<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Saturday, July 09, 2005

லண்டன் பற்றிய பத்ரியின் பதிவு குறித்து...

லண்டன் குண்டு வெடிப்புகள் குறித்த பத்ரியின் பதிவு முக்கியமானது. இன்றைய உலக அரசியல் சூழலில் நிலவும் ஒரு சிந்தனையை, சித்தாந்தத்தை encapsulate (தமிழ்?) செய்வது. நான் அவரது நன்கு எழுதப்பட்ட கட்டுரையோடு பெரும்பான்மையும் ஒத்துப் போனாலும் ஒரு முக்கிய விஷயத்தில் வேறுபடுவதால், இந்தப் பதிவை எழுதுகிறேன்.

பதிவின் இறுதியில் பத்ரி எழுதுகிறார்:

"இன்று லண்டனில் நூறு சாவுகள். இவர்கள் உண்மையிலேயே அப்பாவிகளா? பிளேர் போன்ற அரசியல்வாதிகளைத் தடுக்காத, நியாயமற்ற ஈராக் போரைத் தடுக்காத குற்றம் பிரிட்டனில் ஓட்டுப்போடும் வயதில் உள்ள அத்தனை பேர்களுக்கும் உண்டு."

இந்த சிந்தனைப் போக்கை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதை ஏற்றுக் கொண்டால் கீழ்காணும் கேள்விகள் எழுகின்றன:

1. குற்றத்தைத் தடுக்க முனைந்தவர்களும் குற்றத்திற்குப் பொறுப்பாவார்களா? ஈராக் மீது போர் தொடுத்ததற்கு அமெரிக்கக் குடிமகன்களான ஜார்ஜ் புஷ், நோம் சோம்ஸ்கி இருவருக்கும் பொறுப்பு உண்டு என்பது போல் அனர்த்தமாக சொல்ல வேண்டியிருக்கும்.

2. குற்றத்தின் பொறுப்பு நீர்த்துப் போய் விடுகிறது - எல்லாருமே பொறுப்பு என்று ஒரு பெரும் கூட்டத்தை நோக்கிக் கைகாண்பிப்பது, உண்மையிலேயே தவறு செய்தவர்கள் பொறுப்பிலிருந்து தப்பிக்கத் தான் வழி வகுக்கும்.

3. இதை ஏன் ஜனநாயக நாடுகளுக்கு மட்டும் என்று வரையறுக்க வேண்டும்? ஒரு பிரிட்டிஷ் குடிமகனுக்கு ப்ளேரின் செய்கையை நிறுத்துவது எந்த அளவிற்கு சாத்தியமோ, அதே அளவுக்கு, ஒரு சர்வாதிகாரியை வீழ்த்துவது ஒரு கொடுங்கோல் ஆட்சியின் குடிமகனுக்கு சாத்தியம். அப்படிச் செய்யாவிட்டால், அந்தக் கொடுங்கோல் ஆட்சியின் குற்றங்களுக்கு அந்நாட்டின் குடிமக்களும் பொறுப்பா?

ஒரு ட்ரெயின் தாறுமாறாகச் செலுத்தப்பட்டு தடம் புரண்டு விட்டால், அந்த வண்டியில் பயணம் செய்தவர் அனைவரும் பொறுப்பு என்று சொல்வது போல் உள்ளது இது.

இந்த வித்தியாசம் ஏன் முக்கியமென்றால், இது வேறு ஒரு கேள்விக்கு பதிலை மாற்றி அமைக்கிறது.

அதாவது, மக்கள் அனைவரும் குற்றவாளிகள் என்று கொண்டால், இவர்கள் செய்தது தவறு, அந்தத் தவறை தண்டிக்கும் விதத்தில் (குற்றம் புரிந்தவரைக் கொன்று) அவர்கள் செய்தது சரி என்ற தர்க்கவாதம் நிலை பெறுகிறது. மக்கள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல என்று கொண்டால், இவர்கள் செய்தது தவறு, இவர்கள் செய்தது போலவே செயல்பட்ட அவர்கள் செய்ததும் தவறு என்ற வாதம் நிறுவப் படுகிறது.

என்னைப் பொறுத்த வரையில்,

1. ஒரு நாட்டின் அரசாங்கத்தின் குற்றங்களுக்கு அந்நாட்டின் குடிமக்கள் அனைவரையும் பொறுப்பாக்க முடியாது என்றும்
2. இன்றைய உலக அரசியல் சூழலில், neo-con அரசாங்கங்கள், தீவிரவாதிகள் இருவரின் செயல்பாடுகளும் தவறு என்றும்

கொள்வதே சரியெனப்படுகிறது.

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

3 Comments:

Blogger rajkumar said...

நல்ல பதிவு

July 11, 2005 10:19 AM  
Blogger Badri Seshadri said...

ஸ்ரீகாந்த்: குற்றத்தை அனைவர் மீதும் பரவலாக்கி அதை நீர்த்துப் போக முனையவில்லை நான். என் நாடு என் எதிர்ப்புகளையும் மீறி மற்றொரு நாட்டின்மீதோ, அல்லது என் நாட்டின் மக்களின் மீதோ வன்முறையைக் கட்டவிழ்த்து அதன் பிரதிபலனாக எனக்கோ, என் உறவினர்களுக்கோ உயிராபத்து வந்தது என்றால், அப்பொழுது "நான் அப்பாவி. எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? இனி நான் சும்மா இருக்க மாட்டேன்" என்றெல்லாம் நான் வசனம் பேசமாட்டேன்.

என்மீது/ என் உறவினர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் எதனால் என்பது எனக்கு நன்கு தெரியும். அதனால் இந்தச் சமூகத்தின் ஓர் அங்கமாக, குற்றத்துக்கான என் பங்கையும் ஒப்புக்கொள்வேன். இதை மனிதாபிமானத்தோடுதான் கூறுகிறேன்.

இரயில் விபத்தையும் இதையும் ஒப்பிட முடியாது. தெரியாது செய்த தவறுகள் வேறு, தெரிந்தே செய்யும் தவறுகள் வேறு.

ஏன் ஜனநாயக நாடுகளுக்கு மட்டும்? அத்தகு நாடுகளில் வசிப்பவர்களுக்கு மட்டும்தான் எளிமையான முறையில் நாட்டின் செயல்திட்டங்களை, கொள்கைகளை மாற்றியமைக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. சதாம் ஹுசைன் போன்ற சர்வாதிகாரிகளின் ஆட்சியில் அத்தகு அதிகாரம் மக்களிடையே இல்லை.

இந்த ஒரு காரணத்தால்தான் நாம் அனைவருமே ஜனநாயக ஆட்சி முறை உலகெங்கிலும் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்?

முடிவாக... குற்றத்தைத் தடுக்க முனைந்தவர்களும் குற்றத்துக்குப் பொறுப்பாளிகள்தான். ஆனால் அவர்களது மனசாட்சி சற்றே அமைதி கொள்ளலாம். அவ்வளவே. நோம் சோம்ஸ்கியோ, ராபின் குக்கோ, ஜார்ஜ் மோன்பியாட்டோ - அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். அவர்களே இதை ஏற்றுக்கொள்வார்கள்.

பிரிட்டனில் ஈராக் போருக்கு எதிராகப் பேசியவர்கள் இப்பொழுது கூட்டமாக முன்வந்து பொதுமக்களிடம் நிலைமையை விளக்கி, இதுவரையில் தம் நாடு சென்றுள்ள பாதை எத்தனை தவறானது என்பதை உணர்த்த வேண்டும்.

July 11, 2005 10:19 AM  
Blogger Srikanth Meenakshi said...

பத்ரி, பின்னூட்டத்திற்கு நன்றி. பாதிக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் முன்வந்து 'நாங்கள் செய்த பிழைகளால்தான் நாங்கள் பாதிக்கப் படுகிறோம்' என்று தார்மீகப் பொறுப்பேற்று, தமது அரசாங்கத்தின் போக்கை மாற்ற முயல்வது ஒன்று. குறிப்பாக 'Guardian' போன்ற பத்திரிக்கைகளில் ஏற்கனவே இத்தகைய கட்டுரைகள் வரத்துவங்கி விட்டன.

அதைப் பாராட்ட முடியும் என்னால், ஒரு வேற்று நாட்டுக் குடிமகனால், மொத்த இங்கிலாந்து நோக்கியும் சுட்டு விரல் நீட்டி 'குற்றவாளிகள்' என்று பிரகடனம் செய்ய முடியவில்லை. இதற்கு அடுத்த அடி, அல்கொய்தா செய்தது சரிதான் என்று கூறி அவர்களைப் பாராட்டுவதுதான் என்று எனக்குத் தோன்றுவது தான் முக்கியக் காரணம் என்று நினைக்கிறேன்.

July 11, 2005 9:03 PM  

Post a Comment

<< Home