<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Thursday, April 20, 2006

மெஹர்தாத் ஹெம்மத்

வாஷிங்டனில் இன்று எழுபத்தி ஐந்து டிகிரி மிதமான வெய்யிலோடு கூடிய மிக அழகான நாள். இந்த அழகான நாளில், புதிதாய் பசுமை கண்டிருக்கும் மரங்களுக்கிடையே, ஒரு புல்வெளியில், சில மணிநேரங்களுக்கு முன்பு மெஹர்தாத் ஹெம்மத்தைப் புதைத்தோம்.


நேற்று காலை இறந்து போன மெஹர்தாத் என்னுடைய அலுவலக நண்பன். ஈரானிலிருந்து குடி பெயர்ந்தவன்; ஷியா வகுப்பைச் சார்ந்தவன். அலுவலகத்தில் ஒரு பெரிய திட்டத்தில், இரு சிறு உப திட்டங்களில் நாங்கள் இருவரும் தொழில் நுட்பத் தலைமைப் பொறுப்பிலிருந்தோம். இந்த இரு சிஸ்டங்களும் ஒன்றோடொன்று இயைந்து வேலை செய்ய வேண்டியவை. ஆதலால் எனது குழுவோடு நானும், அவனது குழுவோடு அவனும் வேலை செய்ததை விட நாங்கள் இருவரும் சேர்ந்து வேலை செய்த நேரம் அதிகம். அதிர்ந்து பேசத் தெரியாதவன் - ஜெண்டில் மேன் என்பதற்கு அர்த்தமாக இருப்பான். சில சமயங்கள் மிகப் பொறுமையாக, மிக நிதானமாக அவன் வேலை செய்யும் விதம் எனக்கு கொஞ்சம் கடுப்பாகக் கூட இருந்திருக்கிறது. எதையுமே அவசர அவசரமாகச் செய்து பழக்கப்பட்ட என்னிடம் வெளிப்படையாக எதுவும் சொல்லாமல், அவன் செயல்படும் விதம் மூலமாகவே என்னை நிதானப்படுத்தியிருக்கிறான்.

பேச்சிலும் அப்படியே - அவனிடம் பேசும் போது அவனைப் போலத்தான் பேச முடியும். ஏனெனில், நாம் எப்படிப் பேசினாலும், அவன் அதிராமல் வார்த்தைகளை யோசித்து, அளந்து பேசுவான். ஏனோ தெரியாது, ஓரிரு நிமிடங்களில் நானும் அப்படியே பேச ஆரம்பித்து விடுவேன். எங்கள் இரு சிஸ்டங்களூம் இணைந்து செயல்பட வேண்டியிருந்ததால், அந்த இணைப்பில் ஏதேனும் கோளாறு நேர்ந்தால், இருவருக்குமே அடுத்த சிஸ்டத்தின் மீது தான் முதலில் சந்தேகம் வரும் - இது நம்மளவில் நன்கு பரிசோதித்த செயல்பாடுதானே என்று. இந்தக் கோளாறை யார் ஆராய்வது என்பதைப் பற்றி மிகவும் சம்பிரதாயமாக வாதாடுவோம். ஒருவரை ஒருவர் மிஞ்சும் அடக்கத்துடனும் பவ்யத்துடனும் மற்றவரைக் குறை சொல்வோம். பரிசோதனைக் குழுவில் இருக்கும் ஒருவர் ஒரு முறை நாங்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கையில் 'பார், இங்கிலாந்து நாட்டு அம்பாசிடரும் ஸ்வீடன் நாட்டு அம்பாசிடரும் பேசிக் கொள்கிறார்கள்...இவர்கள் தீவிரமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் நம்புவார்களா?' என்று கேலி செய்திருக்கிறார்.

சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னால் அவனுக்கு சுவாசப்பையில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நாற்பது வயதாகிறது, வாழ்நாளில் சிகரெட் தொட்டதில்லை, குடும்ப வரலாற்றிலும் இவ்வாறு நேர்ந்ததில்லை. இந்தப் புற்று நோய் மெல்ல மெல்ல இடுப்பு, எலும்புகள், பின் மூளை எனப்பரவியது. தீவிரமான கீமோ தெரபியில் அவன் பட்ட வேதனைகள் நேற்று காலை முடிவுக்கு வந்தன.

நோய் கண்டுபிடிக்கப்பட்டதும் அவனுடன் தொலைபேசியில் பேசினேன். நம்பிக்கையோடு இருந்தான். கான்சரை வென்றவர்கள் இருக்கிறார்கள், முடியும் என்ற ரீதியில் பேசினோம். அதற்குப் பிறகு நண்பர்கள் சிலர் அவனை வீட்டில் காணச்சென்ற ஒவ்வொரு முறையும் எனக்கு வேறு ஏதோ வேலை அமைந்து விட்டது. அந்த வேலைகள் எல்லாம் மிகச் சிறியனவாக இப்போது தெரிகின்றன.

நேற்று காலை வேலைக்குப் போன போது அவன் இறந்து விட்ட செய்தி தெரிந்திருக்கவில்லை. மெஹர்தாத்தின் மேலாளருடன் லிஃப்டில் சேர்ந்து பயணம் செய்தேன். அப்போது அவரிடம், 'அவன் படும் துன்பம் கேட்பதற்கே கொடுமையாக இருக்கிறது. சீக்கிரம் அவை ஒரு முடிவுக்கு வந்தால் தேவலை' என்று சொன்னேன். இன்று அவரை மீண்டும் கல்லறை அருகில் பார்த்தேன். 'நான் நேற்று சொன்னதற்கு அர்த்தம் இது இல்லை என்று உங்களுக்குத் தெரியுமல்லவா?' என்றேன்.

உடல் ஒரு வெள்ளைத்துணியில் சுற்றப்பட்டிருந்தது. அதை இருவர் மெல்ல குழியில் இறக்கினார்கள். சுற்றியிருந்த பலர் பெருங்குரலில் அழத் துவங்கினார்கள். மெஹர்தாத்தின் மனைவியும் இரு சிறு குழந்தைகளூம் (ஒரு சிறுவன், ஒரு சிறுமி) நின்று கொண்டிருந்தனர். சிறுமிக்கு விவரம் தெரியாத வயது, அம்மாவுடன் ஒண்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தது. சிறுவன் கண்களில் கொஞ்சம் கண்ணீர். யாரோ அவனுக்கு கொஞ்சம் ஜூஸ் கொடுத்தார்கள். மெஹர்தாத்தின் மனைவி அழாமல் இறுக்கமாக நின்று கொண்டிருந்தார். ஒரு வயதான மாது அவரிடம் போய் 'அழு, அழுதால் உனக்கு நல்லது' என்று சொன்னார்.

அவர் திரும்பி, 'நான் நிரந்தரமாய் அழுது கொண்டே தானே இருந்திருக்கிறேன்' (I have been crying forever) என்றார்.

என்ன ஆறுதல் சொல்ல முடியும் அவருக்கு?

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

3 Comments:

Blogger Boston Bala said...

I had been meaning to call my ex-colleague who recently had an operation. A reminder to connect.

April 21, 2006 1:36 PM  
Blogger GeronimoThrust said...

Annae,
Sorry to hear about this terrible loss of your work/teammate..It must be very hard on you..Hope all of you - you& your colleagues as well as his family - find your way back to normalcy soon, though it will be hard path to tread..My heartfelt condolences to you for the loss..

A

Mun pin ariyaadha enakkae manasu kanathu ponadhu indha seithiyai paditha piragu.. Ungalin mana nilai ennavaaga irukkum endru karpanai kooda seidhu paarka mudiyavillai..Especially, when you quoted his wife saying, "I have been crying forever" felt very sad..It must have been very difficult for you to stand there and watch it all happen..Andha pennukku vazhhkai enna vidai solla pogiradhu..May the heavens be with Mehardad..

April 24, 2006 3:52 PM  
Blogger Srikanth Meenakshi said...

Thanks, Andy...

April 24, 2006 4:50 PM  

Post a Comment

<< Home