<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Tuesday, October 25, 2005

அமெரிக்க சைவம் = அ.சைவம்

அமெரிக்காவில் சைவமாக இருப்பது என்பது சுலபமில்லை; ரொம்பவும் சிக்கனான விஷயம். எந்த உணவிலும் எதுவும் இருக்கலாம்; நாம் தான் நண்டு பார்த்து சாப்பிட வேண்டும்.

நான் வந்த புதிதில் எனது வீட்டிற்கும் கல்லூரிக்கும் நடு மத்தியில் ஒரு டாகோ பெல் இருந்தது. சப்பாத்தி நடுவில் சப்ஜி வைத்து சுருட்டிக் கொடுத்தது போல் இருக்கிறதென்று போகையில் ஒன்று வருகையில் ஒன்று என விளாசிக் கொண்டிருந்தேன். ஒரு நாள், அந்த சப்ஜி சரக்கையெல்லாம் தாளித்து எடுப்பது லார்டு என்ற மிருகக்கொழுப்பில் என்று சில நண்பர்கள் உளவறிந்து கண்டு பிடித்தனர். கெட்டது குடி. டாகோ பெல் போனால் எல்லாருக்கும் வாயுப் பிரச்னை மட்டும் தான் வரும், எனக்கு வால்யூ பிரச்னையும் வந்து விட்டது. அன்றிலிருந்து இன்று வரை இந்த விஷயத்தில் போராட்டம் தான்.

(சில வருடங்களுக்கு முன்பு டாகோபெல் திருந்தி விட்டார்கள் என்று கேள்விப்பட்டேன், யார் கண்டது?).

பொதுவாக அமெரிக்கர்களுக்கு எது சைவம், எது அசைவம் என்பதில் ஒரு மிகக் கடுமையான குழப்பம் இருக்கிறது. பேப்பரில் அட்வர்டைஸ்மண்ட் கொடுக்காத குறையாக நானும் எவ்வளவோ அமெரிக்கர்களிடம் எத்தனையோ விதங்களில் சொல்லிப் பார்த்து விட்டேன், இன்னமும் இவர்களுக்கு விளங்க மாட்டேன் என்கிறது.

அவர்கள்: இது மாமிசம் இல்லை, மீன் தான்...

நான்: (மனதுக்குள், "தத்தி, தத்தி!") மீனும் அசைவம் தானே...

அவர்கள்: சரி, உன்னைப் பொறுத்த வரையில் எது சைவம், எது அசைவம்...

இந்தக் கேள்விக்கு நான் பதில் சொன்ன ஒவ்வொரு முறைக்கும் யாராவது எனக்கு ஐந்து பைசா கொடுத்திருந்தால், சொத்து சேர்ந்து நான் இந்நேரம் இந்தியா திரும்பி இருப்பேன். கண்கள் இருப்பதெல்லாம் அசைவம், நரம்பு மண்டலம் இருந்தால் அசைவம், அம்மா-அப்பா இருந்தால் அசைவம், அசையும் உயிரெல்லாம் அசைவம் என்று பலவாறாக சொல்லிப் பார்த்தாலும் கடைசியில், "அப்போ பெப்பரோனி?" என்று கேட்பார்கள்.

(இதற்கு அடுத்தபடியாக வரும் "ஏன்" கேள்வியை கையாளுவது எளிது. கொஞ்சம் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு, "மத ரீதியான காரணங்களுக்காக" என்று சொன்னால் கப்சிப் என்று இருந்து விடுவார்கள்)

இந்தக் குழப்பம் காரணமாக, விவஸ்தையே இல்லாமல் கண்டா கண்டதையும் அசைவப்பண்டம் ஆக்கி விடுகிறார்கள். உருளைக்கிழங்கை நறுக்கி எண்ணையில் வறுக்க எதற்கு மாட்டுக் கொழுப்பு? கேவலம் பெப்பர்மிண்டுக்குள் கூட ஜெலாடின் என்று ஒரு குண்டு வைத்து விடுவார்கள். சைனீஸ் உணவகம் போய் டோஃபுவையும் மாமிசத்தையும் பார்த்தால் ஆறு வித்தியாசங்கள் இல்லை, அரை வித்தியாசம் கூடக் கண்டுபிடிக்க முடியாது.

நான் படும் பாட்டைப் பார்த்து ஒரு சமயத்தில் அலுவலக நண்பரொருவர் என்னை ஒரு சுத்த சைவ உணவகத்திற்கு அழைத்துச் சென்றார். அது ஒரு வினோதமான அனுபவம் - அந்த உணவகத்தில் எல்லாமே டோஃபு தான். ஆனால் அதை எல்லாவிதமான மாமிச உணவுகள் போலவும் தயாரித்திருப்பார்கள் - குணம், மணம் மட்டுமல்ல, பார்ப்பதற்கும் பிராணி போல் இருக்கும் உணவுகள். எதையாவது கொல்லாவிட்டாலும் பரவாயில்லை, கொன்றது போல் கற்பனையாவது செய்து கொள்ளாவிட்டால், தொண்டைக்குள் இறங்காது போலிருக்கிறது. வரும் வழியில், இதற்கு பதில் வக்கணையாக ஒரு நிஜ வாத்து ரோஸ்ட் சாப்பிட்டிருக்கலாம் என்று தோன்றியது.

இங்கிருக்கும் ஒரு நல்ல பழக்கம் - பலசரக்குக் கடைகளில் கிடைக்கும் பொருட்கள் ஒவ்வொன்றிலும் உள்ளிருக்கும் விஷயங்கள் (ingredients) என்ன என்ன என்பதை வெளியே எழுதி விட வேண்டும். அதை விழுந்து விழுந்து படிக்கும் ஒரே ஜென்மங்கள் என் போன்ற இந்தியர்கள் தான் என்று நினைக்கிறேன். பரவாயில்லை. இல்லாவிட்டால், வாங்குவது உசத்தியான பொருள் என்று நான் நினைத்துக் கொண்டிருக்க, அது மட்டனான பொருளாயிருந்து தொலைக்கும்.

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

22 Comments:

Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

no fish no meat no chicken no egg is equal to vegetarian

October 25, 2005 10:57 PM  
Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

பேசாமல் vegan who consumes dairy products like milk and cheese என்று சொல்லிவிடலாம்.

-மதி

October 25, 2005 11:03 PM  
Blogger மாதங்கி said...

உண்மைதான்; தூய சைவமாக - இருப்பது வெளிநாட்டில் ஒரு சவால்தான்

1. குழந்தை மிட்டாய்கள்- மார்ஷ்மால்லோ முதலியவற்றில் ஜெலாட்டின் சேர்க்கை-
இதில் விதிவிலக்காக சில நல்ல தயாரிப்பாளர்கள் பீப் ஜெலாட்டின் என்று எழுதி விடுவார்கள்- எனவே ஜெலாட்டின் இருப்பதெல்லாம் தடா-

2. சீஸ் பத்தி ஆராய்ச்சியே செய்யலாம், ஸ்டார்டர் -ரென்னட் என்று சிலரும் அதில்- ப்ரம் காப் என்றும் சில அதி நல்லவர்களும் போட்டுவிடுவார்கள்.

3. அனிமல் ப்ராடக்ஸ் என்ற வலையில் தேடி பார்த்து நான் அதிர்ந்து விட்டேன். இது இன்னது என்றில்லாமல்- நீங்கள் கூறியது போல தூய சைவ பழச்சாற்றில் ஏதோ கலக்கப்படுகிறது, லிப்ஸ்டிக் மட்டும் என்ன விதிவிலக்கு- மீன் செதில் சேராமல் லிப்ஸ்டிக் கிடையாது என்று தலையிலடித்து சத்தியம் செய்கிறார்கள்.
4. ஜப்பானில் உருளைச் சிப்ஸ் கணவர் வாங்கி வந்தார்; அதில் துக்கணூண்டு மீன் படத்தை ஒரு கோடியில் பார்த்துவிட்டு இது சரிவராது எதாவது ஜப்பான் நண்பரிடம் கேட்டுப்பார்த்ததில்- நான் சொன்னது உண்மையானது- அங்கு பாக்கெட்டில் எதுவும் ஆங்கிலத்தில் இருக்காதே

இதைப் பற்றி விவரமாக வலையில் ஆராய ஆசை. யாரும் பூலோகத்திலிருந்து நாடுகடத்த மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

October 25, 2005 11:12 PM  
Blogger ஜோ/Joe said...

இங்கு சிங்கப்பூரிலும் ,கீரை மற்றும் முட்டைகோஸ் போன்ற காய்கறிகளிலும் நெத்திலி கருவாடை தூவி விட்டிருப்பார்கள்.

October 25, 2005 11:15 PM  
Blogger துளசி கோபால் said...

இந்தக் குழப்பம் அநேகமா எல்லா வெளிநாட்டிலும் இருக்கு.

வெஜிசாண்ட்விச் கேட்டால், உள்ளே இருக்கும் மாமிசத்தை எடுத்துட்டுத் தர்றவங்ககிட்டே என்னன்னு சொல்லி முட்டிக்கிறது?

October 25, 2005 11:23 PM  
Blogger பரி (Pari) said...

ரொம்பவும் சிக்கனான விஷயம்.

நாம் தான் நண்டு பார்த்து சாப்பிட வேண்டும்.

வாங்குவது உசத்தியான பொருள் என்று நான் நினைத்துக் கொண்டிருக்க, அது மட்டனான பொருளாயிருந்து தொலைக்கும்.
>>>>
ரசித்தேன் :)

October 26, 2005 12:26 AM  
Blogger வானம்பாடி said...

நான் மிக ரசித்தேன் என்று சொல்ல நினைத்ததை பரி முன்பே சொல்லிவிட்டார். வழிமொழிகிறேன்.

October 26, 2005 2:23 AM  
Anonymous Anonymous said...

சேலட் சாப்பிட கற்றுக் கொள்ள வேண்டும். மாவு சத்து உணவுகளை குறைத்துவிட்டு, நார்சத்து அதிகமுள்ள உணவுகளை தினமும் சாப்பிட பழகிக் கொண்டால் சைவ உணவை மட்டும் சாப்பிடுவதில் குழப்பம் ஏதுமில்லை.

அமேரிக்காவில் 3 வகை சைவ உணவாளர்கள் எனக்கு தெரிந்து.

1. பால்,பாலாடை கட்டி,மோர்,தயிர் கூட சாப்பிடாத 100க்கு 100 .

2. பால் மட்டும் dairy,முட்டை மட்டும் சாப்பிடும் வகை.

3.மீன் மற்றும் கடலுணவு உண்பவர்கள், red meat எனப்படும் மாடு,ஆடு,பன்றி,மான்.. இறைச்சிகளை சாப்பிட மாட்டார்கள்.

இது ரொம்ப வருடங்களாக இருந்து வருவது.

-வாசன்

October 26, 2005 10:44 AM  
Blogger rv said...

நல்ல பதிவு ஸ்ரீகாந்த்

இதப் பத்தி எழுதணும் நானும் நினச்சுகிட்டிருந்தேன்.

ஒருமுறை ஸ்பெஷல் வெஜ் பீட்ஸான்னு சும்மா தலைப்ப மட்டும் பாத்துட்டு ஆர்டர் பண்ணிட்டேன். வந்து ரெண்டு வாய் உள்ள போனப்பறம் தான் தெரிஞ்சுது, அதுல ஸ்பெஷலே anchovies தான்னு. :)

October 26, 2005 11:05 AM  
Blogger Srikanth Meenakshi said...

ஆமாம், இந்த ஆஞ்சோவீஸ் பற்றி மறந்து விட்டேன், ஏனோ எனக்கு ஆஞ்சோவீஸ், அஸ்பாரகஸ், அவொகாடோ மூன்றிற்கும் இடையே மகேந்திர குழப்பம் உண்டு. மூன்றில் ஒன்று துஷ்ட பதார்த்தம் என்று மட்டும் தெரியும், ஆனால் கவனிக்காமல் விட்டு, எத்தனை ஜல புஷ்பங்களை சாப்பிட்டிருப்பேன் என்று கணக்கேயில்லை! :-)

October 26, 2005 11:17 AM  
Blogger துளசி கோபால் said...

//ஜல புஷ்பங்களை...??

இது நீர் வாழைக்காய் இல்லையா?

October 26, 2005 4:02 PM  
Blogger Srikanth Meenakshi said...

்துதத்
துளசி,

:-)

அதுவும் தான். வங்காளத்தில் ஜலபுஷ்பங்கள் என்று சொல்வார்கள் என்று கேள்வி...

October 26, 2005 4:34 PM  
Blogger b said...

பாம்பு திங்கிற ஊருக்குப் போனா நடுகண்டம் நமக்குன்னு உட்காரும் ஆளு நான்! எனவே இந்த சிக்கனான விஷயம், மட்டனான விஷயம் என்று பயப்படும் ஆளில்லை நான்! சற்றேறக்குறைய எல்லா ஜந்துக்களையும் ஒரு வாய் பார்த்தாகிவிட்டது.

October 26, 2005 8:25 PM  
Anonymous Anonymous said...

அத ஏன் கேக்கறீங்க,
supermarket-la yogurt வாங்கினா அதுலயும் gelatin, அதனால இந்தியன் ஸ்டோர்ல தான் பாத்து வாங்கறேன்.

இந்த natural flavor சமாச்சாரம் கொஞ்சம் tricky.
http://www.vegetarian-restaurants.net/OtherInfo/Vegetarian-Food-Alert-Newsletter.htm
இந்த வெள்ளகாரைங்க, வெஜிடேரியன்னு சொன்னா கேக்கற மொத கேள்வி, உங்களுக்கு protein எங்கேர்ந்து வருதுன்னு தான்.
சில பேர் வெஜிடேரியன்னு சொன்னாவே பெரிய hypocrite-ன்னு னினைக்கிறாங்க.

October 26, 2005 11:00 PM  
Blogger Ramya Nageswaran said...

Good, fun reading Srikanth!!! :-)

When I was employed in a US law firm (just a year out of India), they took me for a Christmas dinner. I had told them I am a vegetarian. They ordered something and before I ate (thank GOD!), I asked them what it was. The guy next to me says, 'don't worry. it is vegetarian. it is frog's legs." I jumped like the frog would have when it would have had its poor legs!!! I feigned stomach upset and just drank some juice and rushed back home!!

October 26, 2005 11:39 PM  
Blogger ஜோ/Joe said...

ரம்யாக்கா,
நல்ல வேடிக்கை தான் போங்க..

October 27, 2005 1:54 AM  
Blogger அன்பு said...

உங்கள் கவலையை... நல்ல வேடிக்கையா சொல்லிருக்கீங்க.
இங்கு சிங்கையிலும் இந்த சிரமமுண்டு... ஆலூ மட்டர் கேட்டால் ஆலூ மட்டன் கிடைக்கும். கீரையில் கூட கடுகுக்குப்பதில் நெத்திலி கருவாடு போட்டு தாளித்திருப்பார்கள். சற்றே சிரமம்தான்.

October 27, 2005 2:19 AM  
Blogger துளசி கோபால் said...

அன்பு,

அதுக்குத்தான் நான் 'கோமளாஸ்' பிடிச்சுவச்சிருக்கறது:-)))

October 27, 2005 2:39 AM  
Anonymous Anonymous said...

இது எல்லாம் பரவாயில்லை!
Delifrance - "vegitable soup" ல
"pork powder" போட்டுதான் தரானுக..
பாவிப் பய

October 27, 2005 2:57 AM  
Blogger அன்பு said...

துளசிக்கா,

கொமாளாஸ் எங்க அலுவலகம் பக்கம் இல்லையே.
நியூ பார்க் ஹோட்டலுக்கும், பெருமாள் கோவிலுக்கும் மத்தியிலேல்லா இருக்கு:)

October 27, 2005 3:40 AM  
Blogger Srikanth Meenakshi said...

Ramya,

That was funny, thanks for sharing!

If I list the number of times I have mistakenly eaten meat in this country, I would need a separate blog...

Just the other day, there was a co-worker who ordered an entire sword-fish right next to me, god it smelled. I *had* to turn away when he was actually eating the eyes!

Srikanth

October 27, 2005 12:32 PM  
Anonymous Anonymous said...

உங்கள் விஷயம் பரவாயில்லை. அவ்வப்போது சென்று ஓரிரு நாட்கள் தங்க நேரிடும் சீனாவில் படும் / பட்ட கஷ்டங்கள் கொடுமையிலும் கொடுமை.

வெஜிடேரியன் என்ற வார்த்தையே அங்கு கிடையாது அதற்கு அர்த்தமும் அவர்களுக்கு புரியாது.
சிக்கனான, மட்டனான விஷயங்களைக் கூட பாம்பு பல்லியின் உதவியின்றி அவர்களுக்கு சொல்ல, சாரி, செய்யத் தெரியாது

Srinivas Venkat

October 29, 2005 7:39 AM  

Post a Comment

<< Home