<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Sunday, October 30, 2005

தலையங்கங்கள்: எழுதப்பட்டதும் எழுதப்படாததும்

தில்லியில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் பற்றி 'தினமணி' இன்று தலையங்கம் எழுதியிருக்கிறது. எதிர்பார்த்தது போலவே, அதன் முக்கிய நோக்கம் அந்த வன்முறைக்குக் காரணம் என்னவாக இருக்கும் என்பதை ஆராய்வது.

"இந்தியாவுக்கு எதிரான கொலைவெறி அமைப்புகளின் இப்போதைய தாக்குதலுக்கு காரணங்கள் பல இருக்கலாம்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள காஷ்மீர் பகுதியில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் ஐந்து நிவாரண முகாம்களை அமைப்பது என இந்தியா - பாகிஸ்தான் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த இரு நாடுகளுக்கும் இடையில் சுமுக உறவுகள் ஏற்படாதவாறு தடுப்பது தீவிரவாத அமைப்புகளின் முக்கிய நோக்கம். இது அல்லாமல் தில்லி செங்கோட்டையில் 2002 டிசம்பர் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பான வழக்கில் சனிக்கிழமை தண்டனை அறிவிக்கப்படுவதாக இருந்தது. அதற்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க தீவிரவாத அமைப்புகள் விரும்பி இருக்கலாம்.

ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான விவகாரத்தில் சர்வதேச அணுசக்தி ஏஜென்சி கூட்டத்தில் ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா பக்கம் இந்தியா சேர்ந்துகொண்டு விட்டதாக ஒரு பிரசாரம் நடத்தப்படுகிறது. ஆகவே இந்தியாவுக்கு "பாடம் புகட்டுவதற்காகவும்' இந்த வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம்.

தீபாவளி, ரம்ஜான் பண்டிகைகள் கொண்டாடப்பட இருக்கும் வேளையில், இத்தாக்குதல்களை நடத்தினால் மக்களிடையே பெரும் பீதியை கிளப்ப முடியும் என்றும் தீவிரவாதிகள் கருதி இருக்கலாம்."


அப்பா, என்ன ஒரு முனைப்பு! இதில் பாதி செய்திகள் அந்தத் தீவிரவாதிகளுக்குக் கூடத் தெரிந்திருக்காது! இந்த காலத்தில் தீவிரவாதியாக இருப்பது எத்தனை சௌகரியமான விஷயம் என்று புரிகிறது. எப்பொழுது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், காரணங்களை மற்றவர்கள் தாமே கண்டு பிடித்துக் கொள்வார்கள்.

தலையங்கம் தொடர்கிறது:

"பொதுவாக காரணம் இன்றி அப்பாவி மக்களைக் கொல்ல யாருக்கும் மனம் வராது."

ஆமாமாம், பெரிய நீதிமான்கள் ஆயிற்றே இந்தத் தீவிரவாதிகள்! விட்டால் எங்கள் நாட்டுத் தீவிரவாதிகள் மற்ற நாட்டுத் தீவிரவாதிகளைக் காட்டிலும் ரொம்ப ஒழுக்கமானவர்கள் என்று ஜம்பமடிக்க ஆரம்பித்து விடுவார்கள்! அதென்ன "காரணம் இன்றி"? அப்பாவி மக்களைக் கொல்ல என்ன காரணம் இருக்க முடியும்?

பின்னர்:

"ஆனால், கொலைவெறி கொண்ட தீவிரவாதிகள், மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள். குண்டுகளை வைத்து பலரைக் கொல்வதை அவர்கள் ஒரு கடமைபோல கருதுகிறார்கள்."

எல்லா திசையிலும் முட்டி மோதி விட்டு, கடைசியில் உண்மையிடம் சரண்டர்.

இது தினமணி என்றால், எழுதப்படாத தலையங்கம் வெளிவராத நாளிதழ் ஹிந்து. திட்டமிட்டு நடத்தப்பட்ட, சர்வதேச கவனம் பெற்ற, எழுபது உயிர்களை தலைநகரில் பலி கொண்ட, தொடர் குண்டு வெடிப்புகள் பற்றி நிகழ்ச்சி நடந்த இரண்டு நாட்களில் தலையங்கம் இல்லை.

ஏதாவது தப்பித்தவறி எழுதப்போய், பாகிஸ்தானின் மனது கோணும்படி ஆகி விடுமோ என்று அஞ்சுகிறார்களா, அல்லது இந்த குண்டுவெடிப்புகள் நிகழ்த்தும் அளவிற்குத் தீவிரவாதிகளைத் தள்ளிய உண்மையான காரணங்கள் என்னவாக இருந்திருக்கும் என்று இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை.

Update: ஹிந்து இன்று (செவ்வாய்) தலையங்கம் எழுதியிருக்கிறது. "Whether the bombings were a one-off attack intended to avenge the conviction of Lashkar cadre involved in an earlier terrorist attack on the Red Fort," என்று ஆரம்பத்தில் காரணம் சுட்ட முயன்றாலும், முடிவில்,

"In the past, official Indian responses to such crises have been in the nature of either ill-tempered growling or hear-no-evil silence. Neither will suit the current situation. India must not step back from a peace process that has yielded real gains for the people of Jammu and Kashmir. Nor must it gloss over the pain of the victims of the inhuman serial bombings."

என்று எழுதியது சரியான வார்த்தைகள்தாம்.

Saturday, October 29, 2005

தில்லி: "ஏன்" என்று கேட்பது முட்டாள்தனம்

தில்லி குண்டு வெடிப்புகளுக்குக் காரணம் யாரென்பது நிரூபணமாகவில்லை. இருப்பினும், நடந்த இடங்கள் (சந்தைகள்), விதம் (நாட்டு வெடிகுண்டுகள்), சமயம் (இந்து பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பு) ஆகிய முத்திரைச் சின்னங்களைக் கொண்டு பார்க்கையில் இது அல் கைதா சிந்தனைச் சந்தாதாரர்களால் நடத்தப்பட்டவை என்பதில் எனக்கு ஐயமில்லை.

இது போன்றதொரு பயங்கரவாதச் செயல் நிகழும் போது, எங்கே, எப்படி, யாரால், எவ்வளவு மரணங்கள் ஆகிய கேள்விகளின் பின் வெகு சீக்கிரம் வருவது ஏன் என்ற கேள்வி. ஏன் இப்படிச் செய்தார்கள், காரணம் என்ன, ஏதாவது மந்திரி அசட்டு பிசட்டென்று எதையாவது சொல்லி விட்டாரா, நாட்டின் ஏதாவது மூலையில் அசம்பாவிதம் நிகழ்ந்து அதன் பின் விளைவா, ஏதாவது முட்டாள் நீதிபதி தப்பித்தவறி தீவிரவாதிகளுக்கு தண்டனை கொடுத்து விட்டாரா, என்ன நடந்தது, அவர்கள் கோபித்துக் கொள்ளும்படியாக என்ன செய்து விட்டோம் என்று மாய்ந்து மாய்ந்து சிந்திக்க வைக்கும் கேள்வி.

இந்த முறையும் கேட்கப்படும்.

ஆனால், இன்று தில்லியில் நிகழ்ந்தவை, அவை குறித்து "ஏன்" என்று கேட்பதின் முட்டாள்தனத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது. ஏனெனில் எந்த விதத்திலுமே நியாயப்படுத்த முடியாத சம்பவம் இது. பொது இடத்தில் அப்பாவி ஜனங்களை குண்டு வைத்துக் கொல்வதற்கு எந்த ஒரு நியாயமான காரணமும் இருக்க முடியாது என்பது எனது தனிப்பட்ட கருத்து. இருப்பினும், ஜனநாயக நாட்டில் மக்கள அனைவருமே அரசாங்கத்தின் தவறுகளுக்குப் பொறுப்பு என்றெல்லாம் சொல்பவர்கள் கூட, இந்தச் சம்பவத்திற்குக் காரணியாக எந்த ஒரு நிகழ்வையும் சுட்ட முடியாது.

1. இந்து ஆதரவுக் கட்சி/இஸ்லாமிய விரோதக் கட்சி என்று காணப்படும் பாஜக கட்சி ஆட்சியிலில்லை; அதன் உட்கட்சிச்சீர் குலைந்து அலங்கோலத்தில் இருக்கிறது.
2. காஷ்மீர் நிலநடுக்கத்திற்கு இந்திய அரசாங்கம் தன்னால் முடிந்த அளவிற்கு, உடனடியாக, பிற மாநில/பிற அசம்பாவிதங்களுக்குச் செய்ததில் எந்த விதத்திலும் குறைவில்லாமல் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.
3. இந்திய சமூகத்தினின்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏராளமாக ஆதரவு திரண்டிருக்கிறது, திரண்டு கொண்டிருக்கிறது.
4. பாகிஸ்தானில் இருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்தியா பல விதங்களில் உதவி இருக்கிறது - பணம், உணவு, பொருட்கள் என. எல்லைக்கோட்டின் திறப்பு பற்றி பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.
5. காஷ்மீர் முதலமைச்சர் பதவி, பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு அமைதியான முறையில் கைமாறப் போகிறது.

இத்தனைக்கும் நடுவில் இத்தகைய குண்டுவெடிப்புகள் நடக்கின்றன என்றால், அதன் மூலங்களை ஆராயும் முயற்சி போல ஒரு கால விரயம் இல்லை.

இந்தியா இப்பொழுது செய்ய வேண்டியது, தனது குடிமக்களை கவனமாக இருக்கும்படி அறிவுறுத்துவதும், தற்காப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவதும்தான்.

Wednesday, October 26, 2005

திருமாவின் தலைவர்

கடந்த 24-ஆம் தேதி ப்ரஸ்ஸல்ஸ் நகரில் நடந்த 'எழுக தமிழ்' உரிமை முழக்கப் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டு பேசி இருக்கிறார். அதில் அவர் சொன்னதாவது:

"ஒட்டு மொத்தத்திற்குமான தலைவன் பிரபாகரன்- தமிழீழத்துக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் தலைமை தாங்குகிற தலைவர் பிரபாகரன்தான்."

- புதினம் வலைத்தளம்



எனது கருத்து: திருமா தனது தலையை எங்கு வேண்டுமானாலும் கொண்டு போய் கொடுக்கட்டும்; அது அவரது உரிமை. ஆனால் ஏதோ சொந்த சொத்தைத் தூக்கிக் கொடுப்பது போல, மொத்தத் தமிழகத்தையும் தத்தம் செய்வது அநியாயம்.

அது சரி, தமிழகத்திற்கும் தலைவர் பிரபாகரன் என்றால், பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, திண்ணியம் எல்லாவற்றிற்கு அவர்தான் பொறுப்பா? திருமாவுக்கே வெளிச்சம்!

Tuesday, October 25, 2005

அமெரிக்க சைவம் = அ.சைவம்

அமெரிக்காவில் சைவமாக இருப்பது என்பது சுலபமில்லை; ரொம்பவும் சிக்கனான விஷயம். எந்த உணவிலும் எதுவும் இருக்கலாம்; நாம் தான் நண்டு பார்த்து சாப்பிட வேண்டும்.

நான் வந்த புதிதில் எனது வீட்டிற்கும் கல்லூரிக்கும் நடு மத்தியில் ஒரு டாகோ பெல் இருந்தது. சப்பாத்தி நடுவில் சப்ஜி வைத்து சுருட்டிக் கொடுத்தது போல் இருக்கிறதென்று போகையில் ஒன்று வருகையில் ஒன்று என விளாசிக் கொண்டிருந்தேன். ஒரு நாள், அந்த சப்ஜி சரக்கையெல்லாம் தாளித்து எடுப்பது லார்டு என்ற மிருகக்கொழுப்பில் என்று சில நண்பர்கள் உளவறிந்து கண்டு பிடித்தனர். கெட்டது குடி. டாகோ பெல் போனால் எல்லாருக்கும் வாயுப் பிரச்னை மட்டும் தான் வரும், எனக்கு வால்யூ பிரச்னையும் வந்து விட்டது. அன்றிலிருந்து இன்று வரை இந்த விஷயத்தில் போராட்டம் தான்.

(சில வருடங்களுக்கு முன்பு டாகோபெல் திருந்தி விட்டார்கள் என்று கேள்விப்பட்டேன், யார் கண்டது?).

பொதுவாக அமெரிக்கர்களுக்கு எது சைவம், எது அசைவம் என்பதில் ஒரு மிகக் கடுமையான குழப்பம் இருக்கிறது. பேப்பரில் அட்வர்டைஸ்மண்ட் கொடுக்காத குறையாக நானும் எவ்வளவோ அமெரிக்கர்களிடம் எத்தனையோ விதங்களில் சொல்லிப் பார்த்து விட்டேன், இன்னமும் இவர்களுக்கு விளங்க மாட்டேன் என்கிறது.

அவர்கள்: இது மாமிசம் இல்லை, மீன் தான்...

நான்: (மனதுக்குள், "தத்தி, தத்தி!") மீனும் அசைவம் தானே...

அவர்கள்: சரி, உன்னைப் பொறுத்த வரையில் எது சைவம், எது அசைவம்...

இந்தக் கேள்விக்கு நான் பதில் சொன்ன ஒவ்வொரு முறைக்கும் யாராவது எனக்கு ஐந்து பைசா கொடுத்திருந்தால், சொத்து சேர்ந்து நான் இந்நேரம் இந்தியா திரும்பி இருப்பேன். கண்கள் இருப்பதெல்லாம் அசைவம், நரம்பு மண்டலம் இருந்தால் அசைவம், அம்மா-அப்பா இருந்தால் அசைவம், அசையும் உயிரெல்லாம் அசைவம் என்று பலவாறாக சொல்லிப் பார்த்தாலும் கடைசியில், "அப்போ பெப்பரோனி?" என்று கேட்பார்கள்.

(இதற்கு அடுத்தபடியாக வரும் "ஏன்" கேள்வியை கையாளுவது எளிது. கொஞ்சம் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு, "மத ரீதியான காரணங்களுக்காக" என்று சொன்னால் கப்சிப் என்று இருந்து விடுவார்கள்)

இந்தக் குழப்பம் காரணமாக, விவஸ்தையே இல்லாமல் கண்டா கண்டதையும் அசைவப்பண்டம் ஆக்கி விடுகிறார்கள். உருளைக்கிழங்கை நறுக்கி எண்ணையில் வறுக்க எதற்கு மாட்டுக் கொழுப்பு? கேவலம் பெப்பர்மிண்டுக்குள் கூட ஜெலாடின் என்று ஒரு குண்டு வைத்து விடுவார்கள். சைனீஸ் உணவகம் போய் டோஃபுவையும் மாமிசத்தையும் பார்த்தால் ஆறு வித்தியாசங்கள் இல்லை, அரை வித்தியாசம் கூடக் கண்டுபிடிக்க முடியாது.

நான் படும் பாட்டைப் பார்த்து ஒரு சமயத்தில் அலுவலக நண்பரொருவர் என்னை ஒரு சுத்த சைவ உணவகத்திற்கு அழைத்துச் சென்றார். அது ஒரு வினோதமான அனுபவம் - அந்த உணவகத்தில் எல்லாமே டோஃபு தான். ஆனால் அதை எல்லாவிதமான மாமிச உணவுகள் போலவும் தயாரித்திருப்பார்கள் - குணம், மணம் மட்டுமல்ல, பார்ப்பதற்கும் பிராணி போல் இருக்கும் உணவுகள். எதையாவது கொல்லாவிட்டாலும் பரவாயில்லை, கொன்றது போல் கற்பனையாவது செய்து கொள்ளாவிட்டால், தொண்டைக்குள் இறங்காது போலிருக்கிறது. வரும் வழியில், இதற்கு பதில் வக்கணையாக ஒரு நிஜ வாத்து ரோஸ்ட் சாப்பிட்டிருக்கலாம் என்று தோன்றியது.

இங்கிருக்கும் ஒரு நல்ல பழக்கம் - பலசரக்குக் கடைகளில் கிடைக்கும் பொருட்கள் ஒவ்வொன்றிலும் உள்ளிருக்கும் விஷயங்கள் (ingredients) என்ன என்ன என்பதை வெளியே எழுதி விட வேண்டும். அதை விழுந்து விழுந்து படிக்கும் ஒரே ஜென்மங்கள் என் போன்ற இந்தியர்கள் தான் என்று நினைக்கிறேன். பரவாயில்லை. இல்லாவிட்டால், வாங்குவது உசத்தியான பொருள் என்று நான் நினைத்துக் கொண்டிருக்க, அது மட்டனான பொருளாயிருந்து தொலைக்கும்.

Sunday, October 23, 2005

அச்சடிக்க வேண்டிய அனைத்து செய்திகளும்

"Mirror, Mirror on the wall, who is the fairest of them all?"

நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை தன்னைத் தானே தடுக்கிக் கொண்டிருக்கிறது. மூன்று வருடங்களுக்கு முன்பு ஜேசன் ப்ளேர் என்ற நிருபர் எழுதிய "செய்திக்கட்டுரைகள்" எல்லாம் புருடாக்கள் என்று கண்டுபிடிக்கப்பட்ட போது, பாரம்பரியம் மிக்க அப்பத்திரிக்கைக்கு அது ஒரு பெரிய பின்னடைவாகக் கருதப்பட்டது. ஆனால் அதையெல்லாம் ஒன்றுமில்லாமல் செய்து கொண்டிருக்கிறது தற்போதைய ஜூடித் மில்லர் விவகாரம்.



வெளியூர்காரர்களுக்கு ஒரு முன்கதைச் சுருக்கம்:

2002, 2003 வருடங்களில் ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக புஷ் அரசாங்கம் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்த பொழுது, அமெரிக்க ஊடகங்கள் பெரும்பாலும் கேள்வி கேட்காமல் ஜால்ரா தட்டிக் கொண்டிருந்தன. அரசாங்க அலுவலர்கள் சொல்லும் புரட்டுச் செய்திகளையெல்லாம் வேதவாக்காக எழுத்துப் பிசகாமல் பத்திரிக்கைகள் 'செய்திகளாக' வெளியிட்டன. நி.டை பத்திரிக்கையில் இந்தக் கைங்கரியத்தைச் செய்தவர்களுள் தலையானவர் ஜூடித் மில்லர் என்ற நிருபர்/பத்திரிக்கையாளர். அவர்கள் சொல்வதையெல்லாம் இவர் எழுத, எழுத வேண்டியதையெல்லாம் அவர்கள் சொல்லிக் கொடுக்க, வியாபாரம் கன ஜோராக நடந்தது.

2003 ஆரம்பத்தில் ஈராக் போரும் பத்திரிக்கைத் தலையங்களின் போர்ச்சங்கு ஊதலுடன் துவங்கியது.

அந்த சமயத்தில் ஜோ வில்சன் என்ற வெளியுறவுத் துறை அலுவலர் ஈராக் அணு ஆயுதங்கள் தயாரிக்க முயற்சி செய்வதாக வந்த அறிக்கைகளின் ஆதாரம் தவறு என்று ஆப்பிரிக்க நைஜர் நாட்டிற்குச் சென்று வந்து ஒரு கட்டுரை எழுதினார்.

ஏற்கனவே பேரழிவு ஆயுதங்கள் கண்டுபிடிக்காமல் தடவிக் கொண்டிருந்த புஷ் அரசாங்கத்திற்கு இது மேலும் ஒரு தலைவலி ஆயிற்று. உடனே அரசியல்வாதிகள் என்ன செய்வார்கள்? அரசியல் செய்வார்கள். இந்த ஜோ வில்சனின் நதிமூலம் ரிஷிமூலம் எல்லாம் ஆராயத் துவங்கினார்கள். இதை முன்னின்று செய்யத் துவங்கியது புஷ் அரசாங்கத்தின் மூளைகளான கார்ல் ரோவும், 'ஸ்கூட்டர்' லிப்பியும்.

கொஞ்ச நாட்களில் ராபர்ட் நோவாக் என்ற எழுத்தாளர், ஜோ வில்சனின் மனைவி வேலரி ப்ளேம் ஒரு CIA operative என்றும் அவரது சிபாரிசின் பேரில் தான் ஜோ நைஜர் சென்று வந்தாரென்றும் ஒரு கட்டுரையில் போட்டு உடைத்தார். இந்தத் தகவல் தமக்கு எப்படிக் கிடைத்தது என்பதை எழுதவில்லை. அங்கு துவங்கியது வினை.

பிரச்னை என்னவென்றால் ஒரு பாதுகாக்கப்பட்டு வரும் சி.ஐ.ஏ ஊழியரின் பெயரை பொதுவில் வெளிப்படுத்துவது சட்டப்படி குற்றம். அதைத் தெரிந்து செய்வது ராஜத் துரோகத்திற்கு இணையானது. இந்தக் கட்டுரை எழுப்பிய அமளியைக் குறைக்க புஷ் அரசாங்கம் ஒரு விசாரணைக் குழு அமைத்தது.

இந்த விசாரணைக் குழு, தோண்டித் துருவிப் பார்த்ததில், ராபர்ட் நோவாக் தவிரவும் பல பத்திரிக்கையாளர்கள் இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. செய்தியை வெளிப்படுத்துவதில் நோவாக் முந்திக் கொண்டாரே ஒழிய, இந்த சிபாரிசு விஷயத்தை வெளியில் சொல்லி ஜோ வில்சனை அவமானப்படுத்துவதில் அரசாங்கத்தில் பலர் முனைப்பாக இருந்தனர். இப்படி சம்பந்தப்பட்ட நிருபர்களில் டைம்ஸ் வாரைதழைச் சேர்ந்த ஒருவர், பிரபல தொலைக்காட்சிப் பேட்டியாளர் டிம் ரஸ்ஸர்ட் ஆகியோருடன் நமது கதாநாயகி ஜூடித் மில்லரும் ஒருவர்.

விசாரண மேற்கொண்ட பாட்ரிக் ஃபிட்ச்ஜெரால்ட் ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைத்து பலரை சாட்சி சொல்ல அழைத்தார். ராபர்ட் நோவாக், டிம் ரஸ்ஸர்ட் உட்பட பலர் வந்து சாட்சி சொன்னார்கள். கொஞ்சம் முரண்டு பிடித்து பின்னர் டைம்ஸ் நிருபரும் சாட்சி சொன்னார். ஆனாலும் ஜூடித் மில்லர் தான் பத்திரிக்கை தர்மத்தைக் காப்பாற்றுவதாகவும், தனது செய்தி மூலம் யார் என்பதை வெளியிட மறுப்பதாகவும் சொல்லி சாட்சி சொல்ல மறுத்தார். சிறப்பு நீதிமன்றத்திற்கு சாட்சி சொல்லமல் இருப்பது குற்றமாதலால், இவர் சிறைக்கு அனுப்பப்பட்டார் (சுப்ரீம் கோர்ட் இந்த விஷயத்தில் தலையிட மறுத்து விட்டது). நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை இவருக்காக வெகுவாகப் போராடியது. பல தலையங்கங்கள் எழுதியது.

சிறையில் சில மாதங்கள் இருந்து விட்டு, திடீரென மனம் மாறி தான் சாட்சி சொல்ல சம்மதிப்பதாகக் கூறினார். தனது செய்தி மூலமான நபர், தன்னை ரகசியக் காப்பிலிருந்து விடுவித்து விட்டதாகக் கூறி, நீதிமன்றத்தின் முன் ஆஜரானார். இந்த செய்தி மூலம், வேறு யாருமல்ல, நாம் முன்கண்ட "ஸ்கூட்டர்" பேர்வழி தான், இதை முன்னமேயே கூட சொல்லி இருப்பேனே என்று கூறுகிறார்.

வெளியில் வந்த மில்லர் பல நாட்கள் மௌனமாயிருந்து விட்டு ஒரு நீண்ட தன்னிலை விளக்கக் கட்டுரை எழுதினார். ஆனால், இக்கட்டுரையில் விளக்கங்களை விட கேள்விகளே அதிகமாயிருந்தன. அவரது 2003ம் வருடக் குறிப்புகளில் வாலரி ப்ளேமின் பெயர் இருக்கிறது. அது எப்படி அங்கு வந்தது என்பது மறந்து விட்டது என்கிறார். "ஸ்கூட்டர்" லிப்பி அதை தன்னிடம் சொல்லவில்லை என்று சாதிக்கிறார். பேரழிவு ஆயுதங்கள் குறித்துத் தவறாக எழுதியது தான் மட்டுமல்ல என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்.

பத்திரிக்கையின் ஆசிரியர், இந்த விவகாரத்தின் சகல அம்சங்களும் தம்மை வேதனைப் படுத்துகின்றன என்று சொல்லியிருக்கிறார். மில்லர் தம்மிடமிருந்து பல விஷயங்களை மறைத்ததாகவும், ஈராக் விஷயத்தில் எந்த மேற்பார்வையுமின்றி தான் தோன்றித் தனமாக அவர் செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டுகிறார். பத்திரிக்கையின் நம்பகத்தன்மையை இது குலைத்திருப்பதாக பத்திரிக்கையின் ஊழியர்களே நினைப்பதாகவும் செய்திகள் சொல்கின்றன.

பொதுவாக புஷ் அரசை எதிர்க்கும் இப்பத்திரிக்கை, அதை ஆதரித்த ஒரு விஷயத்தில் இப்படி மாட்டிக் கொண்டது முரண்நகையாக இருக்கிறது.

அரசியல் ரீதியாக இந்த விவகாரத்தின் இறுதிக்கட்டம், இந்த வாரம் நிகழும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. நிக்ஸனின் இரண்டாவது ஆட்சி காலத்திற்கு Watergate, ரேகனுக்கு Iran-Contra, க்ளிண்டனுக்கு Lewinsky போல் புஷ்ஷிற்கு இது உருவாகும் என்பது ஹேஷ்யமாக இருக்கிறது.

ஆயினும் செய்திகளை பிரசுரிக்கும் நிறுவனங்கள் செய்திகளின் பாடுபொருளாக ஆகியிருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது.

"Silence of the Lambs" திரைப்படத்தில் வரும் ஒரு வசனம் நினைவுக்கு வருகிறது:

"Why don't you turn that high-powered perception at yourself and tell us what you see, or, maybe you're afraid to."

Saturday, October 22, 2005

அசாதாரணமான கதைகள்

ஜும்பா லஹிரி இங்கிலாந்தில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்த ஆங்கில எழுத்தாளர். இவரது முதல் புத்தகம் "Interpreter of Maladies" என்ற சிறுகதைத் தொகுப்பு. ஒன்பது சிறுகதைகள் கொண்ட இந்த இருநூறு பக்க புத்தகத்திற்குப் 2000ம் வருடத்திற்கான புலிட்சர் பரிசு கிடைத்தது. கொஞ்ச நேரம் முன்பு இப்புத்தகத்தைப் படித்து முடித்தேன்.


ஏகோபித்தமான வரவேற்பும், பெரும் பரிசையும் பெற்ற ஒரு புத்தகத்தைப் படிப்பதில் சில இடைஞ்சல்கள் உள்ளன. "ஒழுங்காப் படிக்கிறியா, புரிஞ்சு படிக்கிறியா இல்ல ஏனோ தானோன்னு படிக்கிறியா' என்று பக்கத்தில் நின்று கொண்டு யாரோ மிரட்டியவாறு இருப்பதைப் போன்ற பிரமை நீங்கக் கொஞ்சம் நேரமாயிற்று. முதல் சில பக்கங்களைப் பரீட்சைக்குப் படிப்பது போல் தான் படித்தேன்.

இதையெல்லாம் மீறி, ஆரவாரமில்லாத, எளிமையான மொழியில், மிகுந்த காருண்யத்துடனும், மனித நேயத்துடனும் எழுதப்பட்டுள்ள இக்கதைகள், என்னிடம் தோழமையுடன் பேசின. படிக்கப் படிக்க, லஹிரியின் கதைகள் என்னை முழுமையாக வசீகரித்தன.

எல்லாக் கதைகளுமே ஏதோ ஒரு விதத்தில் அந்நியப்படுதலைப் பற்றிப் பேசுகின்றன. சில கதைகளில் மிக நேரடியாகவும், சிலவற்றில் அடிநாதமாகவும் இது இருக்கிறது. ஒன்பது கதைகளில் ஆறு, அமெரிக்காவில் இந்தியர்களின் வாழ்வைச் சித்தரிப்பதாய் உள்ளன; இரண்டு முழுவதும் இந்தியக் கதைகளாகவும், ஒன்று இந்தியா செல்லும் அமெரிக்க இந்திய சுற்றுலாக் குடும்பத்தைப் பற்றியும் உள்ளன. இந்தியர்கள் பெரும்பாலும் வங்காளிகள்; அவ்வப்போது தலைப்படும் பஞ்சாபியர்கள். அமெரிக்கா வந்தவர்கள் பல காலத்துக்கு முன்பு வந்தவர்களாகவோ, அவர்களது பிள்ளைகளாகவோ இருக்கின்றனர்; சமீபத்திய H1-Bக்கள் இல்லை.

லஹிரியின் பின்னணி காரணமாகவோ என்னவோ, அமெரிக்காவில் இந்தியர்களின் வாழ்வை ஒட்டிய கதைகள் மிகவும் நேர்த்தியாக உள்ளன. கவனமாகவும் நுணுக்கமாகவும் உள்ள விவரணைகள், (குறிப்பாக அமெரிக்கர்கள்-இந்தியர்கள் உராயும் தருணங்கள்) பாத்திரப் படைப்புகள், சம்பவங்கள் என்று பார்த்துப் பார்த்து எழுதியதாக இருக்கின்றன. இந்தியாவில் நிகழும் கதைகள் சிறப்பாக இருப்பினும், மற்ற கதைகளோடு சேர்த்து வாசிக்கையில் ஒரு மாற்று குறைவாகத் தான் தோன்றுகிறது.

எல்லாக் கதைகளுமே சாதாரண மக்களைச் சுற்றித் தான் இயங்குகின்றன. சாதாரண மக்களின் வாழ்வுகள் சின்னச்சின்ன சிக்கல்களும், சஞ்சலங்களும், சமாதானங்களும், சமரசங்களும் - in short சாதாரணங்கள் - நிரம்பியது. இதைக் குத்திக் கிளறி, நக்கலடித்து எழுதுவது சுலபம். இவர்களைப் புரிந்துணர்வுடன், பரிவுடனும் அணுக அன்பு நிறைந்த மனமும், நுட்பமான எழுத்துத் திறனும் வேண்டும். லஹிரியிடம் இவை உள்ளன என்பதற்கு இவரது கதைகளே சான்று. நமக்கு நெருங்கிய நண்பரொருவரைப் பற்றி இன்னொருவரிடம் சொல்லும் போது, அந்த நண்பரின் சிறிய குறைகளை மறைத்து, பெரிய குறைகளை சிறிதுபடுத்திச் சொல்வோம் அல்லவா? அந்தத் தன்மை கிட்டத்தட்ட எல்லாக் கதைகளிலும் உள்ளது.

எனக்கு எல்லாக் கதைகளுமே ஏதோ ஒரு விதத்தில் மிகவும் பிடித்திருந்தது. ஒரு கதை - "Interpreter of Maladies" என்ற புத்தகத் தலைப்புக் கதை - தவிர. மற்ற கதைகளில் இல்லாத செயற்கைத்தனம் - பாத்திரங்கள், நிகழ்வுகள் இரண்டிலும் - இதில் இருப்பதாகப் பட்டது. எனக்கு மிகவும் பிடித்த கதைகள் - "When Mr. Pirzada came to dine", "Mrs. Sen's" மற்றும் "The third and final continent". புத்தகத்தின் ஐந்தாவது கதையைப் படித்ததும் பாஸ்டன் பாலாஜி இதைப் படிக்கக் கூடாது என்று தோன்றியது.

புத்தகத்திலிருந்து சில மேற்கோள்கள்:

அமெரிக்காவை இந்திய வாசகர்களுக்கும், இந்தியாவை அமெரிக்க வாசகர்களுக்கும் அறிமுகம் செய்ய ஒரு குழந்தைப் பாத்திரத்தின் பார்வையை ஒரு உத்தியாக சில கதைகளில் பயன்படுத்துகிறார் லஹிரி. அந்த வகையில் இரு இடங்கள்:

இந்தியா எங்கே இருக்கிறது?

"Mr. Pirzada is Bengali, but he is a Muslim", my father informed me. "Therefore he lives in East Pakistan, not India." His finger trailed across the Atlantic, through Europe, the Mediterranean, the Middle East, and finally to the sprawling orange diamond my mother once told me resembled a woman wearing a sari with her left arm extended....Pakistan was yellow, not orange. I noticed that there were two distinct parts to it, one much larger than the other, separated by an expanse of Indian territory; it was as if California and Connecticut constituted a nation apart from the US.

அரிவாள்மணை

Instead of a knife, she used a blade that curved like the prow of a Viking ship, sailing to battle in distant seas. The blade was hinged at one end to a narrow wooden base. the steel, more black than silver, lacked a uniform polish, and had a serrated crest, she told Eliot, for grating.

பாஸ்டன் பாலாஜி படிக்கக் கூடாத கதையில் ஒரு அழகான வர்ணனை:

She stared at some bottles, some short, others tall, arranged on an oval tray, like a family posing for a photograph.

முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பாஸ்டனில் ஒரு நூறு வயது பெண்மணி வாழ்ந்த இல்லத்தின் வருணனையின் நுட்பம் பிரமிக்க வைக்கிறது:

Next to the bench on which the woman sat was a small round table, its legs fully concealed, much like the woman's, by a skirt of lace. The table held a lamp, a transistor radio, a leather change purse with a silver clasp, and a telephone. A thick wooden cane coated with a layer of dust was propped against one side. There was a parlor to my right, lined with bookcases and filled with shabby claw-footed furniture. In the corner of the parlor I saw a grand piano with its top down, piled with papers. The piano's bench was missing; it seemed to be the one in which the woman was sitting. Somewhere in the house a clock chimed seven times.

இதே கதையின் முடிவில் ஒரு பாத்திரம் சொல்வதாக வரும் வரி:

Still, there are times I am bewildered by each mile I have traveled, each meal I have eaten, each person I have known, each room in which I have slept. As ordinary as it all appears, there are times when it is beyond my imagination.

இதை ஜும்பா லஹிரியே சொல்வதாகக் கொள்ளலாம் - கடைசி வரியைத் தவிர.

Sunday, October 16, 2005

ஆப்பிரிக்க பஞ்சாயத்து

இன்றைய வாஷிங்டன் போஸ்டில் ஆப்பிரிக்க ருவாண்டா நாட்டின் இன்றைய நிலை பற்றி ஒரு அருமையான கட்டுரை வெளியாகி இருக்கிறது.

1984-ம் ஆண்டு ஒரு நூறு நாள் பொழுதில், ருவாண்டாவில், பெரும்பான்மையினரான ஹுடு இனத்தவர் சிறுபான்மையினரான டுட்ஸி இனத்தைச் சேர்ந்த சுமார் பத்து லட்சம் பேரைப் படுகொலை செய்தனர். இதைத் திட்டமிட்டு நடத்திய அரசியல்வாதிகளும் தலைவர்களும், டான்சானியாவில் சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணை முன் நிறுத்தப் பட உள்ளனர். கொலைகளைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பலரது வழக்குகள் ருவாண்டா கிரிமினல் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இவை தவிர, கொலைகளுக்கு உடந்தையாக இருந்த ஏராளமானோர் இன்று ருவாண்டாவின் உள்ளூர்/கிராம நீதிமன்றங்களினால் விசாரிக்கப்படுகின்றனர். கசாச்சா என்று அழைக்கப்படும் இந்த நீதிமன்றங்கள் - நமது பஞ்சாயத்து விசாரணைகளைப் போல - ஊர்ப்பெரியவர்களால் நிர்வகிக்கப்பட்டு, நெகிழ்வான விதிகளோடு நடத்தப்படுகின்றன.


நாடெங்கிலும் சுமார் பத்தாயிரம் கசாச்சாக்கள் உள்ளன; சுமார் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட குற்றவாளிகளை விசாரிக்கின்றன.

கசாச்சா என்றால் 'புல்வெளியின் மீது' என்று பொருள்.

கட்டுரையிலிருந்து சில பகுதிகள்:

"அந்த ஒன்பது நீதிபதிகளும் புல்வெளியில் தற்காலிகக் கூரைக்கடியில் வந்து அமர்ந்தனர். ஒவ்வொருவரும் மஞ்சள், பச்சை, நீலக் கோடுகள் கொண்ட துணிக் கச்சைகளை உடைகளின் மீது அணிந்திருந்தனர். அவற்றின் மீது இன்யாங்கமுகாயோ - நம்பத்தகுந்தவர் - என்று எழுதி இருந்தது. இரண்டு குற்றவாளிகள் முன் நிறுத்தப்பட்டனர். பொது மக்கள், ஒரு ஐம்பது, அறுபது பேர் எழுந்து நின்றனர். தலைமை நீதிபதி, "நாம் இப்பொழுது நினைவு கூர்வோம்" என்று கூறினார். அதன் பின், ஒரு நீண்ட அமைதி."

"ருவாண்டாவில் நிகழ்த்தப்பட்ட குற்றங்கள் கொடுமையானவை. இருப்பினும், வாரம் ஒரு முறை கூடும் கசாச்சாக்கள் பழிவாங்குதலுக்கு எதிராகவும், சமாதானத்திற்கு ஆதரவாகவும் பேசுகின்றன - குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அந்த கசாச்சாவிற்கு வெளியே பிற தண்டனைகள் கிடைக்கக்கூடிய சாத்தியங்கள் இருப்பினும்."

"ருவாண்ட நாட்டு மக்களுக்கு என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள விழைகிறார்கள் - தமக்கு நெருக்கமானவர்கள் எங்கே, எப்படி இறந்தார்கள் என்று அறியாமல் முன்னகர்வது கடினம். நாடெங்கிலும் நினைவுச்சின்னங்கள் உள்ளன, ஆயினும் அங்கிருக்கும் பலகைகள் பெரும்பாலும் காலியாகவே உள்ளன - இறந்தவர்கள் பெயர்கள் தெரியாததால். அவர்கள் பெயர்களைத் தெரிந்து கொள்வதற்கான தேவை, பழி வாங்கும் தேவையை விட அதிகமாக இருக்கிறது"

"நான் பார்த்த கசாச்சாவில் நிகோடெமஸ் என்றொருவன் குற்றவாளியாக நிறுத்தப்பட்டான். அவன் மீது குற்றம் சாட்ட ஒருவன் எழுந்தான் - "நிகோடெமஸ் டுட்ஸிக்களைத் தேடினான், வேட்டையாடினான், அவனே கொன்றானா என்பது எனக்குத் தெரியாது" என்றான். அதன் பின் அவன் நீதிபதிகளை நிகோடெமஸை மன்னித்து விடுமாறு வேண்டினான் - பொதுவில் குற்றம் சாட்டப்பட்டு நிற்பதே பழி வாங்கியதற்குச் சமம் என்பது போல"

"என்னால் அவர்களுக்கிடையே அதிகம் வித்தியாசம் சொல்ல முடியவில்லை. நிகோடெமஸ் ஒரு ஹுடு. அவன் மீது குற்றம் சாட்டி, அவனை மன்னிக்கக் கோரியவன் ஒரு டுட்ஸி போல் இருந்தான், ஆனால் தெளிவாகத் தெரியவில்லை. இரண்டு இனத்தவரும் நீதிபதிகளாக இருந்தனர். நாட்டில் பலர் கலப்பினமாகவும் இருந்தனர். பலருக்கு ஹுடு-டுட்ஸி வித்தியாசம் வர்க்க பேதமாக இருக்கிறது. கிகாலி நினைவகத்தில் ஒரு பலகையில் எந்த ஒரு ஹுடு பத்து பசுக்களுக்கு மேல் வைத்திருக்கிறானோ அவன் டுட்ஸி என்று கண்டிருந்தது."

"அன்று வேறொரு முக்கியமான செய்தி வெளியாகி இருந்தது - பத்து வருடங்களாக் வழக்கின்றி சிறையில் இருந்த சுமார் ஆயிரம் கைதிகள் விடுவிக்கப்பட்டு, இந்த சிற்றூரின் கசாச்சாவின் முன் நிறுத்தப்பட அனுப்பப் படப் போகின்றனர்....இவர்களை என்ன செய்வது என்ற கவலை கொடுமையான வறுமை, சீர்குலையும் கட்டமைப்புக்கள் ஆகியவை குறித்த கவலைகளோடு சேர்ந்து கொண்டுள்ளன. USAID-ஐச் சேர்ந்த எனது நணபரொருவர் சுமார் 90% ருவாண்டா மக்கள் குறைந்தபட்ச வேலையின்றி இருப்பதாகத் தெரிவித்தார்"

"கிகாலி நினைவத்தின் குழந்தகள் அறையில் படங்கள் உள்ளன: "டேவிட்: கால்பந்து விளையாடினான், சிரிக்கச் சிரிக்கப் பேசுவான், மருத்துவராக விரும்பினான், அரிவாளால் கொல்லப்பட்டான்', 'லிசா: கைக்குழந்தை, பிடித்த உணவு: தாய்ப்பால், பிடித்த மனிதர்: தாய், சுவரில் அடித்துக் கொலை'"

"சென்ற வாரம் கசாச்சா நீதிமன்றம் மேலும் விசாரணைகளுக்குப் பிறகு, நிகோடெமஸ் குற்றவாளியென்று கண்டு அவனை சிறைக்கு அனுப்பியது"

"ருவாண்டாவில் ஒரு பழமொழி உண்டு: 'கடவுள் பகல் பொழுதில் உலகெங்கும் வேலை செய்து விட்டு, இரவில் துயில ருவாண்டா வருகிறார்". அது உண்மையென்றால், ருவாண்டா நாட்டு மக்களும் ஒரு நாள் நிம்மதியாகத் தூங்க முடியும்"

Saturday, October 15, 2005

சுந்தர ராமசாமி (1931 - 2005)


"இந்த மண்ணில் உன்னதம் எதுவும் முளைக்காது, என்று ஒரு விமர்சனப் பார்வை உண்டு. சகல உன்னதங்களையும் இந்த மண்ணில் முளைக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டவன் நான். காலங்காலமாக தாழ்வுற்றுக் கிடந்த சமூகங்கள் மிகக் குறுகிய காலப்பொழுதில் அறிவின் கூர்மைகளோடும், கலைகளின் வீச்சுக்களோடும் சிலிர்த்துக் கொண்டு எழுந்து வந்திருக்கின்றன. இது போன்ற கலை எழுச்சிகளையும், அறிவுப் புரட்சிகளையும் சரித்திரங்கள் துல்லியமாகப் பதிவு செய்திருக்கின்றன. அங்கு பள்ளங்கள் நிரம்பி அவற்றின் மீது கோபுரங்கள் எழுந்திருக்கின்றன. உலகின் ஏதாவது ஒரு மூலையில் ஒரு உன்னதம் சாத்தியம் என்றால் அதே உன்னதத்தை இங்கும் எழுப்பிக் காட்ட முடியும். நமக்குக் கனவுகள் வேண்டும். அந்தக் கனவுகளை மண்ணில் இறக்க அசுர உழைப்பு வேண்டும். பரஸ்பரம் தொடை தட்டிக் கொள்வதை விட்டு, ஆக்கத்தை நோக்கி நகரும் மன விகாசம் வேண்டும். பொது எதிரிகளைக் கிழிக்கும் நெஞ்சுரம் வேண்டும். சவால் வேண்டும். தீர்க்கதரிசனம் வேண்டும். அப்போது இங்கும் பள்ளங்களை நிரப்ப முடியும். கலைக் கோபுரங்களையும் எழுப்ப முடியும்"

சுந்தர ராமசாமி, "விரிவும் ஆழமும் தேடி"

சுந்தர ராமசாமி பற்றிய வாழ்க்கைக் குறிப்பு

Wednesday, October 12, 2005

இந்தியாவைப் பற்றி கார்ல் மார்க்ஸ்

சில வாரங்களுக்கு முன்பு துக்ளக்கில் குருமூர்த்தி, கார்ல் மார்க்ஸ் 1853-ல் இந்தியா குறித்து எழுதிய கட்டுரையை மேற்கோள் காட்டி எழுதியிருந்தார். கூகிளில் துழாவிப் பிடித்த கட்டுரையின் மொழியைப் புரிந்து கொள்ள இரண்டு மூன்று முறை படிக்க வேண்டி இருந்தது.

நேரமும் பொறுமையும் இருந்தால், மூலக்கட்டுரையைப் படித்துப் புரிந்து கொள்வதே சிலாக்கியம். தமிழில் எனது சாராம்ச சுருக்க முயற்சி இங்கே:



கட்டுரையின் தொடக்கத்தில் இந்தியாவை அரசியல் ரீதியாக ஆசியாவின் இத்தாலி என்றும், சமூக ரீதியாக ஆசியாவின் அயர்லாந்து என்றும் வர்ணிக்கிறார். ஹிந்து மதம் முரண்பாடுகள் நிறைந்த மதம் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

பிறகு இந்தியாவில் ஆங்கிலேயரின் காலனியாதிக்கத்தைப் பற்றிப் பேசுகிறார். இக்கட்டுரை 1853-ல் எழுதப்பட்டதால், கிழக்கிந்தியக் கம்பெனியைப் பற்றியதாக இது இருக்கிறது (இன்னும் ராஜாங்கக் குடைக்குள் இந்தியா வரவில்லை). வரலாற்றில் அதற்கு முந்தியதாக இந்தியா எதிர்கொண்ட கஷ்டங்களையெல்லாம் விட வித்தியாசமானதாக காலனியாதிக்கம் கொண்டு வந்த கஷ்டங்கள் இருப்பதாக முன்வைக்கிறார். கிழக்கிந்தியக் கம்பெனியின் செயல்பாடு, இந்தோனீஷியாவில் (ஜாவா) டட்சுக்காரர்களின் செயல்பாடு போல் உள்ளதாகச் சொல்கிறார்.

இந்தியாவில் அதுவரை நிகழ்ந்த போர்கள், கலவரங்கள், படையெடுப்புகள், பஞ்சங்கள் ஆகியவை அந்நாட்டை மேலோட்டமாகவே பாதித்ததாகவும், பிரிட்டிஷார் கொண்டு வந்துள்ள மாற்றங்கள் அந்நாட்டை ஆழமாக பாதித்து வருவதாகவும் சொல்கிறார். இந்த பாதிப்புக்குக் காரணமாக இரண்டு முக்கியமான மாற்றங்களை முன்வைக்கிறார்:

1. விவசாயம், நீர்நிலைகள் சார்ந்த உள்கட்டமைப்புகளின் நிர்வாகம் - பிரிட்டிஷ் அரசாங்கங்கள் வருவதற்கு முன்பு சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த சிற்றரசுகளின் கட்டமைப்பு நிர்வாகம், பிரிட்டிஷ் அரசாங்க நிர்வாகத்தால் உதாசீனப்படுத்தப்பட்டது. இக்கட்டமைப்புகளுக்காக அரசாங்கங்களை நம்பி வந்திருந்த விவசாயிகள் இதனால் ஆதரவின்றி இருக்கிறார்கள், அதனால் அவர்களது தொழிலும் வருமானமும் அடிப்படையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

2. நெசவுத் தொழில்களை நசித்தல் - இதை இரண்டாவதும் முக்கியமான காரணமாகவும் முன்வைக்கிறார். ஐரோப்பாவில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த இந்தியத் துணிகளுக்கான சந்தையை முடக்கி, இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு 'Twist' எனப்படும் பஞ்சை ஏற்றுமதி செய்து, குறைந்த செலவில் நெய்து, அவர்களே அதை ஐரோப்பாவில் கொண்டு விற்பதன் மூலம், இந்தியாவில் பஞ்சு உற்பத்திக்கும், நெசவுத் தொழிலுக்கும் இடையிலான முக்கிய பந்தத்தை ஆங்கிலேயர் சிதைத்திருக்கிறார்கள். இதனால் பல இந்திய ஊர்களும், கிராமங்களும் பூண்டோடு அழிந்திருக்கின்றன.

இவ்விரண்டு காரணிகளாலும் - உதாசீனப்படுத்தும் அரசை மக்கள் சார்ந்திருத்தல், பரவி இருந்த தொழில் அமைப்புகள் மையமாகுதல் - இந்தியாவின் அடிப்படை சமூக அமைப்பான கிராமம் என்பது சிதைந்து வருகிறது - இதுவே ஆங்கிலேயர் இந்தியாவில் உருவாக்கி வரும் அடிப்படை மாற்றம். இந்த இடத்தில் இந்திய கிராமம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி ஒரு மேற்கோளுடன் அறிமுகம் செய்விக்கிறார். இக்கிராமங்களின் சீர்குலைவு ஆங்கிலேய கலெக்டராலோ, சிப்பாயாலோ வரவில்லை - மாறாக, ஆங்கிலேயர் கொண்டு வந்த பொருளாதார முறையால் - தறிகளை ஓரிடமும், நெசவுத் தொழிலை மற்றோரிடமுமாக வைக்கும் அமைப்பால் - வந்தது என்றும், ஆசியாவில் உண்டான முதல் சமூகப் புரட்சி இது என்றும் சொல்கிறார்.

ஒரு பண்டைய நாகரீகத்தின் சமுதாய அமைப்புகள் இப்படி நசிவது என்பது வருத்தத்தை, சஞ்சலத்தை அளிக்கக் கூடிய விஷயமென்றாலும், அவ்வமைப்புகளின் உண்மையான தன்மை என்னவாக இருந்தன என்பதை ஆராய வேண்டும் என்கிறார்.

1. மேம்போக்காகப் பார்க்கையில் ஆபத்தற்றவை போல் தோற்றமளித்தாலும், இவ்வுள்ளாட்சி அமைப்புகள், மனிதர்களை அவர்களது மனங்களை ஒரு சிறிய கூண்டிற்குள் அடைத்து, அவற்றின் உன்னத மேன்மைகளை அடைவதைத் தடுத்து வருகின்றன.

2. தமக்குள்ளேயே சுருங்கி இருந்து வெளி உலக நடப்புகளை வேடிக்கை மட்டும் பார்த்து, அங்கு நடக்கும் அநியாயங்களை கண்டு கொள்ளாமல் இருந்து, தாமே பாதிக்கப்பட்டாலும் எதிர்த்துப்போரிட வலிமையற்று இருக்கும் அமைப்புகளாகவே இவை இருந்து வந்திருக்கின்றன.

3. சாதி, அடிமைத்தனங்களினால் பீடிக்கப்பட்ட சமூகங்களாகவே இவை இருந்திருக்கின்றன.

4. மனிதனை இயற்கைக்குப் பணிந்திருக்கும்படி பணித்தும், அவன் சூழ்நிலைகளுக்கு அதிபதியாக இருப்பதை முடக்கியும் வைத்திருப்பதால், இயற்கையின் வடிவங்களை - அனுமான் என்னும் குரங்கு, பசு ஆகியவற்றை - மனிதன் வழிபடும் வக்கிரமான வழிமுறைகளுக்கு வழி வகுத்திருக்கின்றன

ஆக, இந்த சமூகப் புரட்சியானது மோசமான காரணங்களுக்காகவே உருவாகி இருக்கிறது என்றாலும், இப்புரட்சி இந்தியாவிற்கும், ஆசியாவிற்கும் நன்மையே பயக்கும் என்ற தொனியில் முடிக்கிறார்.

என்னுடைய சிந்தனைகள் சில:

1. அவரது புரட்சி பற்றிய கருத்தின் முக்கியத்தைக் கருத்தில் கொண்டு, ஹிந்து மதக் கடவுள்கள் பற்றிய அவரது கருத்துக்களை உதாசீனம் செய்து விடலாம் (அவை இந்திய சமூகத்தைப் பற்றிய அவரது கீழ்நோக்குப் பார்வையின் ஒரு பாகமாக இருந்தாலும்).

2. மதரீதியான மூடநம்பிக்கைகள், சாதிப்படிநிலை, அடிமைத் தொழில் இவற்றினால் கட்டமைக்கப்பட்ட சமூக அமைப்புகளினால் எந்த ஒரு நன்மையும் விளையாது, அவை அழியத் தகுந்தவை, எத்தகைய புரட்சியினாலும் அது நிகழ்ந்தாலும் பரவாயில்லை என்பதன் நியாயத்தை மறுக்க முடியாது. அவரது மொழியில் இழையோட்டமாய்த் தெரியும் ஒரு மேற்கத்திய மேன்மைவாதம் கொஞ்சம் எரிச்சலூட்டினாலும்.

3. இக்கட்டுரையைப் பிந்தொடர்ந்த வரலாற்றில், மார்க்ஸ் குறிப்பிட்டது போல இந்திய கிராமங்கள் அவ்வளவு சுலபமாக அழியவில்லை. அவை கிழக்கிந்தியக் கம்பெனியையும், ஆங்கிலேய ராஜாக்களையும், விடுதலைப் போராட்டத்தையும், சுதந்திரத்தையும் சீரணித்து விட்டு நின்றன. இன்று, உலகமயமாகும் பொருளாதாரம் என்னும் பெரும் சக்தியை எதிர்கொண்டு நிற்கின்றது.

4. நெசவுத்தொழில் பற்றிய அவரது கருத்துக்கள், கிராமப் பொருளாதாரத்திற்கும், மையப்படுத்தப்பட்ட பொருளாதாரத்திற்கும் இடையில் உள்ள முரண்பாடுகளைச் சுட்டும் கருத்துக்கள் ஆகியவற்றுக்கும், பிற்காலத்தில் காந்தி முன்வைத்த கிராமீயப் பொருளாதாரக் கூறுளுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் வியக்க வைக்கின்றன.

Monday, October 10, 2005

ரமேஷ் மகாதேவன்

நேற்று மதியம் ஃபுட்பால் போட்டியில் வாஷிங்டன் டென்வரிடம் உதைபட்டுக் கொண்டிருந்த போது, ரமேஷ் மகாதேவன் நினைவுக்கு வந்தார்.

முந்தியொரு காலத்தில் முருங்கை மரக்காட்டிற்குள் Soc.culture.tamil, Soc.culture.indian என்றெல்லாம் வலைக்குழுமங்கள் இருந்தன. அமெரிக்கா போய் பி.எச்டி செய்வதாய் வீட்டில் சொல்லி விட்டு இங்கு வந்து ஒ.பி விட்டுக் கொண்டிருந்த ஏராளமான மாணவர்களின் புகலிடம். பின் வரப்போகும் வலைப்பதிவுப் பின்னூட்ட சண்டைகளுக்கு முன்னோடிகளாக அங்கும் சில கூத்துகள் நிகழ்ந்தேறின.


அந்த சண்டைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு நின்று, ரமேஷ் மகாதேவன் என்ற மாணவர் சில அருமையான நகைச்சுவைக் கட்டுரைகளை எழுதினார். பெரும்பாலும் இந்தியாவிலிருந்து அமெரிக்கா வந்த மாணவர்களின் வாழ்வை 'அஜய் பல்வயந்தீஸ்வரன்' என்ற கற்பனைப் பாத்திரத்தின் மூலம் சித்தரிக்கும் இக்கட்டுரைகளின் தொகுப்பு வலையில் சுலபமாகக் கிடைக்கிறது. மாணவர்களின் வாழ்வைத் தவிர, பயணக் கட்டுரைகளும் (அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்களுக்கும் சென்று வந்தவர்), ஐ.ஐ.டி பற்றிய கட்டுரைகளும், இதர சில துக்கடாக் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். அமெரிக்காவில் சாம்பார் செய்வதை விளக்கும் ஒரு கட்டுரை, கர்நாடக இசையை எளிமையாக விளக்கும் ஒரு சிறு தொடர், ஸ்ரீதேவியைப் பற்றி ஒரு கட்டுரை என இவர் இயல்பான நகைச்சுவையுடனும், சரளமான நடையுடனும் எழுதியுள்ள கட்டுரைகள் சிலவற்றிலிருந்து சில மொழிபெயர்ப்பு மேற்கோள்கள் -

"இந்த நாட்டிற்கு வந்து இறங்கிய உடன், நம்மில் பலர் நாடோடிகளாக மாறி விடுகிறோம். வகுப்பு நண்பர்கள், விடுதி நண்பர்கள் என்று ஒரு கோஷ்டி திரட்டிக் கொண்டு, ஒரு பழைய காரை அடைத்துக் கொண்டு, நேர எல்லைகளைக் கடந்து பயணம் செய்கிறோம். வழியில், சில நகரங்கள், ஒன்றிரண்டு தேசியப் பூங்காக்கள் ஆகியவற்றை உள்வாங்கிக் கொண்டு, ஒரு புதிய டி-ஷர்ட் அறுவடையுடன் வீடு வந்து சேர்கிறோம். போகும் வழியில், ஒரு மலையடிவாரத்தில் ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருக்கையில், நம்மைப் போலவே ஒரு தேசி கும்பல், நம்மதைப் போலவே ஒரு காரில் வந்திறங்கும். நம்மில் ஐந்தில் நால்வர் அவர்களில் ஐந்தில் நால்வரை உதாசீனம் செய்தாலும், இங்கிருக்கும் ஐந்தாமவர் அங்கிருக்கும் ஐந்தாமவருக்கு 'ஹலோ' சொல்லி தேசி சகோதரத்துவத் தீ அணையாமல் பார்த்துக் கொள்வார்.'

- Discovering America - One more post on travel

"இது என்னை எப்போதுமே படுத்தியிருக்கிறது. சில வருஷங்களுக்கு முன்னால் எவெரெஸ்டின் உச்சியிலிருந்து நேரடி ஒளிபரப்பு செய்யப்போவதாக CBS தொலைக்காட்சியில் Dan Rather விளம்பரம் செய்தார். ஆனால், அந்த மலையேறு கோஷ்டியின் அமெரிக்கர்களால் மேலே சென்றடைய முடியாததால் ஒளிபரப்பு செய்ய முடியாமல் போனது. ரேதருக்கு ஒரே ஏமாற்றம். இருப்பினும், செய்தி அறிக்கையில், போனால் போகிறதென்று, "இந்தக் குழுவில் ஒரு ஷெர்பா உச்சியை அடைவதில் வெற்றி அடைந்தார். இதன் மூலம் எவெரெஸ்டை மூன்று முறை ஏறி முடித்த முதல் மனிதர் என்ற பெருமை பெற்றார்' என்று சொல்லி வைத்தார். என்ன கொடுமையடா...அந்த ஷெர்ப்பாவிற்கு ஒரு பெயர் கிடையாதா? இப்படிப்பட்ட சாதனை செய்தவரின் பெயர் கூட சொல்ல அருகதையில்லையா? இதற்குப் பிறகு வெகு நாட்களுக்கு ரேதரின் செய்திகளை நான் புறக்கணித்தேன்'

'ஐ.ஐ.டி மக்கள் பிற ஐ.ஐ.டி மக்களோடு உறவாடுவதையே விரும்புகின்றனர். நம்மில் எத்தனை பேருக்கு ஒரு இன்ஜினியர் அல்லாத, டாக்டர் அல்லாத ஒருவரைத் தெரியும்? ஒரு ஓவியர்? ஒரு வழக்கறிஞர்?'

'இமய மலைத்தொடரில் சில வாரங்கள் இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ளும் போது, அங்கிருக்கும் மனிதர்களோடு வாழ்வது என்பது கட்டாயமாகிறது. சும்மா தஸ்ஸு புஸ்ஸென்று பேசித் தப்பிக்க முடியாது, நகரப் பாசாங்குகளை கொஞ்சம் மூட்டை கட்டி வைக்க வேண்டும். உண்மையாக நட்புணர்வுடன் பழக வேண்டும், குறுகிய காலத்திற்கேனும் நண்பர்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும்; அவர்களை, அவர்கள் வாழ்வு முறைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் வீட்டின் மூலையில் நமது கம்பளத்தில் படுத்துக் கொள்வதில் சொகுசு ஒன்றுமில்லை தான், ஆனால் அம்மனிதர்களின் கருணை நமது கண்களைத் திறக்கும். ஏனெனில் ஒரு முகம் தெரியாத அன்னியன் எனது வீட்டில் உறங்க நான் என்றுமே அனுமதித்ததில்லை.'

- மூன்றுமே Hangin loose in Himalayas

'புதிய முகம்' படம் வந்த புதிதில், 'கண்ணுக்கு மை அழகு' பாடலைப் பகடி செய்து, அது போன்ற பாடலை எழுதுவது எவ்வளவு சுலபம் என்ற ரீதியில் எழுதப்பட்ட கட்டுரை:

'ஒரு பொருளை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் இயல்பு ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள், அது புதுமையாகவோ, கவித்துவமாகவோ இருக்க வேண்டும் என்ற கட்டாயமெல்லாம் கிடையாது. சும்மா ஒரு பொருள், ஒரு இயல்பு போது. பிறகு பொருளுக்கு இயல்பழகு - அவ்வளவுதான். உதாரணம்:

ரசத்துக்கு உப்பழகு, விஷத்துக்கு வார்னிங் அழகு,
பழத்துக்கு ஜூஸ் அழகு, கிழத்துக்குத் தடி அழகு
வயருக்கு கரண்ட் அழகு, வைகைக்கு கரை அழகு
வயிற்றுக்கு தொப்புள் அழகு, வைரத்துக்கு முத்தழகு'

இங்கே இந்த வைகை வரி ரொம்ப முக்கியம் - சில பழைய பஞ்சாங்கங்களை திருப்திப் படுத்த உதவும். கூடவே இந்த வைரத்துக்கு முத்தழகு என்பது போன்ற அர்த்தமில்லாத வரிகளை நுழைத்துக் கொள்ளலாம். யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள், கொஞ்சம் கவிதை மாதிரி, அர்த்தம் இருப்பது போல் இருந்தால் போதும். உண்மையில் அதில் ஒரு எழவு அர்த்தமும் இல்லை என்பது நமக்கு மட்டும் தான் தெரியும்'

- An Algorithmic Approach To Modern Tamil Verse

இவர் இப்பொழுது டென்வர் அருகே போல்டரில் வசித்து வருவதாகக் கேள்வி. எழுதுகிறாரா என்று தெரியவில்லை.

Thursday, October 06, 2005

ஒரு அமெரிக்க செய்தியின் பயணக்கதை

[அமெரிக்காவின் ஒரு அநாமதேய மூலையில் உருவாகும் ஒரு செய்தி, எப்படி வலுப்பெற்று, தெற்கு-கிழக்கு திசைகளில் நகர்ந்து, இந்தியப்பெருங்கடலில் மையம் கொண்டு, சென்னைக் கரையினை பெரும் சீற்றத்தோடு கடக்கிறது என்பதை விளக்கும் கற்பனைச் சித்திரம்]

காட்சி - ஒன்று

அமெரிக்காவில் ஒரு நெடுஞ்சாலை, காரில் கணவன், மனைவி.

கணவன்: கடங்காரன், எவ்வளவு மெதுவாப் போறான் பாரு, ரோட்டை block பண்ணிண்டு...

மனைவி: நல்ல கார் இல்ல இது?

கணவன்: ஔடி கார், சூப்பர் கார், ஓட்டத் தெரியாம ஓட்டறான்..

மனைவி: அப்பா! வழி கிடைச்சுது, முன்னாடி போங்க...

கணவன்: யார் ஓட்டறது பாரு...

மனைவி: தேசி மாதிரி இருக்கு!!

கணவன்: நிஜமாவா?

மனைவி: அப்டித்தான் இருந்ததுன்னு நினைக்கறேன்..

கணவன்: தேசி, ஔடி கார் வாங்கி இருக்கானா? ஆச்சரியமா இருக்கு...you know what...ரவி சாஸ்திரி fan-ஆ இருப்பான்...

காட்சி - இரண்டு

அமெரிக்காவில் ஒரு பார்ட்டி, மேற்கண்ட கணவனுடன் மற்றொருவர்.

மற்றொருவர்: காஸ் விலை பார்த்தீங்களா?

கணவன்: அநியாயம்! மூணேகால் டாலர், பேசாம hybrid கார் வாங்க வேண்டியது தான்...

மற்றொருவர்: அதெல்லாம் எங்க...நமக்கெல்லாம் civic-கும் corolla-வும் தான் லாயக்கு...

கணவன்: you know what...நேத்து ஒரு தேசி ஔடி கார் ஓட்டறதப் பார்த்தோம்!

மற்றொருவர்: ஆடி காரா? ஆச்சரியமா இருக்கு..you know what I think...அந்தாளு ரவி சாஸ்திரி ஃபேனோ என்னவோ, remember champions trophy?

கணவன்: you won't believe, that's exactly what I thought...

(சிரிக்கிறார்கள்)

காட்சி - மூன்று

இந்தியா, ஒரு பத்திரிக்கை ஆபீஸ்

ஆசிரியர்: ஒரு ரெண்டு பக்கம் ரொப்பணும், கட்டுர மேட்டர் ஏதாவது வச்சுரிக்கியா?

எழுத்தாளர்: அமெரிக்காவுல என் கஸின் இருக்கான், அவன் கிட்ட போன வாரம் ஃபோன்ல பேசிட்டிருந்தேன், அமெரிக்க இந்தியர்களின் நுகர்பொருள் கலாச்சாரம் பத்தி எழுதலாம்னு இருக்கேன்...என்ன சொல்றீங்க?

ஆசிரியர்: சூப்பர், நல்ல ஷார்ப்பா எழுதுங்க

மேற்கூறிய பத்திரிக்கை ஆபீஸ் எந்தப் பத்திரிக்கை என்பதைப் பொறுத்து, அடுத்த வாரத்தில் மூன்று சாத்தியங்கள்:

ஜூனியர் விகடன்:

அமெரிக்கா, அமெரிக்கா என்று வாயைப்பிளந்து கொண்டு போய் விட்டாலும், அங்கு சென்ற இந்தியர்கள் இன்னமும் தமது தாய்மண்ணை மறக்காமல் இருக்கிறார்கள் என்பது தான் நிஜம். உதாரணம் - இருபது வருடங்களுக்கு முன்பு ரவி சாஸ்திரி ஆஸ்திரேலியாவில் ஜெயித்த ஆடி கார் நினைவிருக்கிறதா? நம்மில் பலரே அதை மறந்து விட்டோம், ஆனால் அந்த நாட்களை பாசத்தோடு நினைவு கூறும் அமெரிக்க இந்தியர்கள் இன்று பெருமளவில் வாங்கிக் குவிப்பது ஆடி கார்களை தானாம்!

காலச்சுவடு:

மரபுவழிப்பட்ட நுகர்வோர் கலாசாரமானது ஊடக இயக்கிகளால் தொடர்ந்து மறுவரையறைகளுக்கு உட்படுத்தப் படுவது வெறுமனே ஒரு தடையற்ற சந்தையின் ஆரம்பகாலகட்டத்தின் குறைகளின் பிரதிபலிப்பாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதற்கு இன்று 'வளர்ச்சி' பெற்ற சந்தையான அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களும் தமது பால்ய வயது ஊடக பிம்பங்களின் பிடியில் இருப்பதே உதாரணம். அமெரிக்க இந்தியர்களிடையே இன்றும் ஆடி கார்கள் மிகப் பிரபலமாக இருப்பதற்கான காரணம் என்ன என்பதை உணரும் போது சில உண்மைகள் தெரிய வரலாம்.

தினமலர்:

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? இந்தியர்கள் எங்கு சென்றாலும் தனது கலாச்சார மரபுகளை மீற மாட்டார்கள் என்பதை நிரூபிக்கும் வண்ணமாக அமெரிக்காவிலிருந்து ஒரு ஆச்சரியமான செய்தி வந்திருக்கிறது!

அமெரிக்க இந்தியர்கள் ஆடி மாதத்தில் தான் கார்கள் உட்பட எல்லாப் புதுப் பொருள்களையும் வாங்குகிறார்களாம்!!

Wednesday, October 05, 2005

காதரீனாவும் கிருஷ்ணனும்

இந்த மாத காலச்சுவடு இதழில், அமெரிக்கா காதரீனாவை எதிர்கொண்டது பற்றி எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்.

பொதுவாக அவர் முன்வைக்கும் கருத்துக்கள் மூன்று:

1. தடையில்லாச் சந்தை அடையாளம் கண்டு கொண்டு ஒடுக்கிய ஏழை எளியவர்கள், மூன்றாம் உலக நாட்டுப் பிரஜைகளைப் போல், இயற்கைச் சீற்றங்களினால் அதிகம் பாதிக்கப்பட்டார்கள்.
2. பாதிக்கப்பட்ட இடங்களின் நிலைமையும், மீட்பு நடவடிக்கைகளின் அலங்கோலமும் அமெரிக்க மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினாலும், மைய அரசின் மெத்தனப் போக்கும் பாரபட்ச அணுகுமுறையும் தொடர்கின்றன.
3. அமெரிக்காவின் இந்நிலைக்கு ஒரு ஆதார காரணம், மக்கள் தீவுகளாக, சமூகப் பிணைப்புகள் இன்றி வாழ்வது. மற்றவை மாறாவிடினும், இது மாறக்கூடும்.

பொதுவான அளவில் இம்மூன்று கருத்துக்களுடனும் எனக்கு உடன்பாடுதான். குறிப்பாக, அமெரிக்கா வந்து வாழும் எந்த இந்தியப் பிரஜைக்கும் (குறிப்பாக பெற்றோர்/முதியவர்களுக்கு) தெளிவாகத் தெரியும் விஷயம் மூன்றாவது கருத்து. சார்புகளின்றி, தனி மனிதர்களாக, பெருமையுடன் வாழ்வது என்பது அமெரிக்க வாழ்வியல் கூறுகளில் ஒன்று. சாதாரண சூழ்நிலைகளில் சாதகமானதும், அசாதாரண சூழ்நிலையில் பாதகமானதுமான இவ்வியல்பு, 9/11 சமயத்தில் அண்டை வீட்டுக்காரர்கள் தீவிரவாதிகளா என்பதை அறிந்து கொள்ளத் தடையாக இருக்கிறது என்ற அர்த்தத்தில் பேசப்பட்டது. அப்பொழுதிலிருந்து இப்பொழுது வரை மாறாத இவ்விஷயம், இப்பொழுதிலிருந்து மாறும் என்பது கிருஷ்ணனின் நம்பிக்கை.

ஆயினும், கட்டுரையில் ஆங்காங்கே தெளிக்கப்பட்டிருக்கும் மேம்போக்கான 'பா.ராகவன்' தனமான வாக்கியங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

முதலில், கட்டுரையின் தலைப்பே, கட்டியம் கூறுகிறது. 'கத்ரீனா புயல்: அமெரிக்காவின் அவமானகரமான தோல்வி' என்பதில் தெரியும் schedenfreude சந்தோஷம், கட்டுரையிலும் அவ்வப்போது தெரிகிறது.

கட்டுரையின் ஆரம்பத்திலேயே, 'புயலைப் பற்றி தொலைக்காட்சி நிலையங்களும், பத்திரிக்கைகளும் ஓலமிட்டுக் கொண்டிருந்தாலும் அமெரிக்க மக்கள் அதை அதிகம் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை' என்று மேம்போக்காகக் கூறுகிறார். எந்த ஆதாரத்தில் என்று தெரியவில்லை. எனக்குத் தெரிந்த எல்லாரும் - இந்திய, அமெரிக்க, கறுப்பு, வெளுப்பு, சீனர் - இதைப் பற்றி கவலைப்பட்டார்கள், காசு கொடுத்தார்கள். எங்கள் அலுவலகத்தில், இதற்காக சிறப்பு விடுப்பு அளிக்கப்பட்டது (தன்னார்வத் தொண்டர்களுக்கு). அமெரிக்க மக்கள் கண்டு கொள்ளாத விஷயத்தைப் பற்றி தொலைக்காட்சி நிலையங்கள் பத்து நிமிஷத்திற்கு மேல் பேசாது என்பதுதான் இங்கு உண்மை.

இதன் பின்விளைவுகளை ஒரு கறுப்பு-வெளுப்பு பிரச்னையாக பல இடங்களில் சித்தரிக்கும் ஆசிரியர், புயலுக்கு முன்னால் பள்ளிப் பேருந்துகளை சரியாக உபயோகப்படுத்தாத நகர மேயர் ஒரு ஆப்பிரிக்க-அமெரிக்கர் என்பதைச் சொல்ல விட்டு விட்டார். இந்தத் தவிர்த்தல், இவ்விஷயம் அவரது கட்டுரையின் சாய்மானத்திற்கு எதிராக இருக்கும் என்பதினால் என்பது போல்தான் தோன்றுகிறது.

நடுவில் க்யூபாவிற்கு ஒரு ஷொட்டு வேறு. 2004-ல் நிகழ்ந்த புயலில் ஒருவர் கூட இறக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியவர், இதோ இப்பொழுது 2005-ல் டென்னிஸ் என்ற புயலில் 16 பேர் இறந்ததையும், $1.6 billion சேதம் விளைந்ததையும் மறந்து விட்டார். முதலில் க்யூபாவுடன் நியூ ஆர்லியன்சை ஒப்பிடுவதே தவறு. க்யூபா நம்மூர் நாகபட்டினம் மாதிரி, புயல் வராவிட்டால் தான் ஆச்சரியம். அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்திலும் மிகப் பெரும் புயல்கள் வெறும் பொருட்சேதத்தோடு போய்ச் சேர்ந்திருக்கின்றன. அதனுடன் க்யூபாவை ஒப்பிட்டால் சரியாக் இருக்கும், கூடவே, ஒவ்வொரு வருடமும் டயர் ட்யூபில் காற்றடித்துக் கொண்டு நூற்றுக்கணக்கான பேர் க்யூபாவிலிருந்து ஃப்ளோரிடாவிற்கு கடலில் மிதந்து வருவது ஏன் என்ற கேள்விக்கு பதில் அளித்தாலும் உபயோகமாக இருக்கும்.

காத்ரீனா போன்ற நிகழ்வுகளிலிருந்து படிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. But, sometimes, just sometimes, you can read a little too much into it.

Saturday, October 01, 2005

துயிலாத கண்கள்

தூக்கம் வரவில்லை. நேற்றிரவு விடிய விடிய அலுவலகத்தில் வேலை. பகலில் வீட்டிறைச்சலில் தூங்க முடியவில்லை. அப்படியும் இப்பொழுது (மணி பத்து) தூக்கம் வரவில்லை. உடம்பு தூங்கு என்கிறது. மனம் சாயந்திரம் ஏன் டீ குடித்தாய் என்று கேட்கிறது. யாரைக் கேட்கிறது?

ஆப்பிரிக்காவை நினைத்தால் கவலையாக இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு Constant Gardner படம் பார்த்தேன். இன்று Tears of Sun பார்த்தேன். படத்தின் முடிவில் கொஞ்சம் அமெரிக்கப் படைகளுக்காக எடுக்கப்பட்ட propaganda படம் போலிருந்தாலும், அதில் மக்கள் படும் அவதிகளைப் பார்க்கையில் அழுகை வந்தது. நோய், பஞ்சம், இனக்கலவரம் என்று வகை வாரியாக கஷ்டப்பட்டு செத்துக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது இந்தியாவைப் பற்றிக் கவலைப்படுவதை நினைத்தாலே குற்ற உணர்ச்சியாக இருக்கிறது.


சன் டிவி செய்திகளில் வானிலை அறிக்கை தவிர மீதியெல்லாம் வேஸ்ட். தயாநிதி மாறனைப் பார்க்கும் போதெல்லாம் எரிச்சலாக இருக்கிறது. தமிழ் முரசு பத்திரிக்கை வாங்கினால் பதினைந்து ரூபாய் ஐஸ்க்ரீம் கூப்பன் இலவசமாம். ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற வகையில் என்றாலும், கூப்பனின் மதிப்பு குறைந்தது ஐந்து - ஆறு ரூபாயாவது இருக்கும். பத்திரிக்கை விலை இரண்டு ரூபாய். கொசுறு செய்தி: இன்று (அக்டோபர் ஒன்று) உலக முதியோர் தினமாம்.

இன்று சிவாஜி கணேசன் பிறந்த நாள். அதற்கான விழாவில் பிரபு பேசும் போது, சிவாஜி வீட்டில் இல்லாத குறையை சிவாஜி ராவ் (ரஜினிகாந்த்) தீர்த்து வைப்பதாகக் கூறியது டூ மச். முன்பு சிவாஜி நடித்து வீட்டில் சோறு போட்டார், இன்று ரஜினிகாந்தின் சந்திரமுகி சோறு போடுகிறது என்று சொல்ல வருகிறாரா?

சின்ன வயசில் ஒரு முறை சிவாஜி பிறந்த நாளன்று அப்பாவுடன் அவர் வீட்டுக்குப் போய் வாழ்த்தி இருக்கிறேன். 'எந்த ஸ்கூல் போறீங்க?', 'ஷ்ரைன் வேளாங்கன்னி', 'ஓ, நல்ல ஸ்கூலாச்சே, காலம்பற வெள்ள டிரஸ் போட்டுக்கிட்டு பசங்கெல்லாம் போறதப் பார்த்திருக்கிறேனே...' அவ்வளவு தான் நினைவிருக்கிறது.

Speaking of Rajinikanth, நேற்று வீட்டில் ஒரு உரையாடல்:

"ஸ்ரீகாந்த், அப்பா சொன்னதக் கேட்டியா?"

"என்ன சொல்றார், நியூ ஆர்லியன்ஸ்ல வீடெல்லாம் செங்கல் சிமெண்டி வச்சுக் கட்டணும்னு மறுபடியும் ஆரம்பிக்கறாரா?'

(உச்சுக் கொட்டியவாறு) "அதில்ல, நம்ம கல்யாணத்துக்கு சமையல் பண்ணினவரை ஞாபகம் இருக்கா?"

"Are you kidding me, jet-lag-ல பண்ணிண்ட கல்யாணம், யாரு பொண்ணுன்னு கூட ஞாபகமில்ல..இதில சமையக்காரரா?"

"செல்லப்பான்னு ஒருத்தர், அவர் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா? ரீசண்டா ரஜினி பொண்ணு கல்யாணத்துக்கும் அவர்தானாம்!"

(சட்டென்று நிமிர்ந்து) "நிஜம்மாவா?"

"ஆமாம், அதுக்குன்னு ரொம்ப excite ஆகாத, அவர் பயங்கர பிஸி, நம்ம கல்யாணத்தில சும்மா வந்து ரசத்துக்கு தாளிச்சு கொட்டிட்டுப் போயிருப்பார்"

"who cares? நம்ம கல்யாணத்துல ரசம் பண்ணினவர் ரஜினி வீட்டு கல்யாணத்திலயும் ரசம் பண்ணி இருக்கார், இத வச்சு நான் எட்டூருக்கு அளப்பேன்..ஃபோன எடு..."

நாளைக்கு வாஷிங்டனுக்கும் சியாட்டிலுக்கும் ஃபுட்பால் மேட்ச். கண்டிப்பாக வாஷிங்டன் தோற்கும். எனது காரில் பறக்கும் வாஷிங்டன் அணிக் கொடியை கிண்டலடிக்க நண்பர்களுக்கு மற்றொரு வாய்ப்பு.

குழலி பதிவைப் படித்து விட்டு சின்னக்கருப்பன் கட்டுரையைப் படித்தேன். அவர் சொல்ல வந்த கருத்து சரியானதுதான் - when it comes to social values, both liberals and conservatives have parts to play in defining and redefining it - ஆனால் இதை கொஞ்சம் தத்து பித்தென்று சொல்லியிருக்கிறார். நடுவில் ஊடகங்கள், பெரியார், மனுநீதி என்று flame-baits வேறு. அவரது கட்டுரைகளே பொதுவாக இப்படித்தான். ஒரு contrarian கருத்தை கஷ்டப்பட்டு முன்வைக்கும். சில சமயம் ஜெயம், சில சமயம் அபஜெயம் என்பது par for the course.

தூக்கம் வரவில்லை, ஆனால் கை வலிக்கிறது.