<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Saturday, February 11, 2006

அக்கரை மீது அக்கறை

"அப்புறம்...உங்க long term ப்ளான் என்ன?"

இந்தக் கேள்வி அமெரிக்காவாழ் இந்தியர்கள் பரஸ்பரம் கேட்டுக் கொள்ளும் கேள்விகளுள் பிரதானமானது. இந்தக் கேள்விக்கு அர்த்தம் நீங்கள் இந்தியா திரும்பிச் செல்ல ஏதாவது திட்டம் வைத்திருக்கிறீர்களா, இல்லை அமெரிக்காவோடு ஐக்கியமாகி விடுவதாய் உத்தேசமா என்பது. கிட்டத்தட்ட எல்லா இந்தியர்கள் மனதிலும் ஏதாவது ஒரு மூலையில் ஒட்டிக் கொண்டிருக்கும் இந்தக் கேள்விக்கான பதிலைப் பரிமாற்றம் செய்து கொள்வது என்பது இந்த ஊரில் பலருக்குப் பிடித்தமான postprandial pastime (வாழ்க GRE).

இந்தக் கேள்விக்கான பதிலுக்கென்று ஒரு ஃபார்முலா இருக்கிறது. புகழ்பெற்ற Aristocrats ஜோக் போல (படம் பார்க்காதீர்கள், கடி) - ஆரம்பமும் முடிவும் ஒன்றாக இருக்கும், நடுவில் மட்டும் சரக்கு மாறுபடும். பதிலின் முதல் வரி - "தெரியலீங்க...", கடைசி வரி - "So, பார்ப்போம்...". நடுவில் கற்பனாஸ்வரங்களாக, பச்சை அட்டை, சிட்டிசன்ஷிப், குழந்தைகள், கல்வி, காசு, வீடு, ஃபுட்பால் டீம் சூப்பர் பவுல் ஜெயிக்க வாய்ப்புகள் என்று பல விஷயங்கள் வரும். பல வருடங்களுக்கு முன்பு ஆர்.கே. நாராயணன் இந்தக் குடியேற்றத் தடுமாற்றத்தைப் பற்றி X+1 என்று ஒரு பிரபலமான கட்டுரை எழுதினார். அக்கட்டுரையில், இந்த திரிசங்கு ஜீவியர்கள் சதா சர்வ காலமும் அடுத்த வருடம் இந்தியா திரும்பப் போவதாக சொல்லிக் கொள்வார்கள் என்றும் ஆனால் அந்த அடுத்த வருடம் என்பது வரவே வராத ஒரு நிரந்தரமான எதிர்கால வருடம் என்றும் கூறியிருந்தார்.

ஆனால், இன்றைய இந்தியர்கள் இத்தகைய எளிமையான அல்ஜீப்ராவையெல்லாம் தாண்டிச் சென்று விட்டார்கள். சாதாரணமான X+1 கோட்பாடு ஒரு quadratic equation ஆக மாறி, மேலும் வளர்ந்து, வளர்ந்து இன்று ரொம்ப சிக்கலாகி விட்டது. சமீபத்தில் எனது நண்பர் ஒருவர் சொன்ன பதிலை கணித முறையில் மாற்றிய போது கீழ்க்கண்டவாறு வந்தது:


(இதை அவருக்கு அனுப்பி சரி பார்க்கச் சொன்ன போது ஃபார்முலாவில் i=0 என்று மாற்ற வேண்டும், மற்றபடி OK என்றார்)

ஆனாலும், சமீப சில வருடங்களாக இந்த விஷயத்தில் இந்தியர்களின் மன நிலையில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள் கண்கூடாகத் தெரிகிறது. ஒரு ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு கூட நிலைமை இப்படி இருந்தது:

"அட...ராமசந்திரன்! நீங்க ஊருக்குப் போகல?"

"என்னது?"

"போன வருஷம் தமிழ்ச் சங்கப் ப்ரொக்ராம்ல பார்த்த போது அடுத்த வாரம் பர்மனென்டா இந்தியா போறேன்னு சொன்னீங்களே..."

"ஓ, அதுவா...என்னாச்சு, அந்த வாரம் வீட்டுல எல்லாருக்கும் நல்ல ஜலதோஷம் வந்துடுத்து, அப்புறம், அடுத்த வாரம், சின்னதுக்கு ஸ்கூல் தொறந்தாச்சு, சரி அப்புறம் பார்த்துக்கலாம்னு...ஹிஹி..."

ஆனால், இப்பொழுது நிலைமை தலைகீழாக இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை யாராவது ஒருவர் இந்தியாவுக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள். யாருக்காவது வாய்ஸ் மெயில் விட்டு அவர் திரும்பிக் கூப்பிடவில்லை என்றால் ஒரு வேளை இந்தியாவுக்கு ஜூட் விட்டு விட்டாரா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. இன்று இந்தியர்கள் இரண்டு வகைப்படுகிறார்கள் - Return 2 India போன்ற வலைத்தளங்களை மேய்ந்து கொண்டிருப்பவர்கள் முதல் வகை; விமான நிலையத்தில் வண்டி கிளம்பக் காத்துக் கொண்டிருப்பவர்கள் இரண்டாவது வகை. இவர்களெல்லாம் இந்தியா சென்று அவர்களுடைய "ப்ழிட்டி மச்" ஆங்கிலத்தை அவிழ்த்து விட்டால் நாட்டின் கதி என்ன ஆகுமோ தெரியவில்லை.

என்னைப் பொறுத்த வரையில் எனக்கும் ஆசை இருக்கத் தான் செய்கிறது. ஆயினும் வாழ்க்கையில் இலவச இணைப்பாய் வந்து சேர்ந்திருக்கும் சில சிக்கல்களை முதலில் சரி செய்ய வேண்டியிருக்கிறது. அமெரிக்காவிற்கு வந்த முதல் இந்தியன் ஒரு சென்னைவாசி என்று சரித்திர ஆதாரம் இருப்பதாகச் சொல்வார்கள். போகிற போக்கைப் பார்த்தால் ஒரிரு வருடங்களில் என்னைத் தவிர எல்லா இந்தியர்களும் திரும்பிச் சென்று விடுவார்கள் என்று நினைக்கிறேன். அதற்குப் பிறகு விளக்கையெல்லாம் அணைத்து விட்டு நானும் கிளம்பி வந்து சேர்கிறேன். அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்த கடைசி இந்தியனும் ஒரு சென்னைவாசி என்ற பெருமையும் கிடைத்தது போலாயிற்று!


மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

3 Comments:

Blogger Santhosh said...

"ஓ, அதுவா...என்னாச்சு, அந்த வாரம் வீட்டுல எல்லாருக்கும் நல்ல ஜலதோஷம் வந்துடுத்து, அப்புறம், அடுத்த வாரம், சின்னதுக்கு ஸ்கூல் தொறந்தாச்சு, சரி அப்புறம் பார்த்துக்கலாம்னு...ஹிஹி..."
srikanth நல்ல பதிவு, இந்தியர்கள் மட்டும் இல்ல பல நாட்டு மக்களும் இதையே தான் செய்து வருகிறார்கள், அமெரிக்காவில் ஆராயிச்சி மற்றும் பணத்தின் காரணமாகத்தான் அனைவரும் இங்கு இருக்கிறார்கள் இப்பொழுது அனைவருக்கும் அவர்களின் சொந்த நாட்டில் இந்த வசதி கிடைக்க ஆரம்பித்து விட்டதால் அனைவரும் திரும்பி செல்கின்றனர்.

February 11, 2006 4:12 PM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்த கடைசி இந்தியனும் ஒரு சென்னைவாசி என்ற பெருமையும் கிடைத்தது போலாயிற்று!


I though you were planning to remain in USA as a living speciemen
of a Desi :)

February 11, 2006 5:08 PM  
Blogger GeronimoThrust said...

Annae,

Didn't know that you are inching closer to the BIG Decision..Glad that you have taken a look at this issue and offered your 2 cents..Still am wondering how Palladam panchayat will handle my "pretty much" American English when I return home..Quite scary, right?

A

February 17, 2006 11:23 AM  

Post a Comment

<< Home