more than Europe's guilt trip for the Holocaust, then why should Muslims have to suffer a Jewish state in their midst?

It takes a Hollywood ignoramus to give flesh to the argument of a radical anti-Semitic Iranian. Jewish history did not begin with Kristallnacht. The first Zionist Congress occurred in 1897. The Jews fought for and received recognition for the right to establish a "Jewish national home in Palestine" from Britain in 1917 and from the League of Nations in 1922, two decades before the Holocaust.

But the Jewish claim is far more ancient. If the Jews were just seeking a nice refuge, why did they choose the malarial swamps and barren sand dunes of 19th-century Palestine? Because Israel was their ancestral home, site of the first two Jewish commonwealths for a thousand years -- long before Arabs, long before Islam, long before the Holocaust. The Roman destructions of 70 A.D and 135 A.D. extinguished Jewish independence but never the Jewish claim and vow to return home. The Jews' miraculous return 2,000 years later was tragic because others had settled in the land and had a legitimate competing claim. Which is why Jews have for three generations offered to partition the house. The Arab response in every generation has been rejection, war and terrorism.

And Munich. Munich, the massacre, had only modest success in launching the Palestinian cause with the blood of 11 Jews. "Munich," the movie, has now made that success complete 33 years later. No longer is it crude, grainy TV propaganda. "Munich" now enjoys high cinematic production values and the imprimatur of Steven Spielberg, no less, carrying the original terrorists' intended message to every theater in the world.

This is hardly surprising, considering that "Munich's" case for the moral bankruptcy of the Israeli cause -- not just the campaign to assassinate Munich's planners but the entire enterprise of Israel itself -- is so thorough that the movie concludes with the lead Mossad assassin, seared by his experience, abandoning Israel forever. Where does the hero resettle? In the only true home for the Jew of conscience, sensitivity and authenticity: Brooklyn.


'Blink': உள்ளுணர்வுகளை நம்பலாமா?

Blink
Malcolm Gladwell
Little, Brown Publishers


இந்தப் புத்தகத்தைப் பற்றியும் அது முன்வைக்கும் முக்கிய சித்தாந்தத்தைப் பற்றியும் முதலில் கேள்விப்பட்ட போது, அதைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படவில்லை. பலராலும் பாராட்டப்பட்டு, பெருமளவில் விற்பனையான போதும் எனது எண்ணம் மாறவில்லை. ஆனால் சுயமுன்னேற்றம், pop psychology எனப்படும் வெகுஜன உளவியல் ஆகியவை பற்றிய புத்தகங்களை என்னை விட அதிகம் வெறுக்கிற நண்பன் ஒருவன் இதைக் நான் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று சொன்ன போது, தட்ட முடியாமல் படிக்கத் தொடங்கினேன்.

1. சுவாரசியமான புத்தகம், நான் படிக்கக் கூடாது என்பதற்குக் கொண்டிருந்த காரணங்கள் பிழையானவை.
2. ஆனால், இந்தப் புத்தகம் தரும் அறிவுரையைப் பின்பற்றியிருந்தால் இந்தப் புத்தகத்தைப் படித்திருப்பேனா என்பது கேள்விக்குரியது.

முதலிலிருந்து ஆரம்பிக்கிறேன்.

நாம் தினம் தினம் மதிப்பீடுகள் செய்த வண்ணம் இருக்கிறோம். சில சில்லறைத்தனமான விஷயங்கள், சில வாழ்வா சாவா பிரச்னைகள். மனிதர்களை, பொருட்களை, உணவுகளை, உடைகளை, பிறர் எண்ணங்களை எனத் தொடர்ந்து செய்யும் மதிப்பீடுகள் நமது சுகதுக்கங்களையும், வெற்றி/தோல்விகளையும் நிர்ணயிக்கின்றன. சில சமயம் பிறரது சுகதுக்கங்களையும், வெற்றி/தோல்விகளையும் கூட நமது மதிப்பீடுகள் நிர்ணயிக்கின்றன. இந்த மதிப்பீடுகளின் ஆதார குணாதிசியம் என்ன? இவற்றை எப்படிச் செய்கிறோம்? இவற்றை இன்னமும் சிறப்பாக, விரைவாகச் செய்வது எப்படி? நமது உள்ளுணர்வுகளை எவ்வளவு, எப்போது நம்பலாம்? இது போன்ற கேள்விகளுக்கு பல உதாரணங்களோடு விடைகாணும் புத்தகம் 'Blink'. எழுதிய எழுத்தாளர் க்ளாட்வெல் நியூயார்க்கர் பத்திரிக்கையில் எழுதுபவர். அப்பத்திரிக்கையின் (எனக்கு மிகவும் பிடித்த) சரளமான, அலுப்பு தட்டாத நடையில் எழுதி இருக்கிறார்.

புத்தகத்தின் அடிப்படைக் கோட்பாடு இது தான்: ஒரு துறையில் அனுபவமும், தேர்ச்சியும் பெற்ற ஒருவர், தனது முன் தீர்மானங்களுக்கு இடம் கொடுக்காத ஒரு சூழ்நிலையில், அத்துறையைச் சார்ந்த ஒரு விஷயத்தில் மதிப்பீடு செய்யும் போது, அவரது உள்ளுணர்வுகள் அவருக்கு நொடி நேரத்தில் தெரிவிக்கும் கருத்து தான் சரியானது. தர்க்க ரீதியாக ஆராய்ந்து பார்த்து ஒரு மதிப்பீட்டிற்கு அவர் வருவாரேயானால் அவரது உள்ளுணர்வு சொல்லும் கருத்தை விட சரியாக/சிறப்பாகவும் இருக்காது, சில சமயம் தவறாகவும் இருக்கலாம். இந்தக் கோட்பாட்டை இப்புத்தகம் பல உதாரணங்கள், பல ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்கள் ஆகியவை வாயிலாக நிலைநாட்டுகிறது.

புத்தகத்தின் உதாரணங்கள் மிக சுவாரசியமானவை. ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு உதாரணத்துடன் துவங்கி, ஒரு கேள்வியை முன்வைத்து, பிறகு பல ஆராய்ச்சிகள், மேலும் சில உதாரணங்கள் என்று விரிந்து, கடைசியில் அக்கேள்விக்கு விடை காண்பதில் முடிகிறது. முதல் அத்தியாயமே ஒரு அமெரிக்க அருங்காட்சியகம் ஒரு கிரேக்க சிலையை உண்மையா போலியா என்பதை நிர்ணயிப்பதிலிருந்து துவங்குகிறது. பல அறிவியற்சோதனைகள் அச்சிலையை உண்மை என்று சொல்ல, சில நிபுணர்கள் அதைப் பார்த்த உடனேயே 'ஏதோ சரியில்லை' என்று சொல்கிறார்கள். அறிவியல் சோதனைகளை நம்பி அருங்காட்சியகம் பல மில்லியன் டாலர்கள் கொடுத்து அச்சிலையை வாங்கிய சில வருடங்களில் அது போலி என்று நிரூபணமாகிறது. எத்தகைய சூழ்நிலையில் உள்ளுணர்வுகள் நம்பப்படலாம்/நம்பப்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக ஆரம்பத்திலேயே இக்கதை வருகிறது.

பிறகு எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் உள்ளுணர்வுகள் நம்பப்படலாம் என்பதைப் புத்தகம் ஆராய்கிறது. முதலாவது மனச்சாய்மானங்களுக்கு இடம் தராத சூழ்நிலைகள். உதாரணமாக, கறுப்பர் குறித்த மனச்சாய்மானங்கள் இருப்பவர், ஒரு கறுப்பரை நேர்முகத்தேர்வு செய்தால், அவருடைய துறை சார்ந்த பயிற்சிகள் தரும் செய்திகள் அவரது சாய்மானங்களால் மழுங்கடிக்கப்படும். அத்தகைய சூழ்நிலையில் அவரது உள்ளுணர்வு தரும் மதிப்பீடு நம்பத்தகுந்ததல்ல. மேலும் துறை சார்ந்த பயிற்சி முழுமையாகவும் அனுபவ ரீதியாகவும் இருக்க வேண்டும். இந்தக் கடைசிக் கருத்தை நியூயார்க் நகரத்தில் நடந்த டியால்லோ படுகொலை வாயிலாக விளக்குகிறார் க்ளாட்வெல். மிகக்குறைந்த நேரத்தில் பெரும் முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கும் காவல்துறையினர் எத்தகைய கடுமையான பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது பிரமிப்பூட்டுவதாகவும், அப்படிப் பயிற்சி பெற்றவர்களும் தவறிழைப்பது எத்தனை சுலபமானது என்பது அச்சமூட்டுவதாகவும் இருக்கின்றன.

புத்தகத்தின் இத்தகைய தாத்பர்யங்கள் மொத்தமும் அதன் கடைசி அத்தியாயத்தின் உதாரணத்தில் தெளிவாகிறது. ஐரோப்பாவில் ஒரு ஆர்க்கெஸ்ட்ரா குழுவில் ட்ராம்போன் வாசிக்க விரும்புபவர்களுக்கான தேர்வு நடக்கிறது. மிகவும் தேர்ச்சி பெற்ற இசை வல்லுனர்கள் தேர்வு செய்கிறார்கள். தேர்வுக்கு வந்திருப்பவர்கள் ஒரு திரைக்குப் பின்னாலிருந்து வாசிக்கிறார்கள். ஒருவர் வாசிப்பதைக் கேட்டவுடன், வல்லுனர்கள் 'அபாரம், அற்புதம்' என்று சொல்லி மற்றவர்களை வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள். திரை விலகுகிறது. ட்ராம்போன் வாசித்தது ஒரு இளம்பெண்! தேர்வு செய்தவர்களுக்கு அதிர்ச்சி! ஒரு பெண்ணால் இப்படி வாசிக்க முடியாது என்று நிராகரித்து விடுகிறார்கள். பல வருடங்களும், நீதிமன்ற விசாரணைகளும், மருத்துவ மற்றும் இசைச் சோதனைகளுக்கும் பிறகு அந்தப் பெண்ணுக்கு நியாயமும் ஆர்க்கெஸ்ட்ரா நாற்காலியும் கிடைக்கின்றன. சாய்மானங்களற்ற சூழ்நிலையில் வல்லுனர்களின் உள்ளுணர்வு சொன்ன கருத்தே சரியானது என்று சொல்லி புத்தகம் முடிகிறது.

இத்தகைய நம்பத்தகுந்த உள்ளுணர்வுகளைப் பயிற்சி மூலம் வளர்த்துக் கொள்ள முடியுமா என்பது முக்கியமான கேள்வி. முடியும் என்று ஆசிரியர் சொன்னாலும், அவரது கோட்பாட்டை நிறுவுவதற்கு மேற்கொண்ட முயற்சியை இக்கேள்விக்கு விடை சொல்வதில் மேற்கொள்ளவில்லை. அதாவது, எப்படி இம்முயற்சிகளை செயல்படுத்துவது என்பதை வெறுமனே கோடி மட்டும் காட்டுகிறார்.

இப்புத்தகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் இதைப் படிக்க வேண்டாம் என்று எனக்குத் தோன்றிய உள்ளுணர்வு? Pop psychology புத்தகங்களைப் பற்றிய எனது நெகட்டிவ் சாய்மானமே அதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். 'Don't judge a book by its cover' என்பது போல், 'Don't judge a book's content by its topic' என்றும் சொல்லலாம் என்று நினைக்கிறேன். :-)


Tuesday, January 10, 2006

Munich: ஒரு பார்வை


Munich
இயக்கம்: ஸ்டீபன் ஸ்பீல்பர்க்

1972-ஆம் ஆண்டு ஜெர்மனியின் ம்யூனிக் நகரத்தில் நடந்த ஒலிம்பிக் பந்தயங்களின் போது, இஸ்ரேல் நாட்டின் பந்தயக் குழுவினைச் சேர்ந்த பதினோரு பேர் பாலஸ்தீனியத் தீவிரவாதிகளால் பிணைக்கைதிகளாக சிறைபடுத்தப்பட்டனர். இத்தீவிரவாதிகள் எகிப்தில் இருக்கும் தமது சகாக்களின் விடுதலையைக் கோரினர். இஸ்ரேல் இவர்களோடு பேரம் பேச முற்றிலும் மறுத்தது. இரண்டு நாட்களுக்கும், சில விடுதலை முயற்சிகளுக்கும் இறுதியில் பதினோரு பேரும் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் எட்டு பேரில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். (மீதி மூவர் ஜெர்மனியால் கைது செய்யப்பட்டு, பின்னொரு நாள் ஒரு விமானக் கடத்தலின் போது தீவிரவாதிகளின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்).

இந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டுமென்று இஸ்ரேல் ஒரு ரகசியப் படை அமைத்தது. பதினோரு பேரை இந்தத் தாக்குதலின் திட்டமிட்டவர்களாக அடையாளம் கண்டு அவர்களைக் கொல்ல இப்படையை ஐரோப்பாவிற்கு அனுப்பியது. இந்தப்படம் அந்தப் படையைப் பற்றியும் அது நிகழ்த்தும் பழிவாங்குதல் பற்றியும். இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும் படத்தில் இந்தப் பழிவாங்குதல் எப்படி செயல்படுத்தப்பட்டது என்பதைத் தவிர, அது அப்படை வீரர்களை எப்படி உளவியல் ரீதியாக பாதிக்கிறது என்பது பற்றியும், பொதுவாக வன்முறைக்கு எதிராக வன்முறை நிகழ்த்துவதன் தார்மீகக் குழப்பங்கள் பற்றியும் பேசப்படுகின்றது.

வெறுமனே ஒரு பழிவாங்குதல் பற்றிய படம் என்று பார்த்தால், இது அவ்வளவு சுவாரசியமான படம் இல்லை - கற்பனையில் உருவாக்கப்பட்ட பழிவாங்கும் கதைகள் இதை விட வெகு விறுவிறுப்பாக இருந்திருக்கின்றன. ஆனால், சரித்திர நிகழ்வுகள் உருவாக்கும் கட்டுப்பாடுகளோடு எடுக்கப்பட்டதால், ஒரு சாதாரண படத்தை விட வெகு வித்தியாசமாக இருப்பதற்கான சூழ்நிலை படத்திற்கு இயற்கையாகவே அமைந்திருக்கிறது. நாயகர்கள் பல சமயங்களில் தடுமாறுகிறார்கள்; திட்டங்கள் தோற்கின்றன; வெற்றி பெறும் திட்டங்களுக்கும் பக்க விளைவுகள் இருக்கின்றன; அவர்கள் உபயோகப்படுத்தும் உபகரணங்களும் உத்திகளும் ரொம்ப சாதாரணமாக இருக்கின்றன; பிறர் தயவை நாடி இருக்க வேண்டிய சூழ்நிலையில் அதிகம் இருக்கிறார்கள் என்று ஒரு கற்பனைக் கதையில் காண முடியாத அசாதாரண இயல்புகளோடு திரைக்கதை பயணிக்கிறது. படத்தின் முடிவும் அத்தகையதே.

ஸ்பீல்பர்க் தான் ஒரு மிகச் சிறந்த கலை நுட்ப விற்பன்னர் என்று மீண்டும் நிரூபிக்கிறார். திரைக்கலையின் மாணவர்கள் ஒவ்வொரு காட்சியிலும் கற்றுக் கொள்வதற்கு விஷயம் இருக்கிறது. வண்ணம் மற்றும் ஒளியின் வடிவமைப்பு, காட்சிக் களன்களின் கலை இயக்கம், ஒளிப்பதிவுக் கோணங்கள் போன்ற தொழில் நுட்ப விஷயங்களும் சரி; கொஞ்சமும் தொய்வில்லாத திரைக்கதை, கூர்மையான வசனங்கள், பாத்திரத்தேர்வு, நடிப்பு (குறிப்பாக கதாநாயகன் பானா) போன்ற மென்பொருள் அம்சங்களும் சரி - அனைத்தும் ஒரு முழுமையான கூட்டமைப்பில் இயங்கி படத்தை திசை மாறாத கப்பலாக ஒருமுகமாக நகர்த்திச் செல்கிறன.

அப்படிச் செல்லும் திசை என்ன என்பதில் கொஞ்சம் பிரச்னை இருக்கிறது.

இப்படம் ஒரு சரித்திர நிகழ்வைப் பற்றியதாயினும், அந்நிகழ்வின் தொடர்ச்சி இன்னமும் ஒரு தீராத பிரச்னையாக இருப்பதால், இப்படத்தை தற்போதைய சூழ்நிலைகளை மறந்து விட்டுப் பார்ப்பது இயலாத காரியம். இன்று இஸ்ரேல்-பாலஸ்தீனம் பிரச்னையில் தெளிவான நல்லவர்களோ கெட்டவர்களோ கிடையாது. ஆகையால் இவ்விஷயத்தை அடிப்படையாக வைத்து ஒரு யோக்கியமான படம் எடுக்க முயல்பவர் எவரும் எந்த ஒரு தீர்மானமான சாய்மானத்தையும் கொண்டிருக்கவும் கூடாது, படத்தில் முன்வைக்கவும் கூடாது. அப்படிச் செய்தால் செயல்வேகம் ரீதியான சுவாரசியம் இல்லாத படத்தில் கருத்து ரீதியான சுவாரசியமும் இல்லாமல் போய்விடும்.

ஸ்பீல்பர்க் கண்டிப்பாக ஒரு யோக்கியமான படம் எடுக்கவே முயன்றிருக்கிறார். படம் முழுவதும் பல தர்க்கங்கள் நடக்கின்றன. வன்முறை பற்றிய தார்மீக தர்க்கம், அடிப்படை பிரச்னை குறித்த அரசியல் தர்க்கம், அடையாளங்கள் - மதம், தேசம் - குறித்த தர்க்கங்கள், உளவியல் ரீதியான தர்க்கங்கள் என்று பல அருமையான வசனங்களுடனான வாதங்கள் செய்யப்படுகின்றன. உதாரணமாக, ஒரு இஸ்ரேலியும் ஒரு பாலஸ்தீனியனும் நடத்தும் உரையாடல்:

(நினைவிலிருந்து)

இஸ்ரேலி: நீங்கள் இப்படியே கடத்தல், கொலை என்று செய்து கொண்டிருந்தால் உங்களை உலகம் மிருகங்கள் என்றுதான் கருதும்.

பாலஸ்தீனியன்: செய்யட்டுமே! கூடவே இப்படி எங்களை மிருகங்கள் ஆக்கிய இஸ்ரேலைப் பற்றியும் அறிவார்களே!

இஸ்ரேலி: எவ்வளவு காலம் தான் இப்படியே சண்டை போடப் போகிறீர்கள்?

பாலஸ்தீனியன்: இஸ்ரேல் அழியும் வரை, எங்கள் நாடு கிடைக்கும் வரை. நாங்கள் காத்திருப்போம்! (இளக்காரமாக) யூதர்கள் தங்கள் சொந்த நாட்டை அடைய எவ்வளவு நாட்கள் காத்திருந்தனர் என்பது நினைவிருக்கிறதா?

[இஸ்ரேல் யூதர்களின் பல்லாயிரக்கணக்கான வருடங்களின் கனவு]

படத்தில் கதாநாயகனுக்கு முக்கிய உதவி ஆற்றும் ஒரு குடும்பம் சர்வதேச அரசியல் சார்பு நிலைகளற்றதாக சித்தரிக்கப்படுகிறது. அவர்கள் பேசும் வசனங்கள் வாயிலாகவும் பல நடுநாயகமான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இதெல்லாம் இருந்தும், படம் பார்த்து முடித்தவுடன் தீர்மானமான சாய்மானங்கள் இல்லாமல் படம் பார்க்கும் எவருக்கும் சற்று இஸ்ரேல் ஆதரவு நிலையை எடுக்கத்தான் தோன்றும் என்று உறுதியாகச் சொல்லலாம். காரணம், படத்தில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவான கருத்துக்கள் எல்லாமே தர்க்க ரீதியாகவும், சொற்களாகவும், வசனங்களாகவுமே இடம் பெறுகின்றன. ஆனால் இஸ்ரேலுக்கு ஆதரவான கருத்துக்கள் அவ்வகையில் மட்டுமின்றி, உணர்வு ரீதியாகவும், காட்சிகள் வாயிலாகவும் இடம் பெறுகின்றன. திரைப்படம் என்ற பார்வை ஊடகத்தில் வசனங்களுக்கும் வார்த்தைகளுக்கும் அதிகமான சக்தி காட்சிகளுக்கும் நடிகர்களின் முகபாவங்களுக்கும் உண்டு. இந்தப் படத்தில் இஸ்ரேலியர்களின் குடும்பங்கள் ஏராளமாக காண்பிக்கப்படுகின்றன. கர்ப்பிணிப் பெண், கணவன்-மனைவி உறவு, பிள்ளைப் பேறு, அதை நண்பர்களோடு கொண்டாடுதல், கதாநாயகனின் குடும்பப் பின்புலம் என்று பல காட்சி அமைப்புகள். எனக்கு நினைவிலிருக்கும் வரை பாலஸ்தீனியர்களின் குடும்பங்கள் இரண்டு இடங்களில் காட்டப்படுகின்றன. ஒன்று, ஒரு விரைந்து செல்லும் காட்சியில் ஒரு தீவிரவாதி கொல்லப்படும் போது வருந்தும் பெண்மணி. இன்னொன்றில் ஒரு பாலஸ்தீனியப் பேராசிரியரின் வீட்டில் அவரது மனைவியும் குழந்தையும். அந்த மனைவியும் அப்பேராசிரியரைப் போலவே அரசியல் சார்புகளும் வாதங்களுமாய் இருப்பது போல.

இதை விட முக்கியமாக, ம்யூனிச் நிகழ்ச்சிக்கு பாலஸ்தீனியர்கள் தரப்பிலான பின்புலம் என்ன என்பது பற்றி ஒரு வார்த்தையோ காட்சியோ கூட இல்லை. ஆனால் படத்தைப் பார்ப்பவர்கள் இப்பழிவாங்குதலுக்குக்கு ஆதாரமான அந்நிகழ்ச்சியை மறந்து விடக் கூடாது என்பதற்காக அந்நிகழ்வு துண்டு துண்டாக படம் நெடுக (முடியும் வரை) காட்டப்படுகின்றது. மீண்டும், மீண்டும் அது நினைவூட்டப்படுகிறது. இத்தனை சரித்திரச் சுமைகளில்லாத படமாக இருந்தால் அத்தகைய திரைக்கதை அமைப்பை சாதுரியமான ஒன்றாய் கருதலாம்; ஆனால் அதுவே இந்தப் படத்தின் தார்மீக சமச்சீர்தன்மையை பாதிப்பதாக உள்ளது.

இது படம் எடுக்கப்பட்ட விதத்தில் உள்ள கோளாறு இல்லை, படம் வடிவமைக்கப்பட்ட விதத்திலேயே உள்ள கோளாறு. உணர்வு ரீதியாக ஒருபக்கச் சார்பு உள்ள வடிவமைப்பு அது என்று உணரும் போது ஸ்பீல்பர்க் ஒரு யூதர் என்பதை உதாசீனம் செய்ய முடியவில்லை. அதே சமயம் ஒரு இஸ்லாமியரோ ஒரு பாலஸ்தீனியரோ இது பற்றி ஒரு படம் எடுத்தால்/எடுத்திருந்தால் அதில் வேறு வகையிலான சாய்மானங்கள் இருக்கும்/இருந்திருக்கும் என்றும் தோன்றுகிறது.

இந்த முக்கியமான குறைபாட்டை ஒதுக்கி விட்டுப் பாராட்டுவது கடினம் என்றாலும், இது ஒரு பரிந்துரைக்கப்பட வேண்டிய படம் என்பதில் எனக்கு ஐயமில்லை. திரைக்கதை, வசனம், நடிப்பு ஆகியவற்றிற்கு மட்டுமாகவேனும் கண்டிப்பாகப் பார்க்கப்பட வேண்டிய படம்.


Friday, January 06, 2006

சுஜாதா, பிராமணர், தலித்

விகடனில் இந்த வாரம் சுஜாதா கட்டுரையைப் படித்து விட்டு கொஞ்சம் நீளமாக ஒரு பதிவை எழுதினேன். சரியாக வரவில்லை, அழித்து விட்டேன். எழுதாமலே விடவும் மனது கேட்கவில்லையாதலால், சுருக்கமாக ஒரு பதிவு.

இந்த வார கற்றதும் பெற்றதும் கட்டுரையில் பிராமணர் சங்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டதைப் பற்றியும் பொதுவாக பிராமணர்களின் சமூகப் பிரச்னைகள் பற்றியும் எழுதியிருக்கிறார். அச்சங்கத்தின் வெள்ளிவிழா மாநாட்டில் அவருக்கு 'வாழ்நாள் சாதனை விருது' வழங்கப்பட்டதை ஒட்டி எழுதப்பட்டது.

முதலில் சாதி சார்ந்த சங்கங்களை அங்கீகரிப்பதே தவறு. அதுவும் மேல்சாதி சங்கங்கள் கண்டிப்பாக ஆதரிக்கப் படக் கூடாது; 'அவங்க எல்லாம் வச்சிருக்காங்க' என்பதெல்லாம் சும்மா பம்மாத்து வாதம்.

கற்றவர்கள் இது போன்ற சங்கங்கள் தரும் விருதுகளைப் பெற்றவர்கள் ஆவது பெருமைக்குரிய விஷயமல்ல.

இதுவாவது பரவாயில்லை. ஆனால், பிராமணர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்று கொஞ்சம் கோடி காட்டிவிட்டு கீழ்கண்டவாறு எழுதுகிறார்:

திங்கள்கிழமை, திருமதி திலகவதியின் அம்ருதா பதிப்பகத்தில் 43 தலித் எழுத் தாளர்களின் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரைகளின் தொகுப்புப் புத்தகங்களை வெளியிட்டு பேச வாய்ப்பு கிடைத்தது. இந்த வெளியீட்டு விழாவில், நான் எழுதிவைத்துப் பேசியதை ‘உயிர்மை’ பத்திரிகையில் பார்க்கலாம். ‘தலித் இலக்கியம்’ என்ற தனிப் பாகுபாடு தேவையா, தலித் எழுத்தாளர்களால் மட்டும்தான் தலித் இலக்கியம் படைக்க முடியுமா ஆகிய இரு கேள்விகளுக்கும் விடை காண முயற்சித்தேன்.

இவ்விழாக்களில் கலந்துகொண்ட பின் யோசித்துப் பார்த்ததில், இந்த இரு இனத்தவருக்கும் பொதுவான சில பிரச்னைகள் இருப்பது தெரிந்தது.

இந்த கடைசி வாக்கியத்தைப் படித்ததும் தான் சுள்ளென்று கோபம் வந்தது. இந்த வாத முறையில் கொஞ்சம் கயமை இருக்கிறது. மேலோட்டமாக ஒரு ஒப்பீட்டை செய்து விட்டு, யாராவது கேட்டால் 'மேலோட்டமாகத் தானே செய்தேன்' என்று தப்பிக்கும் முறை.

1. தலித் பிரச்னைகளையும் பிராமணப் பிரச்னைகளையும் ஒரே வாக்கியத்தில் வைத்து ஒப்பிட்டுப் பார்த்தது போலவும் ஆயிற்று.

2. யாராவது கேட்டால், 'சில பிரச்னைகள் என்று தானே சொன்னேன்' என்று ஒரு வார்த்தைக்குப் பின் ஒளிந்து கொண்டது போலவும் ஆயிற்று.

தலித்துகள் நேற்றும் இன்றும் சந்திக்கும் பிரச்னைகள் மிக ஆழமானவை; பல தளங்கள் கொண்டவை; உளவியல் ரீதியாக பிராமணர் சந்திக்கும் பிரச்னைகளோடு ஒப்பிடவே முடியாதபடி அழுத்தமானவை. பிராமணர்கள் தமது பிரச்னைகளிலிருந்து தப்பிப்பதற்கு வழி வாசல்கள் அநேகம் உண்டு; தலித்துகளுக்கு அவை இப்பொழுது தான் மெல்ல மெல்ல உருவாகிக் கொண்டிருக்கின்றன. இவ்விரண்டு பிரச்னைகளையும் ஒரே வாக்கியத்தில் பொருத்திப் பார்ப்பது தவறானதும் உபயோகமற்றதும் ஆகும்.

இன்னமும் இந்த வகையான ஒப்பீட்டில் மீதமிருக்கும் குறைகள் பல. அவை பற்றி எழுதுவதற்கு என்னை விட பொறுமையும் திறமையும் ரோசா வசந்த் போன்றவர்களுக்கு அதிகம் இருப்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

Tuesday, January 03, 2006

தமிழகத் தேர்தல் கூட்டணிகள்

தமிழகத் தேர்தல் 20006 கூட்டு வலைப்பதிவில் எனது முதல் பதிவு.

நெரிசல் மரணங்கள்: ஞாநியின் கட்டுரை

வெள்ள நிவாரண விநியோகத்தின் போது நிகழ்ந்த நெரிசல் மரணங்கள் குறித்து பத்திரிக்கையாளர் ஞாநியின் கட்டுரையை ஜூனியர் விகடனிலிருந்து மறுபதிக்கிறேன். (கட்டணப் படிப்பிடமான விகடன் வலைத்தளத்தின் பதிப்பாளர்கள் மன்னிக்கவும்)

---------------------------------------------------

நிவாரண சோகம்...மரணமல்ல படுகொலைகள்!

ஞாநி


வியாசர்பாடி, எம். ஜி.ஆர் நகர் என்று தொடரும் நிவாரண நெரிசல் படுகொலைகளுக்கு யார் காரணம்?

விபத்துகள் என்று அறிவிக்கப்பட்டாலும், உண்மை யில் இவை, படுகொலைகள்தான். அரசாங்க நிர்வாக எந்திரத்தின் தவறுகள் முதல், மக்களின் சுயமரியாதையற்ற அடிமை புத்தி வரை பல விஷயங்கள் இந்த மரணங்களுக்குக் காரணமென்றாலும், அடிப்படைக் காரணம் கழகங்களின் அரசியல்தான்!

இலவச வேட்டி, இலவச சேலை, இலவச அரிசி, இலவசப் பணம் என்ற அணுகுமுறை தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு, தொடர்ந்து அ.இ.அ.தி.மு.க-வும் தி.மு.கவும் மாறிமாறி ஆட்சி நடத்தும் சமயங்களில் எல்லாம் விரிவாக்கப்பட்டு, இன்று முக்கியமான அரசியல் ஓட்டு வசூல் உத்திகளில் ஒன்றாக ஆக்கப்பட்டிருக்கிறது. மக்களை பிச்சைக்காரர்களாக நடத்தும் மனோபாவத்தின் வெளிப்பாடே இது!

வெள்ள நிவாரணம் யாருக்குத் தரப்பட வேண்டும் என்பது பற்றிய விதிமுறைகள் நாளுக்குநாள் தளர்த்தப்பட்டு, வெள்ளம் பாதித்த பகுதி முழுவதும் நிவாரணத்துக்குரிய பகுதியாகப் பிரகடனம் செய்யப்படுகிறது. அந்தப் பகுதியில் வசிக்கும் எல்லாக் குடும்ப அட்டைதாரர்களும் நிவாரணம் பெறத் தகுதியுடையவர்களாகி விடுகின்றனர்.

குடும்ப அட்டைகள் எல்லாம் உண்மை யான தகவல்களுடன் இருப்பதில்லை. லட்சலட்சமாக சம்பாதித்து வருமான வரி கட்டிக் கொண்டிருப்பவர்கூட, வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்வதாக ஒரு குடும்ப அட்டையை வாங்கி வைத்திருப்பதுதான் இங்கே வழக்க மாக இருக்கிறது. இப்படிப்பட்ட அட்டைகள் புழக்கத் தில் இருப்பதால், மாதம் சுமார் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறும் பதவியில், தலைமைச் செயலகத்தில் செக்ஷன் அதிகாரி அந்தஸ்தில் இருப்பவர்கள் கூட இந்த நிவாரண உதவியைப் பெற்றிருக்கிறார்கள். பெசன்ட் நகரில் சொந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் ஓய்வுபெற்ற ஓர் அதிகாரியிடம் அந்தப் பகுதியில் வசிக்கும் வசதியான இன்னொருவர், ‘உங்களுக்கும் நிவாரணம் உண்டே? நீங்கள் இன்னும் போய் பெற்றுக் கொள்ளவில்லையா? என்று விசாரித்ததை வேதனையுடன் என்னிடம் தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர். நகரில் இறந்தவர்கள், காயம டைந்தவர்களில் சிலர் நிச்சயம் ஏழைகள் அல்ல. பத்திரிகைகளில் வெளியாகியிருக்கும் புகைப்படங்களில், அவர்களின் தோற்றமே இதைக் காட்டும். பேட்டியளித்தவரில் ஒருவர் மளிகைக்கடை உரிமையாளராக இருந்து, சினிமா தயாரிப்பாளராக மாறி, அதில் பணத்தை இழந்துவிட்டு, இப்போது இரும்புக்கடையில் வேலை செய்பவர். அவருடைய சகோதரர் காய்கறிக்கடை நடத்துபவர். இந்த நிவாரணத்தை வாங்கப் போக வேண்டாம். தேவையானால், நானே உனக்கு அந்த 2 ஆயிரம் ரூபாயைத் தருகிறேன் என்று அண்ணனிடம் அவர் சொல்லியும், இரும்புக் கடைக்காரரின் மனைவி, நிவாரணம் வாங்கச் சென்று நெரிசலில் சிக்கி இறந்திருக்கிறார் என்பது இந்த சோகத்துக்கு நடுவில் தெரியும் கசப்பான உண்மை.

நமது நடுத்தர வர்க்கமும், வசதியுடையவர்களும் எந்த தார்மீக நெறியும் இல்லாமல் சீரழிந்து... பேராசை, பணத்தாசையால் உந்தப்பட்டு எங்கே.. எது... இலவசமாகக் கிடைத்தாலும் அதைத் தாங்களும் அடையவேண்டும் என்று நினக்கும் அவலம், இங்கும் சில இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. அசல் ஏழைகளும் நிஜமாகவே பாதிக்கப்பட்ட பஞ்சை பராரிகளும் இதனால் உதவிபெற முடியாமல் ஓரங்கட்டப்படுகிறார்கள்.

மெய்யான ஏழைகளுக்கு மட்டுமே கிடைக்க வேண்டிய இந்த உதவியை, இப்படி போலி ஏழைகளுக்கும் அரசு அறிவிப்பதன் மர்மம் என்ன? முதலாவது... பயனாளிகள் எண்ணிக்கையை அதிகரித்தால்தான் மொத்த நிவாரணத் தொகையை அதிகரிக்க முடியும். அடுத்து, அந்தத் தொகையை அந்தப் பகுதியில் இருக்கும் தங்கள் கட்சிக்காரர்கள் பயன்படுத்திக்கொள்ள வழி வகுப்பது. அரசுப் பணம் கட்சிக்காரர்களுக்கு கைமாற்றப்படுவதற்கு வசதியான உத்தியாக அரசியல் கட்சிகள் இதை நீண்டகாலமாக செய்து வருகின்றன.

இப்போதைய அரசு இதைப் பல மடங்கு விஸ்தரித்துவிட்டது. அத னால்தான் நிவாரண விநியோகத்தை சர்வ கட்சிக் குழுவைக் கொண்டு செய்யும்படி தி.மு.க. கூட்டணி கோரிக்கை எழுப்புகிறது. தான் ஆட்சி யில் இருந்தபோது, இப்படி அது செய்ததில்லை. ஆனால், இப்போது பெரும் தொகைகள் அ.தி.மு.கவின் முழுக் கட்டுப்பாட்டில் விநியோக மாவதை அதனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எல்லாக் கட்சிகளுக்கும் இதில் பங்கு வேண்டும் என்பதுதான் பின்னணியில் உள்ள அசல் கோரிக்கை.

நெரிசல் ஏற்பட்டதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று டோக்கன் பெற்றவர்கள் முதலில் பொருட்களைப் பெறவும் டோக்கன் வாங்காதவர்கள், முதலில் டோக்கன் வாங்கவும் போட்டிப் போட்டனர் என்பது வெளிப்படையாகத் தெரிவது. ஆனால், டோக்கன்களை எல்லாம் குறிப்பிட்ட கட்சியினரே சுருட்டி விட்டதாக எண்ணிய மாற்றுக் கட்சியினர், அடுத்த முறையாவது முந்திக்கொண்டு தாங்கள் டோக்கன்களைப் பெற்றுவிட வேண்டும் என்பதற்காக முண்டியடிக்கிறார்கள் என்பது களத்திலிருந்து வரும் நிரூபிக்க முடியாத தகவல்.
நிவாரண உதவி பெற முண்டியடிக்கும் கூட்டம்...

நிவாரணம் கிடைக்காமல் போய் விடும் என்ற பதற்றத்தை மக்களிடம் சில விஷமிகள் பரப்பி, மக்களைக் குவியச் செய்ததில்தான் நெரிசலும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டு மரணங்கள் நிகழ்கின்றன என்ற குற்றச்சாட்டிலும் உண்மை இருக்கிறது. ஒரே வாரத்தில், முதல் முறை சுமார் ஏழாயிரம் குடும்பங்களுக்கு டோக்கன் தரப்பட்டபோது எந்த நெரிசலும் ஏற்படாமல், அடுத்த சில தினங்களில் அடுத்து இன்னொரு ஏழாயிரம் பேருக்குத் தரும்போது மட்டும் நெரிசல் ஏற்படுகிறது என்றால் அதில் நிச்சயம் வதந்தியும் அரசியலும் கலந்திருக்கிறது.

இந்த முறை இந்த வெள்ள நிவாரண உதவி விநியோகத்தைப் பெரும் அரசியலாக ஆக்குவதில் தி.மு.க&வும் அ.தி.மு.கவும் முனைந்திருப்பதற்கு முக்கிய காரணம், சில மாதங்களில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல்.

உதவி செய்து நல்லப் பெயரையும் ஓட்டையும் சம்பாதிக்கவும், தன் கட்சியினர் கையில் கணிசமாக அரசுப் பணம் போய்ச் சேரவும் அ.தி.மு.க. திட்டமிட்டிருக்கிறது என்பது தி.மு.கவின் குற்றச்சாட்டு.

அசம்பாவிதங்கள் ஏற்பட்டு ஆட்சிக்குக் கெட்ட பெயர் வர வேண்டும் என்பதற்காக வதந்திகளையும் மீடியாவையும் பயன் படுத்துகிறது தி.மு.க. என்பது அ.தி.மு.க&வின் குற்றச்சாட்டு.

இன்றைக்கு நாட்டு நடப்புகளைப் பொறுத்தவரை, உண்மை என்பது எப்படி சன் டி.வி&க்கும் ஜெயா டி.வி&க்கும் நடுவில் இருக்கும் சராசரியாக இருக்கிறதோ... அதேபோல நிவாரண விஷயத்திலும் இரு தரப்பு கூற்றுக்கும் நடுவில்தான் உண்மை இருக்கிறது. அதை வைத்துப் பார்த்தால், இரு கழகங்களுமே முதன்மையான குற்றவாளிகள்!

நியாயப்படி ஒவ்வொரு பகுதியிலும் அரசு எந்திரம் நினைத்தால், மக்கள் தொகை கணக்கெடுப்பு போல, வீடு வீடாகச் சென்று நேரில் பார்த்து, பாதித்த வீடு எது என்று கண்டறிந்து, அங்கேயே நிவாரணத்தை விநியோகம் செய்துவிட்டு வருவது ஒன்றும் கடினமான காரியமல்ல. ஆனால், மக்களைப் பிச்சைக்காரர்களாக& சுயமரியாதையற்றவர்களாக ஆக்கும் டோக்கன், க்யூ வரிசை முறை, ஊழலுக்கு வசதியானது.

வெள்ள நிவாரணத் திட்டத்தின் மூலம் மக்களைக் கேவலப்படுத்துவது ஒருபுறம் இருக்கட்டும்... வெள்ளம் வந்து பாதிப்பு ஏற்பட்டதற்கே இரு கழகங்களும்தான் பொறுப்பு.

சென்னையில் நடைபெற்றிருக்கும் ஏரி ஆக்ரமிப்புகள் முதல், தமிழகமெங்கும் ஆற்று வெள்ளத்தைத் தீவிரப் படுத்திய மணற் கொள்ளைப் பிரச்னை வரை யார் காரணம்? கூவம் ஆற்றின் குறுக்கே ஒரு பல்கலைக்கழகம் கட்டடம் கட்டியதும், போரூர் ஏரியை ஆக்ரமித்து ஒரு கல்வி நிறுவனம் உருவானதும் கழகங்களின் ஆட்சிக் காலத்தில்தான். தமிழகம் முழுவதும் எல்லா ஏரி ஆக்ரமிப்புகளும், மணற்கொள்ளைகளும் அரசியல் பலம் படைத்தவர்களால் நடத்தப்பட்டதே! இக்கட்சிகளின் வட்டாரப் பிரமுகர்கள் பலர் ஆங்காங்கே இவற்றில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கும் செய்திகள் கடந்த இருபதாண்டு காலத்தில் புலனாய்வு இதழ்கள் முழுக்க நிரம்பியுள்ளன. தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றத்தின் தயவால் இப்போது அம்பலமாகி வரும் ஏரி, குளம், ஆற்றுப்படுகை ஆக்ரமிப்புகள், கொள்ளைகள் நடந்து வந்தபோது அவற்றைக் கண்டுகொள்ளாமல் இருந்த அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோர் பெயர்கள் தொகுக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்கள் சுட்டிக்காட்டும் அரசியல்வாதிகளை அடுத்த தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்.

கழிவுப் பாதைகளாக அரசாங்கத்தால் மாற்றப் பட்ட கூவமும், அடையாறும் இயற்கையின் பெரு வெள்ளத்தால் இப்போது சுத்தப்படுத்தப் பட்டிருக்கின்றன. சமூகத்தையே ஊழல், மோசடிகள், பொய், புனைச்சுருட்டுகளால் நாறடித்திருக்கும் கழகங்களை அடித்துச் சுத்தப்படுத்த மக்கள் பெருவெள்ளம் எப்போது பொங்கும்?